செவ்வாய், 30 மே, 2017

ஒரு ஹோமியோபதி துயரர் அறிந்திருக்க வேண்டியவை



ஒரு துயரர் முதன்முறையாக ஹோமியோபதி மருத்துவரை அணுகும்போது மிகுந்த தயக்கமும், ஆர்வமும் இருக்கும். அது ஏனென்றால் ஹோமியோபதி மருத்துவரின் முதல் கலந்தாய்வு மணிக்கணக்கில் இருக்கும் என்று அவர் கேள்விப்பட்டதேயாகும்.
அதோடு மட்டுமல்லாமல் அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் மற்ற மருத்துவர் கேட்கும் கேள்விகளை விட வித்தியாசமாக இருக்குமாகையால் அவரிடம் ஒருவித குழப்பமும் இருக்கும்.
ஹோமியோபதி மருத்துவரை சந்திப்பது பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கு விளக்கமாக பதிலளிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. எதனால் ஹோமியோபதி மருத்துவர் அந்தவகை கேள்விகளை கேட்கிறார் மேலும் அதன் பதில்களை ஏன் விளக்கமாக விசாரிக்கிறார் எனவும் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹோமியோபதி மருத்துவர் உங்களின் உணவு, தூங்கும் நிலை, வியர்க்கும் அளவு,தாகம்,கனவுகள்,எண்ணங்கள்,சுபாவம்,மன இயல்பு,அன்றாட வாழ்க்கையின்போது உணர்பவை மற்றும் புரிபவற்றை பற்றி விசாரிக்கலாம். அதன் நோக்கம் ஒரு துயரரை முழுதாக புரிந்து கொள்வதும், மற்றவரிடம் இருந்து அவர் எவ்வாறு வேறுபடுகிறார் என்பதை புரிந்துகொள்வதும் ஆகும். நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து வேறுபட்டவர்கள். தோற்றம்,நடை,உடை,பாவனை,பேச்சு,யோசிக்கும் விதம்,உணர்வு,உலகத்தின் மீதான பார்வை,கோபம்,உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்,பிடித்தமான உணவு,பாதிக்கப்படும் நோய்கள் என அனைத்திலும் வேறுபட்டவர்கள். எந்த ஒரு தொற்றுநோயிலும் அனைவரும் பாதிக்கப்படுதில்லை.(eg.காலரா,டெங்கு காய்ச்சல்) ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். இது ஏன்?

நாம் ஒவ்வொருவரும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டிருப்பதால் நோய் அறிகுறியும் பாதிக்கும் தன்மையும் நபருக்கு நபர் வேறுபடும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொருவரின் எதிர்வினை(reaction) வேறுமாதிரியாக இருக்கும். ஒரேமாதிரி உருவமுடைய இரட்டையர்களிடமும் குறிப்பிடத்தக்க வேறுபாடுடைய குணாதிசயங்களை காணலாம்.

உயிராற்றல் பாதிக்கப்படுவதே நோய் என்கிறது ஹோமியோபதி. இந்த பாதிக்கப்பட்ட உயிராற்றலானது மனதிலும் உடலிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் மனிதனால் அதை தாங்க இயலாத போது நோயாக தொடங்குகிறது.

இங்குதான் மற்ற மருத்துவ முறைகளுடன் வேறுபடுகிறது. நவீன மருத்துவம் நோயை உடல்சார் நோய் அறிகுறிகளாக(கருவிகள் துணையுடன்) மட்டுமே காண்கிறது. ஆனால் ஹோமியோபதி உடல்,மனம் மற்றும் ஆற்றலில் ஏற்படும் மொத்த நிகழ்வாக பார்க்கிறது.

மனிதன் உணர்வுரீதியாகவும் செயல் ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருக்கிறான். பாதிக்கப்படும்போதும் அவ்வாறே. அதனால்தான் ஹோமியோபதி ஒருவருடைய எண்ணம்,சிந்தனை, நோயை எப்படி உணர்கிறார் என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது.

இவற்றை அடையாளம் காணுவதற்காக ஹோமியோபதி மருத்துவர் அனைத்து வகையான உணர்வுகளையும் வெளிக்கொணர்வது மிகவும் அவசியமாகும். 
துயரரின் பயம்,கனவுகள்,வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்,பொழுதுபோக்கு,குழந்தைப்பருவ வாழ்க்கை இயல்பு,கற்பனைகள்,ஆசை, வெறுப்பு,பாதிக்கும் முறைகள்,பிரம்மைகள் முதலியவற்றை ஆராய்வது முக்கியமாகும்.
ஹோமியோபதியின் முக்கிய நோக்கம் நோயை குணப்படுத்துவது மட்டுமல்ல நோய் மீண்டும் வராமலிருக்க நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதும், மனதளவிலும் உடலளவிலும் முழு ஆரோக்கியத்தை மீட்டுத்தருவதும் ஆகும்.

உங்களின் நோய் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அதைப்பற்றி கவலையில்லை ஆனால் உங்களை பற்றிய முழுத்தகவலும் அவசியம் அது மட்டுமே அவசியம்.
குணம் எனும் குறிக்கோளை அடைய ஹோமியோபதி மருத்துவர் இந்த அனைத்து விவரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.அதற்காகவே அனைத்து விவரங்களும் தேவைப்படுகின்றன. இப்போது புரிகிறதா ?

எவ்வாறு குறைகளை விவரிப்பது

ஹோமியோபதியில் மருந்து தங்கள் நோய்க்குறியின் துல்லியமான தகவல்களின் அடிப்படையிலேயே அமையும். ஹோமியோபதி மருத்துவருக்கு “”தலைவலி” எனும் விவரம் மட்டும் போதாது. அவரிடம் “எனக்கு குத்துவது போன்ற வலியுடன் கூடிய தலைவலி வலது நெற்றி மற்றும் நெற்றிப்பொட்டில் சிறிது குளிர்காற்று அடித்த உடனேயே வருகிறது. தலையை அதிகமாக அழுத்தினால் சிறிது நன்றாக உள்ளது” என விவரித்தால் அவருக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும். அதன் அடிப்படையிலேயே அவரின் மருந்துகள் அமையும்.

இடம்:
வலியோ, அரிப்போ அல்லது எந்த தொந்தரவோ அது ஏற்பட்ட சரியான இடத்தையும் உண்டான உணர்வையும் அந்த தொந்தரவு எந்த இடத்திற்கு பரவியது போன்ற விவரங்களை துல்லியமாக குறிப்பிடுக.

உணர்வு:
தொந்தரவின் போது தோன்றிய உணர்வை அப்படியே கூறுவது அவசியம். உதாரணத்திற்கு வலி மொலுக் மொலுக் என்று குத்துது, கசக்கிப்பிழியுது,பட்டை போட்டு இறுக்கிற மாதிரி இருக்குது தீயா எரியுது. ஊசி குத்துறாப்ல இருக்குது,குடையுது, போன்ற உணர்வுகளை நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்களோ அவ்வாறே அதே வார்த்தைகளாக வெளிப்படுத்த வேண்டும்.

உங்கள் தொந்தரவு சில காரணங்களால் அதிகமாகலாம் குறையலாம். எவை எவை உங்கள் நோயை அதிகப்படுத்துகின்றன குறைக்கின்றன என்பதை தெரிவியுங்கள்.

கழிவுகள்:
உங்களுக்கு மூக்கு, காது, வாய், கண், புண், பவுத்திரம்,தோல் சிரங்கு மற்றும் முக்கிய உறுப்புகளில் வரும் கழிவுகள் பற்றிய விவரங்கள் கீழ்க்கண்டவாறு தெரிவியுங்கள்.
கழிவு எவ்வளவு எப்போது வருது எப்போது அதிகமாகுது குறையுது?
கழிவின் அடர்த்தி,மெலிசாவா?, கட்டியாவா?, நூல் போன்றா?
ஜெல்லி போன்றா?,அல்லது முட்டையின் வெள்ளைக்கரு போலவா?, தண்ணீர் போன்றா?, பிசின் போலவா? அல்லது எது போல?
கழிவின் மணம், நாற்றம், அதனை பற்றி உங்கள் குறிப்பு?
கழிவு தன்மை அரிக்கும் தன்மையா?,புண்ணாக்கும் தன்மையா? அல்லது எப்படி?

உங்களின் முக்கிய நோய்:
முடிந்தவரை உங்களின் நோவைப்பற்றி உங்கள் மனதில் தோன்றிய வார்த்தைகளை அப்படியே உபயோகியுங்கள்.

1. உங்கள் நோய் என்ன?
2. எப்போதிருந்து ஆரம்பித்தது?
3. எந்த பகுதியில் பாதிப்பு?
4. உங்கள் நோவுடன் தொடர்புடைய உணர்வுகளை, நீங்கள் அனுபவித்த உணர்ச்சிகளை அப்படியே விவரியுங்கள். உதாரணத்திற்கு,
a. வலி (என்ன வகை:குத்தும் வலியா,குடையும் வலியா,எரியும் வலியா,பிசையும் வலியா, இழுக்கும் வலியா etc.)
i. ஊசியால் குத்துவது போன்ற உணர்வு etc.
ii. சூடு அல்லது குளிர் உணர்வு
iii. மரமரப்பு
b. கோபம் அல்லது பயம்
5. உங்கள் நோவை அதிகப்படுத்தும் அல்லது தணிவிக்கும் காரணிகள்…
6. எது உங்களை அதிகம் தொல்லைப்படுத்துகிறது? அது உங்கள் வாழ்க்கையை எந்த விதத்தில் பாதிக்கிறது?
7. நோய் இருப்பதைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்?
8. நோய் இருப்பதால் என்ன பாதிப்பு உங்களுக்கு?
9. எதற்கு பின் நோய் வந்தது? அதைப் பற்றிய உங்கள் உணர்வுகளை விவரியுங்கள்.
10. மற்ற நோய்கள் எப்போது தோன்றியது? மனம் மற்றும் உடல் கோளாறுகள்.(அவை உங்களின் முக்கிய நோய்க்கு தொடர்பில்லாதவையாக இருந்தாலும் தெரிவிக்க.
11. நோயினால் உங்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளன

உங்கள் மனமும் நோயுடன் தொடர்புள்ளது. மனமும் உடலும் பாதிக்காமல் நோயானது நீடித்து இருக்காது.அதனால் மனம் தொடர்பான உங்கள் பதில்களும் அத்தியாவசியமானவை.


(மனம்)*
1. உங்களை அதிகம் பாதிக்கும் காரணிகள் எவை? அதைப் பற்றிய உங்கள் உணர்வுகள்? என்ன உணர்கிறீர்கள் ? ஏன் பாதிப்பு?

2. எவற்றுக்கெல்லாம் உணர்ச்சிவயப்படுவீர்கள்? உங்கள் மனதைப் புண்படுத்தும் விசயங்கள் எவை ? எது உங்களை அதிகம் புண்படுத்துகிறது? அப்போது என்ன உணருகிறீர்கள்? எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? என்ன எதிர்வினை புரிவீர்கள்?

3. ஏதாவது நிகழ்வு உங்களை ஆழமாகப் பாதித்துள்ளதா? அதைப்பற்றி விரிவாக விவரியுங்கள். அதனுடன் தொடர்புடைய எண்ணங்கள்/உள்ளுணர்ச்சிகள்/உணர்வுகள் என்ன? அந்த நேரத்தில் உங்களுக்கு தோன்றிய அதனுடன் தொடர்புடைய எண்ணங்கள்/உள்ளுணர்ச்சிகள்/உணர்வுகள் எதிர்வினை என்ன?
4. (குறிப்பு:நிகழ்வு நடந்து பல ஆண்டு கடந்து இப்போது எந்த பாதிப்பும் இல்லையெனினும் ,அப்போது நிகழ்வு நடந்த போது ஏதும் பாதித்திருந்தால் அதை விவரியுங்கள்.)

