செவ்வாய், 25 மார்ச், 2014

திருமணம்-பழ.வெள்ளைச்சாமி

திருமணம்

காதல் என்பது
உறவாகும் போது
உண்மை மறைந்து போகும்
உண்மை என்பது
மறையும் போது
அது
உடைமையாகும்!

உடைமையான ஒன்று
அடிமையாகும்!

அடிமை வாழ்வு
எப்படி
அன்பைச் சொல்லும்!

திருமணம்
குடும்பத்திற்கு அடித்தளம்!
குடும்பம் பிரிவினைக்கு அடித்தளம்!

திருமணம்
தனிச்சொத்து
தந்த குழந்தை!

திருமணம்
ஒரு மன மானதை உடைத்து
காதலுக்குக்
கல்லறை கட்டியது!

காதலில் கரைந்து போன
'நான்'க்கு உயிர் கொடுத்து
ஆணவத்திற்கும்
அகங்காரத்திற்கும்
ஆசைக்கும்
அடித் தளமானது.
அன்பால் மலர்ந்த
ஆணையும் பெண்ணையும்
அடிமையாக்கியது

ஆணையும் பெண்னையும்
வேறு வேறாக்கி
வேற்றுமைக்கு வித்திட்டது.

திருமணம்
குடும்பம் என்ற எல்லை வகுத்து
உலகில்
எல்லைக் கோடுகள்
தோன்றக் காரணமாகி
எல்லை யற்ற
இன்னல் களுக்கு
வழி வகுத்தது

அனைத்து உயிர்களுக்கும்
அன்பு செலுத்தவேண்டிய
மனிதனைக்
குடும்பச் சொத்தாக்கி
அன்பை அபூர்வ மாக்கியது.

பெண்ணின்
ஏன்
ஆணின்
சுதந்திரத்தைப் பறித்து
சோதனைக்கு உட்படுத்தி
வரைவின் மகளிர்க்கு
வழி வகுத்துக் கொடுத்தது.

திருமணம்
இயற்கைக்கு எதிரானது

அழகுக்கு எதிரானது

அன்புக்கு எதிரானது

ஆனந்தத்திற்கு எதிரானது

ஏன்
ஆண்டவனுக்கே எதிரானது

அது
பற்றுக்கு வித்திட்டு
அன்புக்குக் கல்லறை கட்டியது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக