செவ்வாய், 15 மே, 2018

நோயின் கழிவே நோய்க்கு மருந்து நிறைவுப்பகுதி மேஜர் தி.சா.இராஜூ


நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 4
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 5
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 6

       நிறைவுப்பகுதி                                    -7-

நோய்க் கழிவுப் பொருட்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் பல சிந்தனையாளர்களை ஊக்குவித்துள்ளது.  பல கேள்விகளும் ஐயப்பாடுகளும் எழுப்பியுள்ளார்கள்.  கடந்த கால் நூற்றாண்டாக நான் மருத்துவப் பணிபுரிந்து வருகிறேன்.  ஆனால் இந்த மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றவுமில்லை.  எவரும் வலியுறுத்தவும் இல்லை என்று ஓர் அன்பர் எழுதியிருக்கிறார்.
 இது மருத்துவ இயக்கத்திற்கு ஒரு பலவீனம், நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் கலந்துரையாடவும் வேண்டும்.  இவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்டகருத்துக்கள் மனித சமுதாயத்திற்குச் சிறந்த பலனைத் தரும்.
எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார்.  அவர் ஒரு நல்ல மனிதர், மருத்துவர், அடிப்படையில் ஒரு மருத்துவ நல்லவராக, சமுதாயத்திற்குத் தொண்டு புரிய வேண்டுமென்ற ஆர்வமுடையவராக இருக்க வேண்டும்.  இதை என் ஆசான் வலியுறுத்துவார்.  சமுதாயத்திற்கு நன்மை புரிய வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை உடையவர்களையே அவர் தமது அணுக்கத் தொண்டர்களாகத் தேர்ந்தெடுத்தார்.  பொருள் ஈட்டலாம் அதில் தவறு இல்லை.  ஆனால் அடிப்படைத் தகுதி தொண்டுணர்ச்சி, மனித நேயம்.

நாம் குறிப்பிட்ட நண்பர் ஒரு சித்த மருத்துவர்.  எப்போதும் மருந்து குறித்த சிந்தனையிலேயே வாழ்பவர்.  வீதியில் நடக்கும்போது கூட தெருவோரத்தில் முளைத்திருக்கும் செடி, பூண்டு அகியவற்றை எடுத்து அவற்றின் மருத்துவக் குணங்களை விளக்குவார்.  பிறருக்கு மருத்துவச் செய்திகளைத் தெரிவிப்பதில் அவர் இயற்கையிலேயே பேரார்வம் உடையவர்.
நோய்க் கழிவுப் பொருள்களைப் பற்றி அவரிடம் உரையாடினேன்.  சித்த மருத்துவம் இந்தத் தத்துவம் குறித்து என்ன கூறுகிறது என்பது என் வினா.  அவர் தமது அண்மையக் காலத்து அனுபவத்தை கூறினார்.  உதக மண்டலத்தில் பல ஆதிக் குடிகள் வசிக்கிறார்கள்.  அவர்கள் தற்போதும் கூண்டு போன்ற குடில்களிலேயே தங்கியிருக்கிறார்கள் என்றாலும் அவை தூய்மையாக இருக்கும்.  அங்குள்ள மலைப் பகுதிகளில் பல மருந்துச் செடிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.  அவைகளைச் சேகரித்து மருந்து தயாரிக்கும் பொருட்டு அங்கு சென்றேன்.

மருந்திற்குரிய செடியின் வேர் எந்தத் திசையில் ஓடியிருக்கும்.  அதை எந்தத் திதியில், மண்ணிலிருந்து பெயர்க்க வேண்டும், சிறந்த ஓரை எது என்று கூட மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.  பிறகு அவற்றைக் கிள்ளிக் கழுவி மண்சட்டியில் இட வேண்டும்.  அவற்றை எந்த விறகு கொண்டு சூடேற்ற வேண்டும்.  எத்தனை நேரம் அடுப்பில் வைக்க வேண்டும் என்பது கூடக் குறிப்பிடப்பட்டுள்ளது.  உலோகப் பாத்திரங்களை விட மண் கலயம், கற்சட்டி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும் என்று நூல்கள் தெளிவாக்குகின்றன.  மத்து, கரண்டி, அகப்பை ஆகியவை மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் விதி.
கடைகளில் விற்கப்படும் சித்த மருந்துகள் இந்த வகையில் தயாரிக்கப்படுகின்றனவா? என்பது எனது அடுத்தக் கேள்வி.
இல்லை, அதனல்தான் அவை முழுப் பயனையும் அளிப்பதில்லை.  மருந்துகளைத் தயாரிப்பதற்காக மலை மேலுள்ள முதியவர் ஒருவரை அணுகினேன்.  அவர் எனக்கு உதவி செய்ய முன் வந்தார்.  அவர் படகர் இனத்தைச் சேர்ந்தவர்.  தமது உறவினர்களிடம் அவர் படகர் மொழியிலேயே பேசினார்.  தமிழ் மொழியிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது.  ஒரு மரப்பெட்டியில் மருத்துவச் சுவடிகளை அடுக்கி வைத்திருந்தார்.  அவர் அவற்றை நோய் வாரியாகப் பிரித்து வைத்திருந்த முறை சிறப்பாக இருந்தது.

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் விடை தரவில்லை.  அது நோய்க் கழிவுப் பொருட்களைப் பற்றியது . . .

என் படக இன நண்பர் ஒரு தகவலைத் தெரிவித்தார்.  நாங்கள் இயற்கையுடன் ஒத்து வாழ்கிறோம்.  பல வேளைகளில் விலங்குகனால் தாக்கப்படுவோம்.  நச்சுப் பிராணிகளின் தீண்டலும் இருக்கும்.  இவற்றுக்கு மாற்றாக நாங்கள் அதிகம் பயன்படுத்துவது சுண்ணாம்பு, வெல்லம், மண் துகள் . . . நீண்ட நாள் ஆறாத புண்ணாக இருந்தால் நாங்கள் பயன்படுத்துவது தீட்டுத் துணி.  அதற்கு மிஞ்சிய மருந்தே கிடையாது.

Image result for menses

எனக்குச் சிவ வாக்கியர் நினைவு வந்தார்.
றையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே? --049


தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள் 
தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.   
--050

தூமை தூமை என்கிறீர்,
தூமையைப் பழிக்கிறீர் . . . (தூமை - தூய்மை என்ற சொல்லின் திரிபு) அவருக்கு முன்பு திருமூலரும் இந்தச் செய்தியைக் கூறியிருக்கிறார்.  எல்லையற்ற ஆற்றலுடைய இந்த மனித உயிரே அந்தத் திரவத்தில்தான் உருப்பெறுகிறது.  ஒன்பது மாதம் வளர்ந்து இறுதியில் உயிருள்ள உடலாக வெளிப்படுகிறது.
இதற்கு மருத்துவ ஆதாரம்?
என் படக நண்பர் கூறினார்.  அகத்தியர், புலிப்பாணி, போகர், தேரையர் ஆகியோருடைய எல்லலச் சுவடிகளிலும் இதைத் தேடிப் பார்த்தேன்.  பெயரே குறிப்பிடாத ஒரு துணுக்கில் இந்தத் தகவல் இருந்தது.  அந்தப் பெருந்தகையரில் ஒருவர் இந்தச் செய்தியைச் சொல்லியிருக்க வேண்டும்.  அந்த விவரம் ஏதும் தெரியாமலேயே இதை எங்கள் இனத்தவர் வழிவழியாகப் பின்பற்றுகிறார்கள்.
நான் வியப்புற்று நின்றேன்.  வியர்வை, சிறுநீர், சளி, மலம், சீழ் போலவே இதுவும் ஓர் இயற்கையான கழிவு.  மற்ற கழிவுகளுக்கு இருப்பது போல் இதற்கும் சிறப்பான தன்மைகள் இருக்கத்தானே வேண்டும்?

ஒவ்வொரு திங்களும் ஏற்படும் இந்த இயற்கை நிகழ்ச்சியை எப்படிக் கொச்சைப்படுத்தி விடுகிறோம்?  அந்த மங்கையர் ஏதோ இழிவான பிராணி என்று கருதி விலக்கி வைக்கிறோம்.  நெருக்கடியான குடியிருப்புகளில் இதன் பொருட்டு ஒரு கூண்டே அமைத்திருப்பார்கள்.  அதற்குள் விலக்கான பெண்ணை அடைத்து வைத்திருப்பார்கள்.

இந்த நிகழ்வின்போது பெண்களின் உடற்கூற்றில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.  அவர்களுடைய உடல் சோர்வடைந்திருக்கும்.  அப்போது அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமே.  குளிர்ந்த நீர், வெளிப்போக்கைத் தடை செய்யும் என்ற காரணத்திற்காகவே அவர்களைக் குளிக்க வேண்டாம் என்று பரிவுகள் செய்வதுண்டு.

பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக உழைக்கிறார்கள்.  கடினமான உடற்பயிற்சிகளிலும், போட்டிகளிலும் கலந்து கொள்கிறார்கள்.  இந்த நிலையில் அவர்களை ஒதுக்கி இழிந்த பிராணிகளைப் போல் நடத்துவது எந்த வகையில் நியாயம்?  நமது மருத்துவம் இதை ஓர்ந்து செயல்பட வேண்டும்.

இந்த நாட்களில் வழிபாடு செய்வது கூட ஏற்புடையதன்று என்பது ஒரு பண்டையக் கோட்பாடு.  அந்த நிலையில் இருந்த பாஞ்சாலியின் துணைக்கு இறைவனே வந்தான் என்பது வியாசரின் கூற்று.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் 
மெய்ப் பொருள் காண்பது மட்டும்தான் அறிவு.

                                                                         -
பால்வினை நோய்களைச் சீராக்க உதவும்  இரு கழிவுப் பொருட்கள் ஹோமியோபதி முறையில் உள.  ஒன்று மெடோரினம்.  மற்றது சிஃபிலினம்.  ஒரு நோயை மேகவெட்டை எறும், மற்றதை மேகக் கிரந்தி என்றும் தமிழில் கூறுவது வழக்கம்.  மேகம் என்றாலே நோய் என்பது பொருள்.  (எடு) மது மேகம்- இனிப்பு நோய்.  நமக்குப் பெயர் முக்கியமன்று.  குறிகளை அனுசரித்து மருந்துகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அந்தக் குறிகளின் தொகுப்பை என்ன பெயரிட்டு அழைக்கிறார்கள் என்று அறிவதும் நல்லது.  நாட்டு வழக்கில் இதைப் பொம்பளைச் சீக்கு என்று கூறுவதுண்டு.  நோய்வாய்ப்பட்ட பெண்களுடன் உறவு கொண்டதன் விளைவாக இது ஆணுக்கும் தொற்றுகிறது.  நோயுள்ள ஆண் மூலமும் பெண்களுக்கு வியாதி பரவ வாய்ப்புண்டு.  ஒட்டு மொத்தமாக மனித சமுதாயம் அஞ்சும்.  அருவெறுக்கும் சுகவீனம் இது.

மேக வெட்டையில் விளைவுகள் எவ்வாறிருக்கும்?  அதற்கு மருந்தாகும் மெடோரினம் என்ற நோய்க் கழிவுப் பொருளைப் பற்றி விரிவாகவே சிந்தித்தோம்.  மேகக் கிரந்தியைச் சீராக்கும் நோய்க் கழிவுப் பொருள் சிஃபிலினம் என்பதாகும்.  நோயுள்ளவர்களின் புண்ணிலுள்ள கிருமிகளை வீரியப்படுத்தி இதைத் தயாரிக்கிறார்கள்.  இதன் பெயரைக் கண்டு அஞ்சி வங்க மாநிலத்தில் இதை லூட்டிகம் என்றே அழைப்பார்கள்.  தமிழ் நாட்டில் லூட்டிகம் என்ற பெயரில் இநத மருந்தை விற்பனை செய்வதில்லை.
சிஃபிலிஸ் என்ற சொல்லுக்கு மூலம் என்ன என்றும் தெரியவில்லை.  இந்தப் பெயர் சொல் இலக்கணத்திலேயே  இல்லை என்று (ETYMOLOGY) ஸ்டெட்மான்ஸ் மருத்துவ அகராதி கூறுகிறது.
image

ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் மணக்கும்.  இந்தப் பால்வினை நோயை எப்படிக் குறிப்பிட்டாலும் அச்சுறுத்தும்.  இந்த நோயுள்ளவர்களைத் தொட்டுப் பரிசோதிக்கவே தயங்கும் மருத்துவர்களை நான் சந்தித்ததுண்டு.
இந்த நோய்க்கு ஆட்பட்டவர்களின் ஆணுறுப்பின் மேல் சிறு சிறு புண்கள் தோன்றும்.  ஊன் நீர் வடியும்.  மென்மையான அடிப்பாகத்திலும் இவை தோன்றக் கூடும்.  சிவந்து வீங்கும்  பொறுக்க இயலாத அரிப்பு, கடுப்பு, இந்த நோயைப் பற்றிய அச்சம், சமுதாய நோக்கு ஆகியவை  நோயாளியை நிலைகுலையச் செய்யும்.  ஒரு முலையில் தனியாக உட்கார்ந்து கண்ணீர் வடிக்கும் நோயாளிகளை நான் கண்டதுண்டு.  அவர்களுக்கு ஆறுதல் கூறினாலே மகிழ்ச்சி அடைவார்கள்.

மருந்துகளின் தயாரிப்பு முறைகளைப் பற்றி விவரிக்கும் மருத்துவர் டிவி இதன் வழிமுறை பற்றித் தெரிவிக்கவில்லை.  இந்த மருந்துக்கும் தனி அதிகாரமும் கூட மருத்துவர் நாஷ் தரவில்லை  ஆனால் எல்லோரும் ஒருமுகமாக இதை உயர்ந்த வீரியத்தில் தர வேண்டும் என்றே பரிவுரை செய்கிறார்கள்.  என்னுடைய அனுபவத்தில் இரு நூறு, அதிகமாகப் போனால் ஆயிரம், இதைத் தாண்டாமலேயே நோயாளிகள் சீரடைவதை நான் கண்டிருக்கிறேன்.
இது நோயின் முதல் நிலை.  அடுத்து நோயாளிக்குக் காய்ச்சல் வரும்.  தொடைடுக்குகளில் நெறி கட்டும்.  உடல் முழுவதும் திட்டு திட்டாகப் புடைத்துக் கொண்டு நீர் வடியும்.  புண்கள் பார்க்கவே விகாரமாக இருக்கும்.  மேற்பரப்பு அழுகிச் சுருங்கிப் போகும்.  இதிலிருந்து மீளவே முடியாதோ என்ற மனநிலை கூடவே கழிவிரக்கம்.
அடுத்த நிலை இன்னும் பரிதாபத்திற்குரியது.  கை, கால் மூட்டுக்கள், சிறிய பந்தளவு வீங்கி விடும்.  தொட்டால் சுடும்.  பொறுக்க இயலாத நோவு மூட்டுகளை அசைக்கவே இயலாத நிலை  எலும்புகளில் நைந்து போன நிலைமை.
Related image
சிஃபிலினம் என்ற நோய்க் கழிவுப் பொருளினால் மட்டும் இந்த நிலைமையை மாற்ற இயலாது.  இதை இடையூடாக மட்டும் கொடுக்க வேண்டும்.  ஒரு மாத இடைவெளி பொருத்தமானதாக இருக்கும்.
உடலின் எந்தப் பகுதியில் நெறி கட்டினாலும் உடனடியாக நினைவுக்கு வரவேண்டியது பாதரசம்.  இதை ஆறில் துவங்கலாம்.  குணம் தெரிந்தால் இரு மாத்திரைகள் லூட்டிகத்தைத் தர வேண்டும்.  தொடர்ந்து குணம் தெரியாவிட்டால் மெர்க்யூரியஸ் சல்ஃப்யூரிகம் தர வேண்டும்.  ஆறில் தொடங்கி ஏணி முறையில் தருவது பயனளிக்கும்.  இரு நூறுக்கு மேல் போக வேண்டிய தேவையில்லை.  உடல் மேலுள்ள புண்கள் செதிலாக உதிரும்  தோலுரியும்.  இந்த நிலை வந்தவுடன் நான் வல்லாரையைத் (ஹைட்ரோகாட்டைல்) தருவது வழக்கம்.

என் தாயாருக்குச் சில நாட்டு மருந்துகளில் பழக்கமுண்டு.  நாட்பட்ட பூவரசு மரங்களின் வேர், பட்டை, இலை, மலர் ஆகியவற்றை இடித்துக் கிழாயம் தயாரித்து உள்ளுக்கு கொடுத்து, புண்ணின் மேல் முந்திரிக் கொட்டை எண்ணையைத் தடவுவார்கள்.  நோயாளியின் உடல் சூடு தணியும்.  நிறைய மலம் வெளிபடும்  புண்கள் ஆறி விடும். (முந்திக் கொட்டை - அனகார்டியம் ஓரியண்டல்) இது விரல்களின் இடுக்குகளில் ஏற்படும் வெடிப்புகளை வெகு விரைவில் குணப்படுத்துவதைக் கண்டு வியந்திருக்கிறேன்.

சிஃபிலினத்தின் இன்னொரு முக்கியமான குறி இருள் சூழ்ந்த பிறகு தொடங்கி விடியும் வரை நோய் இருப்பதாகும்.  காலை கண் விழிக்கும்போது நோய் வெளிப்பட்டால் அப்போதும் லூட்டிகம் பயன் தரும்.  இது மட்டுமன்று.  பொதுப்படையாக இரவு நேரத்தில் நோய்க்குறி மிகுமானால், அது அரிப்போ, வயிற்றுப் போக்கோ, தலை நோவோ, எல்லாவற்றையுமே லூட்டிகத்தின் இரு மாத்திரைகள் குணப்படுத்தி விடும்.  இந்த விதியை மேற்கொண்ட நான் பல பெரிய வெற்றிகளைச் சந்தித்திருக்கிறேன்.



மேகவெட்டைக் கிரந்தி நோய்க்கு சிஃபிலினம் மட்டும் மருந்து அன்று என்பதை  எல்லா மருத்துவர்கமே உறுதி செய்கிறார்கள்.  குறிகளுக்கேற்ற மருந்துகளைக் கொடுத்துவிட்டு இடையூடாக இதைத் தர வேண்டும் என்பதே அவர்களுடைய பரிவுரை.
இதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

                                                         *****

                                                                          -

திங்கள், 14 மே, 2018

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 6 மேஜர் தி.சா.இராஜூ



நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 4
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 5

                                                                           -6-

வரலாற்றைப் படிப்பது சுவையானது.  வரலாற்றிலேயே பங்கு பெறுவது இன்னும் சுவையான அனுபவம்.  அந்த வகையில் 1970-71-ஆம் ஆண்டு பாரத வரலாறு  என் வாழ்வில் சுவையான பகுதி.  நம் நாடு விடுதலை பெற்ற பிறகு 1981 வரை எல்லாப் போர் முனைகளிலும் என் பங்கு இருந்திருக்கிறது.  அதைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

தற்போதைய பங்களாதேஷுக்கு அப்போது கிழக்குப் பாகிஸ்தான் என்று பெயர்.  அந்தப் போரின்போது அங்கு நான் கழித்த நாட்களை இப்போது நினைவு கூர்கிறேன்.  அந்தப் பகுதியிலிருந்து ஓடி வந்த மக்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டது.  அந்த அணியின் உதவியுடன் பாகிஸ்தானியப் படையினரை எதிர்க்கும் பணியில் நமது படைத் தலைமை ஈடுபட்டிருந்தது.  அவர்களுடைய ஆயுதங்களைப் பராமரிக்கும் பொறுப்பு என்னிடம் பல துணை நிலை அலுவலர்கள், படை வீரர்கள் இருந்தனர்.  நாங்கள் அனைவரும் எதிரியின் நாட்டிற்குள் கூடாரம் அமைத்து வசித்தோம்.  முக்தி வாகினிப் படையின் ஆயுதங்களை அங்கிருந்து கொண்டே பராமரித்தோம்.  அவற்றைப் பரிசோதித்து, செப்பனிட்டோம்.

இந்திய அரசு முறையாகப் போர் அறிவிக்கப் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் அங்கே வசிக்கத் தொடங்கி விட்டோம்.  அப்போது எங்கள் முகாம் மேக்னா நதிக்கரையில் இருந்தது.  மிகவும் பசுமையான நிலப்பரப்பு.  சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியர்களுக்கு விரோதிகளாக இருந்த பொது மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர்.
எனது உதவியாளர்களில் சில தமிழர்களும் இருந்தனர்.   அப்துல் ரஷீத் என்று அவருக்குப் பெயர்.  திறமை மிக்க தொழிலாளி.
எங்களில் எவரும் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவி புரியும் படைப்பகுதி அருகில் இல்லை.  அந்த நேரத்தில் அவர்களுக்கு என்னிடமிருந்த ஹோமியோபதி மருந்துகளே துணை நின்றன.  போர்க்களத்தில் கூட மருந்துப் பெட்டி என் ஜீப்பில் இருக்கும்.  ஒரு நாள் மாலை அப்துல் ரஷீத் என் கூடாரத்திற்கு வந்தார்.  இலேசான காய்ச்சல், முகம் வெளிறிப் போயிருந்தது.  உடலில் சிறு சிறு தடிப்புக்கள், மூச்சிலேயே ஒரு துர்நாற்றம்.
இத்தகைய  தடிப்பு உடலின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறதா?
நண்பர் சற்றுத் தயங்கினார்.  பிறகு தன் கால் சட்டையையும், உள்ளாடைகளையும் நீக்கினார்.  ஆணுறுப்பின் மீது சிறு சிறு புண்கள்.  முன் பகுதி சிவந்து வீங்கியிருந்தது.
இதை எங்கே சம்பாதித்தீர்?  படையினர் வாழ்வில் நோயாளியாவது தவறில்லை, அதை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்.  பால்வினை நோய்களுக்காகச் சிகிச்சை பெறும் நாட்களுக்கு ஊதியமும் நிறுத்தப்படும்.
காலனிக்குப் போயிருந்தேன் அய்யா!
காலனி என்று அன்பர் குறிப்பிட்டது மேக்னா ஆற்றங்கரையிலிருந்த செவ்விளக்குப் பகுதி.
அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி மருந்து கொடுத்து அனுப்பினேன்.
ஒரு வாரம் பொறுத்து ரஷீத் வந்தார்.  புண்ணெல்லாம் ஆறி விட்டது.  ஆனால் ஒழுக்கு நிற்கவில்லை.
கோவணத்தை இறுக்கிக் கட்டு, நான் தரும் மருந்துகளைத் தவறாமல் சாப்பிடு.  அதற்குப் பிறகு பல நிகழ்ச்சிகள், ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.

ஓய்வு பெற்று சொந்த ஊருக்குத் திரும்ப வந்தேன்.  இங்கேயும் மருத்துவப் பணியைத் தொடர்ந்தேன்.  இன்று வரை வாழ்க்கையின் மாலைப் பொழுது பயனுள்ளதாகவே அமைந்து விட்டது.
. . . அன்று ஓர் அன்னை தன் மகனுடன் வந்தார்.  பாவா அனுப்பினார்.  பாவா என்று அவர் குறிப்பிட்டது அவர்கள் ஊர் பள்ளிவாசலின் மௌல்வியை, எப்போதும் பிறருக்கு உதவ விரும்புபவர்.  என்னிடம் மெய்யன்பு கொண்டவர்.   என்னுடைய இறைவனுக்குப் பெயரோ உருவமோ கிடையாது என்பதில் அவருக்கு உடன்பாடு.  அவர் யுனானி மருத்துவத்தில் தேர்ந்தவர்.  சில சமயங்களில் அவர் தமது நண்பர்களை என்னிடம் அனுப்பி வைப்பதுண்டு.
விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.
சிறுவனின் பெயர்?
முகம்மது ரிஸ்வான்.
வயது? பத்து.
முகவரி.  ஏழு, பள்ளிவாசல் தெரு, ஊரின் பெயரைக் கூறினார்.
பையனின் தந்தை என்ன வேலை பார்க்கிறார்?
அவர் இல்லீங்க.  இவன் பிறந்த உடனேயே அவர் மௌத் ஆகிவிட்டார்.
உங்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கிறதா?
கிடைக்கிறது அய்யா, நான் சிறுவனின் முகத்தை உற்றுக் கவனித்தேன்.  என்றோ பழகிய நினைவு.  உங்கள் கணவரின்பெயர் அப்துல் ரஷீத் அல்லவா?
அன்னையின் கண்கள் வியப்பினால் மலர்ந்தன.
 உங்களுக்கு அவங்களைத் தெரியுமா?
அவர் எனது நெருங்கிய நண்பர்.  நாங்கள் போர்க்களத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள்.  பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பு இல்லை என்றாலும் அவரை நான் மறக்கவே இல்லை.  சரி, குழந்தையின் தொந்தரவு என்னவென்று சொல்லுங்கள் !

சதா சளி, இருமல், சீரான வளர்ச்சியே இல்லை.  படிப்பிலும் அவன் கவனம் செலுத்துவதில்லை.  உடம்பெல்லாம் சொறி, இன்னும் படுக்கையை நனைக்கிறான்.
உங்களுக்கு ஏதாவது சுகவீனம் உள்ளதா?
நிக்காவுக்கு (திருமணம்) முன் வரை நன்றாகத்தான் இருந்தேன்.  அதற்குப் பிறகு என் நிலை சீர் கெட்டு விட்டது.  மாதப் போக்கு சரியாக இல்லை.  ஒரே வெள்ளைப்பாடு.  அந்த மங்கையின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தது.

Image result for kent materia medica

மேதை ஜே.டி.கெண்ட் முதல் பத்தியிலேயே அவர் அந்த மங்கையின் சுகவீனங்களைத் தொகுத்தளித்திருந்தார்.
She was healthy when she married, but now she has ovarian pains, menstrual troubles, she has lost all sexual response, is growing pale and waxy, and becoming violently sensitive and nervous.
 - The husband's history gives the cause, and this remedy will cure. 
                         - Lectures on Homeopathic Materia Medica 
முழுமையாகக் குணமடையாத மேக நோயாளி அதைத் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் பரம்பரைச் சொத்தாக விட்டுச் செல்கிறான் என்பதே சுருக்கம்.

இராணுவ  வாழ்வு ஒருவனைச் சீர் குலைக்கிறது என்று எழுதுகிறார் லியோ டால்ஸ்டாய் (மீட்சி என்ற நூலில்) அவரே ஒரு படை வீரர்.  அது எவ்வளவு உண்மை?
ரிஸ்வானுக்கு நான் கொடுத்த மருந்துகள் தூஜா ஏணி முறையில்.  தொடர்ந்து டியூபர்குலினம் பொவைனம் இரு உருண்டைகள்.  இறுதியாக மெடோரினம் (200).

விளைவு முழு நலம்.  ஹோமியோபதி இயக்கத்திற்கு இன்னொரு வெற்றி.

                                                                      -
நோய்க் குறிகளுக்கும் அதன் மூலமாக துயரடைந்திருக்கும் நபரின் உடற்கூற்றுக்கும் தொடர்பு உண்டு.  அதே போல் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு வரலாறு உண்டு.  நோய்வாய்ப்பட்டவரின் உடற்கூற்றுக்கும், மருந்தின் இயல்புக்கும் தொடர்பு இருக்குமானால் நோயாளி சீரடைவது உறுதி  அப்படி இல்லாவிட்டாலும் நோய்க் குறிகள் பிதுங்கிக் கொண்டு வெளிக்காட்டுமானால் அப்போதும் நோயாளி சீரடைவது நடக்கக் கூடியதே.
எல்லா மருந்துகளின் செய்முறையை விளக்கமாக விவரித்த மருத்துவர் டி.வி. மெடோரினம் குறித்து அவ்வாறு செய்யவில்லை.  மருத்துவர் நாஷ் ஒவ்வொரு மருந்தின் குறிகளையும் வரிசைப்படுத்துவார்.  ஆனால் இந்த மருந்து குறித்து அவர் இவ்வகையில் எழுதவில்லை  வில்லியம் போயரிக், ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் ஆகிய இருவரும் நியாயம் வழங்கியிருக்கிறார்கள்.  அவற்றைப் படிக்கும்பேது இந்த மருந்தும் ஒரு பல்முனை நிவாரணி என்பது புலப்படுகிறது.

பிடிவாதமாக விலக மறுக்கும் (obstinate) நோய் எதுவாக இருந்தாலும் இந்த மருந்தின் துகள் அதை நீக்கி விடும் என்பது என் மருத்துவ அனுபவம்.
கொனேரியா (மேகவெட்டை) எனப்படுவது ஒரு பால்வினை நோய் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாடும் கிடையாது.  இது பாரம்பரியமாகவும் தொடரலாம்.  அல்லது பாலுறவினாலும் ஏற்படலாம்.  இது உடலில் குடி கொண்டால் மூட்டுக்களில் வீக்கம், அழற்சி, நோவு, மீண்டும் நீட்டி மடக்கி சுழற்ற முடியாத நிலை.  இது ஏற்படுமானால் இதை நீக்குவதற்கு இந்த மருந்தைப் பயன்படுத்தலாம்.  எந்த வீரியத்தில் உபயோகப்படுத்துவது என்பது அவரவர்களுடைய அனுபவத்தைப் பொறுத்தது.

நோய்க் குறிகள் வெளிப்படும் நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.  இதில் இது கருத்துக்கள் கிடையா.  அப்படி இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பது மருத்துவர் கெண்டின் கூற்று.  கொனேரியா எனற பால்வினை நோய் இரண்டாவது தோஷத்தைச் சேர்ந்தது என்று கூறுவார்கள்.  மேதை ஹானிமனின் கருத்தும் அதுவே, இதை வாதம் என்று ஆயுர்வேதம் கூறும்.  சித்த மருத்துவமும் இதை ஏற்றுக் கொள்கிறது.  பாலுறவின் விளைவாக இந்த சுகவீனம் தோன்றியிருந்தால் அதற்கு மருந்து தூஜா.  அப்படி இல்லாமலும் மூட்டுக்களில் நோவும், வீக்கமும், அழற்சியும் ஏற்படக்கூடும்.  அப்போது நம் கவனத்திற்குரியது ரஸ்டாக்ஸ்.  எந்தத் தோஷத்தின் விளைவாக இத்தகைய நிலை தோன்றியிருந்தாலும் அப்போது தொடர் மருந்தாகப் பயன்படுவது மெடோரினம்.  மூன்றாவது தோஷத்தின் விளைவாகவும் மூட்டுக்களில் நோவும், வீக்கமும், வலியும் ஏற்படக் கூடும்.  அந்த நிலையிலும் கூட மெடோரினத்தை மருந்தாகக் கொடுத்துப் பயன் கண்டிருக்கிறேன்.

பொதுவாக நைட்ரிக் அமைலத்தையும், கல்காரிய பாஸ்பரிகத்தையும் மூன்று தோஷத்திற்கும் நிவாரணிகளாகக் கூறுவார்கள்.  அந்த வகையில் இந் நோய்க் கழிவுப் பொருளையும் பயன்படுத்தலாம் என்பதே என் அனுபவம்.
நோயை விரைவாகக் குணப்படுத்தவும், தடுப்பாகவும் பாஸிலினத்தைப் பயன்படுத்தலாம் என்றும் போயரிக் எழுதுகிறார்.  அந்தப் பட்டிலில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.  இரு நுறாவது வீரியத்தில் இதைக் கொடுத்து விடலாம்.  ஏற்றதாக இருந்தால் நிலையைச் சீராக்கி  விடும்.  இல்லையானால் கழிப்பில் நீங்கிப் போகும் தீங்கு ஏதும் நிகழாது  இதுவும் என் அனுபவம்.
வீரியத்தைப் பற்றிப் பேசும்போது, எனது நிலையை தெளிவாக்க விழைகிறேன்.  பொதுவாக நோய்க் கழிவுப் பொருளை இருநுறாவது வீரிய்த்தில் தரலாம்.  சற்றுப் பொறுத்துப் பார்ப்பது சிறந்தது.   அந்த வீரியத்தில் எதிர்பார்த்த அளவு பயன் விளையாவிட்டால் ஐம்பது மில்லெசிம்மல் வீரியத்தைப்பயன்படுத்துகிறேன். ஏற்றதாக இருப்பின் அந்த வீரியம் நல்ல பயனைத் தருகிறது.  பொறு, கவனி என்பவை மிகச் சிறந்த பரிவுரைகள்.  ஆழமாகப் பணிபுரியும் மருந்துகள் மெதுவாகத்தான் செயல்படும்.  நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.  நோயாளிகளின் மனச்சாந்திக்காக சீனி உருண்டைகள் தரலாம்.  அவைகளும் பயன் தருபவையே என்று கெண்ட் எழுதுகிறார்.
நேற்று முன் தினம் நீங்கள் கொடுத்த மருந்து அற்புதமான முறையில் பயன் தந்தது.  அதையே மீண்டும் கொடுங்கள் என்று சில அன்பர்கள் கூறுவர்.  நான் மனதிற்குள் சிரித்துக் கொள்வேன்.  அது சீனியுருண்டை என்பது எனக்கு மட்டுமே தொரியும்.
Image result for medorrhinum
இந்த மருந்தின் மனக்குறிகள் சிந்தனைக்குரியவை.  எந்தச் செய்கையிலும் ஒரு பரபரப்பு,  நிராசையைக் காட்டும் முகத் தோற்றம்.  அவரால் எண்ணங்ளை ஒருமுகப்படுத்தவே இயலாது.  எடுத்த செயலில் வெற்றி அடையவே இயலாது என்று ஒரு பிடிவாதமன நம்பிக்கை.  உயிரையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் வரும் (நினைவு கூர்க  மேகவெட்டைக் கிராந்திக்கும் இந்த மன இயல் உண்டு) மொத்தத்தில் அவர் ஓர் அழுமூஞ்சி.  இந்த நிலையில் இந்த மருந்து பயன் தருமா? என்ற கேள்விக்கு இடையூடாக கொடுப்பதில் தவறு இல்லை என்று மட்டுமே என்னால் கூற முடியும்.  ஐம்பது சதவீதம் நல் வாய்ப்பும் உண்டு எப்போதுமே இது உண்மை.
பொதுவாக உடலில் பல கழலைகள், வலியில்லாமல் தோன்றும்.  தோல் நீர் சுரந்து முடிச்சாக தொங்கினால் அதைக் கரைக்க கல்காரிய ஃப்ளோராவையும், தொடர்ந்து லூட்டிகத்தையும் தேர்ந்தெடுப்பது வழக்கம்..  ஆனால் இரண்டு மாத்திரை மெடோரினம் மட்டும் அந்த அன்பரைக் குணமாக்கிவிட்டது.  நான் அவரிடம் கண்ட சிறப்புக் குறி அவர் எப்போதும் காலை ஆட்டிக் கொண்டே அமர்ந்திருந்தது.  பலரிடம் இந்தக் குறி இயல்பிலேயே அமைந்திருக்கும்.


மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருமி, இருமி கோழையை வெளிப்படுத்துவதும்,  அவர் அந்த நிலையைச்  சமனமாக்க குப்புறப்படுப்பதையும் பார்த்தேன்.  மெடோரினம் 200 அவருடைய மூச்சுத் திணறலை நிரந்தரமாகக் குணப்படுத்தி விட்டது.

சிறுகுழந்தை ஒன்றின் ஆசன வாய்ப் பகுதி முழுவதும் சிவந்து வெந்து போயிருந்தது.  அது கைவிடாமல் கதறிற்று.  உடலில் சிறு சிறு தடிப்புக்கள், நொந்து போன தாய் என் ஆசானிடம் வந்தார்.  அவருடைய பரிவுரை மெடோரினம் மறுநாளே எல்லாம் மறைந்து போயின.

இவை அனைத்தையும் இங்கு வெளிப்படுத்துவதற்குக் காரணம், இந்த மருந்து மூட்டு வலிக்கு மட்டும் பயன்படும் என்று குறைத்துக் கொள்ளாமல், நமது கண்களையும், காதுகளையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

*******************************************************************
நோய்க்கழிவுகளின் அற்புதங்கள் தொடரும்...

நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 5 மேஜர் தி.சா.இராஜூ



நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 1
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 2
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 3
நோயின் கழிவே நோய்க்கு மருந்து_ 4

                                                                             -5-

திருச்சிராப்பள்ளி நகரில் வான்மீகநாதன் என்ற இலக்கியவாதி இருந்தார்.  பழந்தமிழ் இலக்கியங்களை சாகித்திய அகாதமி மூலம் வட நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.  மிகவும் எளிய தன்மை உடையவர் அடக்கமே உருவானவர்.  அவருடைய அறிமுகம் எனக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது.
 ஒருமுறை அவரைச் சந்திக்க சென்றபோது அவருடய மேஜையின்மேல் மருத்துவர் சாமுவேல் ஸ்வான் அவர்களுடைய நூல் இருந்தது.  அவர் அதிலிருந்து குறிப்பெடுத்த காகிதங்களும் இருந்தன.  நோய்க் கழிவுப் பொருள்களைப் பற்றி அற்புதமான கருத்துக்களை ஸ்வான் தெரிவித்திருக்கிறார். 

Image result for A Materia Medica, containing Provings and Clinical Verifications of Nosodes and Morbific Products Image result for Samuel Swan MD 
                                                                          Dr Samuel Swan MD(1814-1893)


அப்போது தான் என் அருமை நண்பருக்கு ஹோமியோபதியிலும் ஆர்வம் இருப்பதை அறிந்து கொண்டேன்.  விளம்பரம் ஏதுமில்லாமல் பலருக்கு அவர் மருத்துவ உதவி புரிந்து வந்ததையும் அறிந்து கொண்டேன்.  தொடர்ந்து அவருடன் உரையாடிய போது மெடோரினம் குறித்து அவர் பல அரிய தகவல்களைத் தெரிவித்தார்.  ஆண்மை குன்றிய இரு இளைஞர்கள் அவரிடம் மருத்துவ உதவியை வேண்டி வந்தனர்.  இருவருக்கும் வழி வழியாக நோய்த் தொடர்பு ஏதுமில்லை.  எனினும் இருவருக்கும் பெண்ணுறவில் நாட்டமே இல்லை.  மக்கட் செல்வமும் இல்லை.  மருத்துவப் பரிசோதனையில் அவர்களுடைய விந்தணுவில் இயக்கம் (MOBILITY) குறைவாக இருந்தது.  இந்த இரு அன்பர்களுக்கும் இரு நூறாவது வீரியத்தில் மெடோரினத்தைப் பதினைந்து நாள் இடைவெளியில் மூன்று முறை கொடுத்தேன்.  ஒரே ஆண்டில் இருவரும் குழந்தைகளுக்குத் தந்தையர் ஆகினர்.

மெடோரினம் என்பது நோய்வாய்ப்பட்ட வீரியப்படுத்திய விந்து.  அது ஆண்மைக் குறைவைப் போக்கக்கூடும் என்று ஃபௌபிஸ்டர், ஃபாரிங்டன் உட்பட பல புகழ் பெற்ற மருத்துவர்கள் கூடக் கூறியதாகத் தெரியவில்லை.  போயரிக் மட்டும் எழுதுகிறார்.
  -Nocturnal emissions, followed by great weakness.
 - Impotence. 
(பக்கம் 425) என் நண்பர் கூற்றை நான் நம்புகிறேன்.  நமது அறிவும் ஓர் எல்லைக்குட்பட்டே உள்ளது.  அந்த வட்டத்தை விட்டு நாம் இன்னும் வெளியே வரவில்லை.
மெடோரினம் என்ற நோய்க்கழிவுப் பொருள் இரண்டாம் மியாசத்தைச் சேர்ந்தது.  அதை அனைவருமே அறிவோம்.  மூட்டுக்களில் வீக்கம், வலி ஆகியவற்றை (இது மேக வெட்டையின் விளைவு) குணப்படுத்துவதையும் அறிந்து கொண்டிருக்கிறோம்.  அது இன்னும் பல சுகவீனங்களையும் போக்கக் கூடும் என்பது புதிய செய்தி.

குறிகள் ஒத்திருந்தால் என்ற சொற் பிரயோகத்தை எல்லா நிபுணர்களுமே அழுத்திக் கூறுகிறார்கள்.  பதினைந்து வயது மதிக்கத் தக்க இளைஞனுக்கு வலிப்பு நோய் இருந்தது.  அதன் பொருட்டு அவன் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.  அவனுக்குத் தொடர்ந்து அலோபதி மருந்தான கார்டினால் அளிக்கப்பட்டு வந்தது.  முதலில் அந்த மருந்துக்கு நோய் கட்டுப்பட்டது.  பிறகு ஒவ்வொரு நாளும் அவன் அதை உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  சிறுவனின் செரிமான உறுப்புக்கள் பழுதாயின.  அவன் வாந்தி எடுக்கத் தொடங்கினான்.  கண்கள் ஒளி இழந்து போயின.  முகம் தோல் சுருங்கி செயற்கையான முதுமைத் தோற்றம் ஏற்பட்டுவிட்டது.  கை கால்கள் நடுங்கின.  அந்தச் சிறுவனை என்னிடம் அழைத்து வந்தார்கள்.  படிப்படியாக அல்லோபதி மருந்துகளைக் குறைக்கும்படி கூறினேன்.  வலிப்பு நோய் அதிகரித்தது.  நான் கவலைப்படவில்லை.

முதலில் நான் அவனுக்குக் கொடுத்த மருந்து பல்சட்டில்லா 200.  (டி.எஸ்.ஐயரின் பரிவுரையின்படி அப்போது எனக்கு சைனடோன்(அருகம்புல்) பற்றித் தெரியாது).
அடுத்து தூஜா ஏணி முறையில் மூன்று நாள் இடைவெளியில் . . .  பலன் இல்லை.
தொடர்ந்து ஆர்ட்டிமீசியா வல்காரிஸ், ஆறு, மூன்று நாட்கள் இடைவெளியில், பலன் இல்லை என்றாலும் சிறுவனின் முகத்தில் தெளிவு ஏற்பட்டது.  ஆனால் நான் தொய்ந்து போனேன்.  அடுத்து அவனுடைய தம்பியுடன் உரையாடினேன்.
 உன் அண்ணன் எப்படி உறங்குகிறான்?
எந்த வரையறையும் இல்லை அங்கிள், என்றாலும் பெரும்பாலும் குப்புறத்தான், அதுவும் தவளையைப் போல்.
நான் மீண்டும் மேதை கெண்டின் களஞ்சியத்தைப் புரட்டினேன்.  இந்த நிலையில் உறங்குபவர்களுக்கு அவர் ஒரே மருந்தைத்தான் குறிப்பிடுகிறார்.
அடுத்து நான் கொடுத்தது மெடோரினம் 200 இரண்டே உருண்டைகள்
சிறுவனுக்கு மீண்டும் வலிப்பு வரவில்லை.  ஒரு வாரம் அமாவாசை, பௌர்ணமி சிறுவன் படிப்பில் முன்னேற்றம்.  விளையாட்டுக்களில் தனி ஆர்வம் காட்டினான்.

இது எனக்கு இமாலய வெற்றி.  ஹைதராபாதில் இருந்த என் ஆசானிடம் கூறி மகிழ்ந்தேன்.  அவர் முதலில் சற்று அசிரத்தைக் காட்டினார்.  நான் மருத்துவர் கெண்டின் நூலில் பக்கத்தைப் பிரித்துக் காண்பித்தேன். (அவர் லிப்பேயின் சீடர்) அவர் கொடுத்த விட -  இன்னும் பொறுத்திருந்து பார்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத்தில் ஒரு தொழில் விஞ்ஞானக் கூட்டத்திற்குப் போக வேண்டியிருந்தது.  அங்கு அமர்ந்திருந்த என்னை நோக்கி ஓர் அன்பர் விரைந்து வந்தார்.  ஐயா, என்னை நினைவிருக்கிறதா? என்றார்.  அவரை நினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை.  நான் தயங்கினேன்.

நான்தான் காப்டன் சாமுவேல்.  என் தம்பி ராபர்ட்ஸ் தற்போது பொறி இயல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான்.  நான் என் புருவதைத் தேய்த்துக் கொண்டேன்.  நினைவு வந்தது.  ஐயா, நீங்கள் என் தம்பிக்கு மருந்து கொடுத்த பிறகு ஒரு முறை கூட வலிப்பு வரவில்லை.  அந்த நண்பரின் விழிக்கடையில் நீர்த் துளிர்த்திருந்தது,
நான் வியந்து போய் நின்றேன்.  என்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அப்போது என் ஆசான் உயிருடன் இருக்கவில்லை.

இன்று வரை எனக்கு ஓர் ஐயப்பாடு.  வலிப்பு நோய் மூன்றாவது மியாசத்தின் வெளிப்பாடு என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  இரண்டாவது  மியாசத்தைச் சேர்ந்த மருந்தான மெடோரினம் அந்த நோயை எப்படி நீக்கிற்று?

என்னுடைய முடிவு - குறிகள் ஒத்திருந்தால் நீக்கும் என்பதே.  அது தான் ஹோமியோபதியின் சாரம்.  ஒரு மருத்துவன் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.  பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.  முயற்சி மெய் வருத்தக் கூலி தரும்.

கூலி மட்டும் தருகிறதே என்று தளர்ந்து விடக்கூடாது.
*****
நோய்க்கழிவுகளின் அற்புதங்கள் தொடரும்

புதன், 18 ஏப்ரல், 2018

ஹோமியோபதி ஆசான் பழ.வெள்ளைச்சாமி புத்தகங்கள் ஒரு பார்வை



ஐயா பழ.வெள்ளைச்சாமி அவர்களை மருத்துவராகஆசிரியராக அறிந்த பலருக்கு அவர் ஓர் சிறந்த எழுத்தாளர் என்பது தெரியாது. பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்அவை ஒவ்வொன்றும் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம். அவற்றை பற்றி சிறு அறிமுகம்.



பழ,வெள்ளைச்சாமி நூல்கள்:
  • 1.  A Brief Introduction to Homoeopathy 
  • 2.   ஹோமியோபதி ஏன் கற்க வேண்டும்?
  • 3.   ஹானிமன் காட்டிய வழியில் துயரர் ஆய்வு
  • 4.   ஹோமியோபதி மருந்து தேர்வில் மனக்குறிகளின் பங்கு
  • 5.   ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள்
  • 6.   ஹோமியோபதி ஓர் அறிமுகம்
  • 7.   மருந்துகாண் ஏடு (HOMOEOPATHIC REPERTORY) ஓர் அறிமுகம்
  • 8.   திருமணமுறை மாற்றப்படவேண்டும்
  • 9.  ஹோமியோபதி 50 மில்லெசிமல் வீரியம்
  • 10. ஹோமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம்
  • 11.  ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள்
  • 12.  அன்பே கடவுளின் நியதி
  • 13.  மனிதத்துவம்


நான் முதலில் படித்து வியந்த புத்தகம் மருந்துகாண் ஏடு ஓர் அறிமுகம் என்ற புத்தகம் தான். இந்த புத்தகத்தின் முன்னுரையில் ஐயாவின் வகுப்புகளும் அப்ரோச்சின் பிரச்சாரங்களையும் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள்  கேரள ஆன்மீக குரு நாராயண குருவின் சேவையோடு ஒப்பிட்டு இருப்பார். அது சத்திய உண்மை.


மேஜர் தி.சா.இராஜூ அடிக்கடி தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய கெண்ட் ரெப்பர்ட்டரியையே பார்த்திராத எனக்கு ஐயாவின் இந்த புத்தகம் எனக்கு மிகவும் உதவியது.
கெண்ட் ரெப்பர்ட்டரி மேல் தீராத ஆர்வம் உண்டாகி அதன் தேவையை நான் நன்றாக உணர மருந்துகாண் ஏடு ஓர் அறிமுகம் எனக்கு பேருதவியாக இருந்தது.
இந்த புத்தகத்தில்
  •   மருந்துகாண் ஏடு என்றால் என்ன?
  •   அதன் தத்துவ பின்னணி வரலாறு வளர்ச்சி எப்படி உருவானது?
  •   மருந்துகாண் ஏட்டின் பயன் என்ன?
  •   புழக்கத்தில் உள்ள முக்கிய மருந்துகாண் ஏடுகள் பற்றிய விவரங்கள்…(SYNTHETIC முதல் SYNTHESIS வரை கம்ப்ளீட் மர்பி பதக் வரை)
  •   மருந்துகாண் ஏட்டின் வடிவமைப்பு பற்றிய தெளிவான விளக்கங்கள் (MIND.VERTIGO,HEAD.EYE.VISION.EAR.HEARING….)
  •   கெண்ட் மருந்துகாண் ஏட்டை எவ்வாறு பயன்படுத்துவது?
  •   குறிகளின் முழுமையை எவ்வாறு கணக்கிடுவது?(TOTALITY)
  •   நீக்க உதவும் குறியை(ELIMINATING SYMPTOM) எவ்வாறு தேர்வு செய்வது?
  •   கெண்ட் மருந்துகாண் பேரேட்டில் என்னென்ன குறைகள்??

என எளிதில் பாமரனுக்கும் விளங்கும் வகையில் இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்.. சிறந்த ஹோமியோபதி மருத்துவனாக விரும்பும் ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டியது அவசியம்.

இரண்டாவது புத்தகம்

ஹோமியோபதி மருந்து தேர்வில் மனக்குறிகளின் பங்கு
சின்னஞ்சிறிய இந்த புத்தகம் மனக்குறிகளின் முக்கியத்துவத்தை எனக்கு புரியவைத்தது.
 அடிபட்டால் ஆர்னிகா, புண் ஆற காலண்டுலா, வயிற்றுப்போக்குக்கு போடாபைலம் மூட்டுவலின்னா ரஸ்டாக்ஸ், பிரையோனியா என இப்படி நோய் அடிப்படையில்  மருந்துகளை கொடுத்தும் பலன் கிடைக்காதபோது ஹோமியோபதி சரியான மருத்துவம் இல்லையோ என சந்தேகம் எழுந்தது. அப்போதுதான் அடிபட்ட ஒரு பாட்டிக்கு  அவரின் மனக்குறியான மத்தவங்களுக்கு நான் பாரமாக போயிடுவேனோன்னு பயமா இருக்குப்பா என கூறியதை வைத்து  ரபேனஸ் கொடுத்து உடனேயும் முழுதுமாய் வலி குறைந்தது என விவரித்திருப்பார். அப்போதுதான் ஹோமியோபதியின் முழு பரிமாணமும் எனக்கு புரிந்தது.
மனக்குறிகளின் பங்கு நூலில்
என்னென்ன வகையான மனக்குறிகளை நாம் அடையாளம் காணவேண்டும் என்பதை இந்த சிறு நூலில் அருமையாக விளக்கியிருப்பார்.
1.நோய் ஏற்படுத்திய மனநிலை (pathological mind)
2.நோய் ஏற்பட காரணமான மனநிலை (causative mind)
3. இந்த இரண்டும் சரிவர கிடைக்காதபோது நோயுற்ற மனிதனின் மாறாத தனித்துவமான சுபாவம் (State and disposition)
என மன நிலையை எவ்வாறு அறிவது என துயரர் சரிதையுடன் விளக்கியிருப்பது எவருக்கும் புரியும்.
இதுமட்டுமில்லாமல் மருந்து தேர்வுக்கு துயரரின் மாறுபட்ட மனநிலையை (alterd state of mind and disposition) எடுப்பதா அல்லது இயல்பான சுபாவத்தை எடுப்பதா என்ற சிக்கலுக்கு ஹானிமனின் ஆர்கனானில் இருந்தே மணிமொழி 210லிருந்து 214 வரை விளக்குவார். இந்த மணிமொழிகளையே இன்றைய டாக்டர் சேகலில் இருந்து இராஜன் சங்கரன்,பிரபுல் விஜயகர் வரை அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தி புதிய வழிமுறைகளை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அனைத்துக்கும் தீர்வு ஆர்கனானிலே இருக்கிறது என்று ஐயா பழ.வெள்ளைச்சாமி உறுதியாக கூறுகிறார்.
இந்த புத்தகத்தில் முத்தாய்ப்பாக மருந்து தேர்வுக்கென ஒரு எளிய வழிமுறை ஒன்றை கூறியிருக்கிறார்.
1.   நோய் ஏற்படுத்திய மனநிலைக்குறி (PATHOLOGICAL MIND)
2.   நோய்க்கு காரணமான மனநிலைக்குறி (CAUSATIVE MIND)
3.   துயரரின் சூழலிய தட்பவெப்ப தகவமைப்பு (THERMAL CONDITIONS)
4.   துயரரின் உணவுப்பழக்கம், விருப்பு வெறுப்பு (DESIRE&aversions)
5.   தனித்துவமான நோயியல் குறிகள் (pathological peculiarity)
ஆக  இவற்றை அறிந்து இதன் முழுமைக்கு மருந்து கொடுத்தால் ஹானிமன் கூறிய இயற்கை தத்துவத்தின்படி நலமாக்கல் நடைபெறும் என ஆய்ந்து கொடுத்திருக்கிறார். இதே புத்தகம் ஆங்கிலத்தில் வந்திருந்தால் உலகப்புகழ் பெற்றிருக்கும்

மூன்றாவது புத்தகம்

50மில்லிசெமல் வீரியம்
டாக்டர் ஹானிமன் தனது ஆர்கனான் 6ஆம் பதிப்பில் கூறியிருப்பதாவது, முந்தைய செண்டிசிமல் வீரியத்தில் உள்ள குறைகள் களையப்பட்டு முழுமையான வீரியப்படுத்தல் முறையமுழு நிறைவு பெற்ற முறைஎன்று அறிமுகப்படுத்தினார்.  இது  நோய் அதிகரித்தல் ஏற்படாதது. மருந்தை அடிக்கடி கொடுக்க முடியும்.

ஆனால் இந்த 50மில்லெசிமல் வீரியத்தை மருத்துவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இந்த வீரிய மருந்துகளை பயன்படுத்தி வெற்றி பெற்ற துயரர் சரிதைகள் நமது முன்னோர்களின் பதிவுகளில் இல்லை. இந்த வீரியப்படுத்தல் பற்றி ஹோமியோபதியருக்கு இருந்த சந்தேகத்தை போக்கும் விதமாக ஐயா PLV இந்த புத்தகத்தை எளிமையாக தந்திருக்கிறார். அழகிய தமிழில் 50 மில்லெசிமல் வீரியம் பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம் இதுவே ஆகும். 50 மில்லெசிமல் வீரியத்தை பற்றி ஐயங்களை தெளிவிக்கிறது இந்நூல்.

நான்காவது புத்தகம்

ஸ்கால்ட்டனின் பார்வையில் கனிமங்கள்
தனிமங்களின் அணு எண்படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்ட ஸ்கால்ட்டன் புத்தகங்களை தமிழகத்துக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஐயா PLV. ஸ்கால்ட்டனின் இரண்டு புத்தகங்களையும் வாசித்து ஸ்கால்ட்டன் முறையை பயன்படுத்தி பல்லாயிரம் பேருக்கு மருந்து கொடுத்து வெற்றி கண்டவர் ஐயா பழ.வெள்ளைச்சாமி அவர்கள். தான் அனுபவித்ததை ஹோமியோபதியர் அனைவரும் பயன்பெறவேண்டுமென அந்த புத்தகத்தின் சாரத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்.


 ஸ்கால்ட்டன் தான் தனிமங்களுக்கும், மனித வாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணு எண். அடிப்படையில் ஆய்வு செய்தவர்.ஹோமியோபதியர்கள் தனிமங்களின் வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை  வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.
  ஒரு தனிமனிதனைப் புரிந்து கொள்ள அவனை மட்டும் புரிந்து கொண்டால் போதாது.  அவன் குடும்பத்தை, அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு, அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மன நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச் சிறப்பாகக் கூறியிருப்பார் ஸ்கால்ட்டன்.
அவர் மருந்துகளை அன்னையாக, தந்தையாக, பிள்ளைகளாக, சகோதர - சகோதரிகளாக, நண்பர்களாக, தொழிலாளியாக, கலைஞனாக, அறிஞனாக, தலைவனாக மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினராகவும் பார்க்கிறார்.  ஏனெனில் மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்ந்துள்ளார்.  ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது.  அவனுக்கும்- குடும்பத்திற்கும், அவனுக்கும்-சமுகத்திற்கும், அவனுக்கும்-தொழிலுக்கும், அவனுக்கும்-கலைப் படைப்புகளுக்கும், அவனுக்கும்-ஆளுமைக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ளார்.
   ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும், சமூகத்தையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும்.  சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை ஸ்கால்ட்டன் மூலமாக நமக்கு கற்பிக்கிறார் ஐயா பழ.வெள்ளைச்சாமி.
ஸ்கால்ட்டனின் ஹோமியோபதி பார்வை ஒவ்வொரு மருத்துவருக்கும் அத்தியாவசியத்தேவை என்பதை உணர்ந்த ஐயா பிஎல்வி அதன் சாரத்தை ஸ்கால்ட்டனின் கனிமங்கள் என்ற சிறுநூலில் தந்துள்ளார்.

ஐந்தாவது புத்தகம்

ஹோமியோபதி தத்துவம் ஆர்கனான் வழியில் விளக்கம்
நாம் தமிழில் நிறைய மெட்டீரியா மெடிக்கா நூல்கள் தான் படித்து இருக்கிறோம்.  ஹோமியோபதி தத்துவம் பற்றி விளக்கும் நூல்கள் தமிழில் இல்லை அந்த குறையை தீர்க்க வந்த அற்புத புத்தகம் இதுவாகும்.
Image may contain: text
இன்றைய ஹோமியோபதியருக்கு உள்ள சிக்கலே தத்துவத்தை அறியாததால் தான். இந்த புத்தகம்  அறியாமையை போக்குகிறது. ஹோமியோபதி தத்துவமான ஆர்கனானை பிழிந்து அதன் சாறை தந்திருக்கிறது இந்த புத்தகம். ஹோமியோபதியை முழுமையாக புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது. ஹோமியோபதி என்ற வாழ்கலை விஞ்ஞானத்தை அறிந்துகொள்ள இந்த ஒரு புத்தகமே போதுமானது.
இந்த புத்தகம்
  • ·  நாம் ஏன் ஹோமியோபதி படிக்கவேண்டும்?
  • ·  இதன் தத்துவம் என்ன? ஹோமியோபதி தத்துவம் இயற்கையுடன் ஒத்துப்போகிறதா?
  • ·  துயரரை எவ்வாறு ஆய்வு செய்வது? என்னென்ன கேள்விகள் கேட்பது?
  • ·  துயரர் ஆய்வு முடிந்தபிறகு எவ்வாறு குறிகளை வகைப்படுத்துவது?
  • ·  அந்த குறிகளில் சிறப்பியல்புக்குறிகள் எவை?
  • ·  எந்த குறிகள் துயரரை தனித்துவப்படுத்துபவை?
  • ·  ஏன் துயரரை தனித்துவப்படுத்தவேண்டும்?
  • ·  ஸ்கால்ட்டன் அவர்கள் கூறியதுபோல ஆர்கனான் தத்துவம் காலாவதியாகிவிட்டதா?
  • ·  பலவிதமான புதிய வழிமுறைகள் மருந்துத்தேர்வுக்கு தற்போது உலா வருகின்றனவே. இவை ஆர்கனானுக்கு அப்பாற்பட்டவையா?
  • ·  மருந்து தேர்வுக்கு மனக்குறிகள் மட்டும் போதுமா?
  • ·  இரண்டாவது முறை மருந்து தரும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை என்ன? மருந்தை எப்போது மாற்றுவது?