5. உங்கள் மனதில் உள்ள கவலை,பயம்,சோகம்,துக்கம்,பதட்டம்,பிரம்மை இவற்றை விரிவாக விவரியுங்கள்.இவற்றின் பின்புலம் என்ன? எது உங்களை அதிகம் பாதிக்கிறது? அதைப்பற்றிய உங்கள் உள்ளுணர்ச்சி என்ன? கவலை,பயம்,சோகம்,துக்கம்,பதட்டம்,பிரம்மை இவற்றில் எது உங்களை மோசமாக பாதிக்கிறது.

6. உங்களின் விருப்பம்,ஈடுபாடு மற்றும் பொழுதுபோக்கு என்ன? எதில் உங்களூக்கு அதிக விருப்பம் ஏன்?

7. உங்கள் மனதில் அடிக்கடி தோன்றும் எண்ணங்கள் எவை ? என்னவிதத்தில் உங்களை தொல்லைப்படுத்துகிறது?

கனவுகள்

கனவுகள் உங்களுக்குள் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பை பற்றி சொல்லுங்கள்.
வித்தியாசமான,கெட்ட கனவுகள்,
திரும்ப திரும்ப வரும் கனவுகள் ,
உங்களோடு எந்த வகையிலும் தொடர்பில்லாத கனவுகள் வந்திருப்பின் அவற்றை பற்றி சொல்லுங்கள்.
சிறுவயதிலிருந்து தற்போதுவரை உங்கள் நினைவில் உள்ள கனவுகளை கூறுங்கள்.
சிறுவயதிலிருந்து தற்போதுவரை உங்களை ஆழமாக பாதித்த கனவு பற்றி கூறுங்கள்.

உங்கள் நோய் துவங்க சற்றுமுன் ஏதும் கனவுகள் வந்திருப்பின் அது பற்றி கூறுங்கள்.?
உங்கள் வாழ்க்கையின் குறிப்பிட்ட நேரங்களில் திரும்பதிரும்ப வந்த கனவுகள் பற்றி கூறுங்கள்.

கர்ப்பகாலத்தில் வந்த கனவுகள் பற்றி..
கனவுகளை நீங்கள் கண்டவாறே தெரிவியுங்கள். சுருக்கிச் சொல்லவோ அல்லது தவறாகவோ ,மறைத்தோ சொல்லாதீர்கள்.

நீங்கள் கண்ட கனவின் எந்த பகுதி மிக முக்கியமானதாக உங்களுக்கு படுகிறது? அதை சற்று விளக்குங்கள்..
கனவுடன் தொடர்புடைய உங்கள் எண்ணம்/பயம்/புரிதல் என்ன? சற்று விளக்குங்கள்..
கனவு காணும் போதுஅல்லது கண்டு விழித்த பிறகு உங்கள் உடலில் நீங்கள் ஏதும் உணர்வுகள் / அதிர்வுகள் / இயக்கங்கள் உணர்ந்திருந்தால் அதனை எடுத்துரையுங்கள்.

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு முழு கனவும் ஞாபகமில்லாத பட்சத்தில் அந்த கனவின் முக்கிய பகுதியை பற்றி குறிப்பிடுங்கள்.



இளமைக்கால வரலாறு
சிறுவயதில் உங்களை மிகவும் பாதித்த நிகழ்வுகளை விளக்குங்கள், அவை பற்றி உங்களின் உள்ளுணர்ச்சிகள்/எண்ணங்கள்/புரிதல்கள்/உணர்வுகள் மற்றும் உங்களின் எதிர்வினை என்ன?
உங்களின் பயம்?
கற்பனைகள்/சிந்தனைகள்/ பிரம்மை பயங்கள் அதிகம் ஞாபகத்தில் உள்ளவை பற்றி….
குழந்தையாக இருக்கும்போது என்னவாக ஆக ஆசைப்பட்டீர்கள்?
சிறு வயதில் வறுமையால்;தந்தையின் ஆதிக்கத்தால்,ஹாஸ்டல் வாழ்க்கையால்; பாசத்துக்குரியவர்களின் பிரிவால் ஏதும் பாதிக்கப்பட்டிருப்பின் அது பற்றி…….
காய்ச்சல்/வயிற்றுப்போக்கு/இருமல்/வாந்தி போன்றவை இருக்கும்போது,அல்லது பிறகு/முன் ஏதும் பயங்கர கனவுகள் வந்திருப்பின் அவற்றை விளக்குங்கள்.

தூக்கம்
தூங்கும் நிலை.(மல்லாக்கவா?,குப்புறவா?ஒருக்களிச்சா? அல்லது எப்படி) எந்த நிலையில் தூக்கம் நன்றாக வரும்? எந்த நிலையில் தூக்கம் வராது?

தூக்கத்தின் போது
குறட்டை?
பல் நெரித்தல்?
எச்சில் ஒழுக்கல்?
வியர்வை?
கண் அல்லது வாய் திறந்திருக்குமா?
நடப்பது அல்லது பேசுவது?
முனகல்/உளறல் அல்லது அழுகை?
அமைதியின்மை? துடிப்புடன் விழித்தல்?

உங்கள் தூக்கத்தில் ஏதும் வித்தியாசமிருப்பின் அதைப்பற்றி…(தூக்கக்கலக்கம்,தூக்கமின்மை etc.) விவரத்துடன்.
பசி,தாகம்
பசி எப்படி?
எப்போது பசி அதிகம்?
ரொம்ப நேரம் பசியுடன் இருந்தால் என்ன ஆகும்?
எப்படி சாப்பிடுவீர்கள்?(விரைவாக/மெதுவாக etc.)
தாகம் எப்படி?/அளவு?
தாகம் ஏதும் குறிப்பிட்ட நேரத்தில்?
சுவையில் ஏதும் மாற்றம் உணர்கிறீர்களா?

மேலும் உங்கள் உணவு முறை பற்றி:

பிடித்த/பிடிக்காத/ஒத்துக்கொள்ளாத
உணவு வகைகள்/
தின்பண்டங்கள்,நொறுக்குத்தீனி/பானங்கள்/
ஆகியவற்றையும் கூறவும்.

மலம் சார்ந்த பிரச்சனைகள்

மலம் தொடர்பான தொல்லைகள் ?
மலம் அளவு,நிறம்,வாடை,தன்மை..?
மலம் கழித்தல் எப்போது? எத்தனை தடவை?
அவசரமாக வருவது எப்போது?
குடல் கோளாறுகள் ஏதும்?
மூலம்,பவுத்திரம் இருப்பின் அது பற்றி…
இரத்தப்போக்கு இருந்தால் அது பற்றி..
மலம் முக்கிப்போகவேண்டியுள்ளதா?
வாயுக்கோளாறுகள் இருப்பின் அதைப்பற்றி?
வாயு பிரிந்தபின்/பிரியும்முன் எவ்வாறு உணர்வீர்கள்?