என நமக்கு ஹோமியோபதி தத்துவத்தில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறது இந்த புத்தகம். என்னை பொறுத்தவரையில் புதிதாக ஹோமியோபதி படிக்கவரும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

அடுத்த முக்கிய புத்தகம்

திருமணமுறை மாற்றப்படவேண்டும்
நோயிலிருந்து மனிதனை விடுவிப்பது மட்டும் ஒரு மருத்துவருடைய பணியல்ல.ஆரோக்கியமான மனிதர்களிடம் நோயை ஏற்படுத்துகின்ற காரணிகள் எவை என்பதை அறிவதும், அவற்றை எவ்வாறு ஆரோக்கியமான மனிதர்களை பாதிக்காவண்ணம் நீக்குவது என்பதை அறிவதும் மருத்துவருடைய கடமையாகும்.
                                                   -ஆர்கனானின் ஆறாம் பதிப்பு மணிமொழி 4

 இந்த பணியினை மிகச்சரியாக செய்துவருபவர் ஐயா பழ.வெள்ளைச்சாமி அதற்கு உதாரணம் தான் இந்த புத்தகம்.
  இன்று நிலவி வரும் பல்வேறு நோய்களுக்கு அடிப்படைக் காரணம் இந்தச் சமூகச்சூழல். வறுமை,வேலையில்லாத்திண்டாட்டம், சாதி, மத வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம் மற்றும் பல.இப்படியான சமூகம் மாறாமல் மனிதனை வெறும் ஹோமியோபதி மருத்துவத்தால் மட்டும் முழுமையாக குணப்படுத்த முடியாது.மேலும் மேற்கூறிய காரணங்கள் நோயைத் தோற்றுவிக்கும் அடிப்படைக் காரணிகளாக மட்டும் இல்லாமல், நோயைத் தடுக்கும் தடைக்கற்களாகவும் இருக்கின்றன. இதிலிருந்து நோயுற்ற நிலையிலுள்ள மனிதனை நோயற்ற நிலைக்கு மாற்ற வேண்டுமென்றால் இந்தச் சமூகம் மாறவேண்டும்! இதை யார் மாற்றுவது? மற்ற எவரையும் விட ஹோமியோபதி மருத்துவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
  கடந்த 30 ஆண்டுகளாக தன்னிடம் வந்த நோயாளிகளை ஆய்வு செய்ததில் – பெரும்பாலானவர்களின் நோய்களுக்கான அடிப்படைக் காரணம் தற்போது சமூகத்தில் நிலவி வரும் திருமணமுறைதான் என்பது,  அவரது  ஆய்வில் தெரிய வந்த உண்மையாகும். இந்தத் திருமணமுறை மாற வேண்டும். அவ்வாறு மாறினால் நாம்  இந்த சமுதாயத்தை குறிப்பாக பெண்களை பல வகையான நோய்களிலிருந்து விடுவிக்கலாம். இந்த திருமணமுறையால் என்ன பாதிப்பு, எப்படி பாதிப்பு? எப்படி இந்த திருமணமுறையை மாற்றுவது? என இந்நூலில் விரிவாக அலசுகிறார் ஐயா பழ.வெள்ளைச்சாமி.

இறுதியாக

மனிதத்துவம்
இன்றைக்கு மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள், சமூகச்சீர்கேடுகள், ஆன்மீக மோசடிகள், மக்களின் குணக்கேடுகள் மற்றும் ஊழல்,இலஞ்சம்,பொய்புரட்டு,பசிபட்டினி, கொலைகொள்ளை,வன்புணர்வு என மனிதன் சீரழிந்து கிடக்கிறான். இவற்றிலிருந்து மக்கள் எவ்வாறு விடுதலை அடைவது, மதங்கள் ஏன் அன்பை போதித்தன?
ஏன் மதநிறுவனங்கள் அன்பை கைவிட்டன?
மிருகங்கள் அனைத்தும் தன் குணத்தில் ஒன்றுபோல் இருக்க மனிதன் மட்டும் ஏன் ஒன்று போல் இல்லை..
மனிதனுக்கு என தனித்துவமான குணம் இருக்கிறதா?
இருந்தால் அது என்ன?
அந்த குணத்தை மனிதன் ஏன் மறந்தான்?
கடவுள் பற்றி,
அறிவியல் ஒன்று சொல்கிறது
மதம் ஒன்று சொல்கிறது
நமது பகுத்தறிவுக்கு இவை சரியாக தோன்றவில்லை
  கடவுள் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலிடமோ, மதத்திடமோ சரியான பதில் இல்லை..
எனக்கான மிகச்சரியான பதில் யாரிடம் உள்ளது?
மனிதத்துவம் க்கான பட முடிவு



கடும்தவம் புரியும் தவசிகள் மட்டுமே ஞானமடைய முடியும் என சொல்கிறார்கள். ஆனால் நானோ மிகச்சாதாரண மனிதன் என்னால் ஞானமடைய முடியுமா? அது இருக்கட்டும், முதலில் ஞானம் என்றான் என்ன? அதை ஏன் மனிதன் அடையவேண்டும்,அது அடையக்கூடிய ஒன்றா?
சமூகத்தை ஒதுக்கிவிட்டு தியானம் செய்வது சரியா?
மனிதனுக்குள் ஏன் இந்த பிரிவினை...
சாதி,மத,இன வேறுபாடுகள் ஏன்?...
ஏன் மதத்தின் பேரில் இத்தனை கொலைகள்,கொள்ளைகள்??
அறிவியலின் பேரில் ஏன் இத்தனை சுரண்டல்கள்
அறிவியல் ஆக்கத்திற்கு பயன்படுவதை விட அழிவிற்குதான் பயன்படுகிறதே ஏன்??
நான் மதங்களை பின்பற்றுவதா?
அறிவியலை பின்பற்றுவதா??
ஒரே குழப்பமாக உள்ளதே..
மருத்துவனான நான் என்ன செய்யவேண்டும் ??/
என்ற எனது எல்லாக்கேள்விகளுக்கும் இந்த சிறுநூல் விடையளித்தது
 
இந்த நூல் என்னுடைய கேள்விகளுக்கு விடையை மட்டுமல்ல
 
எனது உள்ளத்தில் ஒரு பூகம்பத்தை  ஏற்படுத்திவிட்டது.
உங்களுக்குள்ளும் அதேபோல ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த புத்தகத்தால் முடியும்..
இந்த நூல் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை தர முயற்சிக்கிறது.
தன்னை பரிசோதிக்க முயற்சிப்பவர்கள் மட்டும் படிக்கலாம்..
ஹோமியோபதி ஆசான் பழ.வெள்ளைச்சாமி அவர்களின் 
கடும் உழைப்பில் விளைந்த நூல் இது.
----
ஐயா அவர்களின் புகழை அவரின்  புத்தகங்கள் காலாகாலத்துக்கும் சொல்லும். ஐயா அவர்களின் இலட்சியமான வீட்டுக்கு ஒரு ஹோமியோபதி மருத்துவரை உருவாக்கும் நோக்கம் நிறைவேற நாம் துணை நிற்போம். எங்களது ஆசான் ஐயா பழ.வெள்ளைச்சாமி அவர்கள் ஹோமியோபதிக்கும் இந்த தமிழ்ச்சமூகத்திற்கும் சேவை செய்து மென்மேலும் சாதனை பலபுரிந்து  பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ எல்லாம்வல்ல என் இயற்கை அன்னையை வேண்டி வணங்குகிறேன்.
திக்கெட்டும் ஹோமியோபதி பரவட்டும்!!
டாக்டர் ஹானிமன் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்.
வாழ்க தமிழ்!!!
வெல்க தமிழ்!!!
***************