சிறுநீர் பிரச்சனைகள்

சிறுநீர் பிரச்சனை ஏதும் இருப்பின்?
அளவு,,நிறம்,தன்மை, படிவு..?
ஏதும் சிறுநீர் வாடை இருப்பின் ? எது போல?
சிறுநீர் கழிக்கும்போது / கழிக்கும் முன்/ கழித்தபின் ஏதும் உபாதைகள்
சிறுநீர் எப்படி மெதுவாகவா? சொட்டு சொட்டாகவா? அடைத்து போகிறதா?
படுக்கையில் சிறுநீர் கழித்தல்,தன்னையறியாமல் போதல்
சிறுநீரகப் பாதிப்பு ஏதும் உள்ளதா?
கல் அடைப்பு போன்ற உபாதைகள்..
வியர்வை/காய்ச்சல்/குளிர்
வியர்வை எப்படி?,எவ்வளவு? மணம்,குணம்,நிறம்,தன்மை?
எந்த பகுதிகளில் அதிக வியர்வை?
வியர்க்கும்போது,அல்லது முன்,பின் ஏதும் அறிகுறிகள்?
காய்ச்சல்/குளிர் எப்போது?
அப்போது வேறு என்ன என்ன தொந்தரவுகள் வருகின்றன?
உடலின் எந்த பகுதிகளிலாவது சூடோ அல்லது குளிர் உணர்ச்சியோ குறிப்பிட்ட நேரத்தில் உணர்ந்தது உண்டா?
சளி-இருமல் பற்றி
அடிக்கடி சளி பிடிக்குதா? எவ்வப்போது?
சளியின் அளவு, நிறம்,மணம்,குணம்,தன்மை etc.
மார்பு அல்லது இதயப்பிரச்சனைகள் உள்ளனவா?
பேசுவதில் ,குரலில் ஏதும் பிரச்சனை உள்ளதா?
மூச்சு விடுவதில் ஏதும் சிரமம் இருக்கிறதா?
இருமல் இருந்தால் அதனைப்பற்றி?
தூசி,புகை,குளிர்பானங்கள் போன்றவையால் பாதிப்பா?
குறிப்பிட்ட நேரத்தில் வருகிறதா?

பிறப்பு உறுப்புகள் செயல்பாடு
(ஆண்களுக்கு):
என்னென்ன பாதிப்புகள் உள்ளன என விவரிக்க வேண்டும்
பெண்களுக்கு:

மாதவிடாய் எப்படி ? நேர ஒழுங்கானதா? தாமதமா? வலியுடனா?
முதல் மாதவிடாய் எப்போது வந்தது?
என்ன தொந்தரவுகள் ? ஒழுக்கு எத்தனை நாள் நீடிக்கிறது?
மாதவிடாய் ஒழுக்கின் நிறம்,மணம்,தன்மை,அளவு..?
மாதவிடாய் கறை நீக்க இயலாததாய் இருக்கிறதா?
மாதவிடாயின் போது ,முன்பு,பின்பு ஏற்படும் பாதிப்புகள்..?
வெள்ளைப்பாடு இருப்பின் எப்போது ? அதன் அளவு ,நிறம்,தன்மை,மணம்,கறைப்படுத்துகிறதா? மாதவிடாய் மற்றும் வெள்ளைப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு?
இறுதி மாதவிடாய் தருணத்தில் என்ன என்ன கோளாறுகள்..?
கர்ப்பப்பை கீழிறங்கும் உணர்வுகள் ஏதும்?
மாதவிடாய் இல்லாத சமயத்தில் ஏதேனும் ஒழுக்கு உள்ளதா? இருந்தால் அது பற்றி?
கழிவு அரிப்பு ஏற்படுத்துகிறதா?,புண்படுத்துகிறதா?
மார்பகப்பிரச்சனைகள் ஏதும் உள்ளதா?
மார்பகக்கட்டி,கர்ப்பப்பைக்கட்டி பிரச்சனை உள்ளதா?
தைராய்டு,மற்றும் ஹார்மோன் கோளாறுகள் ஏதும் உள்ளனவா
வேறு என்ன என்னவெல்லாம் தொந்தரவுகள் இருக்கிறது அனைத்தையும் கூறவும்
தலைசுற்றல்,கிறுகிறுப்பு ?
மயக்கம்?
தலைவலி ,ஒற்றைத்தலைவலி?
பார்வைக்கோளாறுகள்?
காதுகேட்புத்திறன்,இரைச்சல்,சீழ் வடிதல்
மூக்கு,நுகர்தல் தன்மை?,இரத்தம் வடிதல்?
முகபாவம்…?
வாய் மற்றும் சுவை..?
உதடு,உதடு வெடிப்பு,தோல் உரிதல்,நாக்கு,நாக்கில் மாசுபடிவம்,புண்..?
பல்,சொத்தைப்பல்,ஈறில் இரத்தம் வடிதல்,ஈறு வீக்கம்
தொண்டை,டான்சில்,விழுங்க முடியாமை
கல்லீரல்,கணையம்,மண்ணீரல் மற்றும் பித்தப்பை கோளாறுகள் இருந்தால் அது பற்றி..?
கைகால்,முதுகு,மூட்டுவலி அவற்றைப்பற்றி விரிவாக..
என்ன மாதிரியான வலி,வலி இடம் விட்டு இடம் மாறுகிறதா?
பரவுகிறது எனில் எப்படி?
தோல் சம்மந்தமான பிரச்சினைகள் என்னென்ன? அரிப்பு,பொக்குளம்,மரு,பரு,ஆணி,சொறிசிரங்கு அவற்றை பற்றி விரிவான விளக்கம்?
தோலில் ஏற்பட்ட நிறமாற்றம் எங்கே? எப்போதிருந்து?
நகம் மற்றும் அதனைச்சுற்றி ஏதெனும் மாறுபாடுகள்?
முடி கொட்டுதல்,நிறமாற்றம்,வறண்டுபோதல்,பிசுபிசுக்கு,முடி வளராமை,தேவையற்ற இடங்களில் வளர்ச்சி,பொடுகு,பேன்
புண் ஏற்பட்டால் உடனே ஆறிவிடுமா ?எவ்வளவு நாள் ஆகும்?
தழும்பு இருந்தால் அது பற்றி..?
எளிதில் இரத்தம் வருமா?
உங்கள் கோளாறுகள் எந்தப்பக்கம்? ஒரே பக்கமா?,அல்லது மாறுகிறதா?பரவுகிறதா?
உங்கள் உடலில் ஏதும் நடுக்கம்,பலவீனம் இருந்தால் எந்தப்பகுதியில்?எப்போது?
மறதி,கூச்சம்,எரிச்சல்,பழக்கவழக்கங்கள் மற்றும் உங்கள் வேறு மனரீதியான பாதிப்புகள்..இருந்தால் அது பற்றியும் தெரிவியுங்கள்

உங்களைப் பாதிக்கும் காரணிகள் குறித்து:

இந்தப்பகுதி மிக முக்கியம்,அவசரப்படாமல் நன்கு யோசித்து எவை எவை? என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது ,உதாரணத்திற்கு:சூடான தட்பவெப்பம் தலைவலி வந்தால் அதனை குறிக்கவும்,நடந்தால் கால்வலி, பயணம்-வாந்தி போன்றவை


மேலும் சில கேள்விகள்

எந்த பருவகாலம் உங்களுக்கு இதமாக இருக்கும்?
எந்த நேரம் அல்லது பகல்,இரவு எது உங்களுக்கு இதமாக அல்லது மோசமாக இருக்கும்?
உங்கள் உடலுக்கு எந்த நிலை உகந்ததாக இருக்கும்?(உட்கார்தல்,நிற்றல்,படுத்தல்)
என்ன விளையாட்டு விளையாடுவீர்கள்?
சாப்பாட்டுக்கு முன்/பின் எப்படி உணர்வீர்கள்?

குறிப்பு
உங்களின் அனைத்து மருத்துவ பரிசோதனை விவரங்களையும் ,பாதிக்கப்பட்ட பகுதிகளின் பரிசோதனைத் தகவல்களையும் கூறவும்.
உங்களின் தற்போதைய மற்றும் பழைய மருத்துவ ஆவணங்களை குறிப்பிடவும்
இதற்கு முன் ஹோமியோபதி சிகிச்சை எடுத்திருப்பின் அதை குறிப்பிடவும்

இவ்வளவும் நீங்கள் தெரிவித்தால் தான் உங்களுக்கு மருந்து தேர்வு செய்ய ஒரு ஹோமியோபதி மருத்துவருக்கு உபயோகமாக இருக்கும்.

ஆகவே இனி ஹோமியோபதி மருத்துவர் இவ்வளவு கேள்விகளை ஏன் கேட்கிறார் என எரிச்சல் அடைய வேண்டாம்..

பொறுமையாக பதில் அளியுங்கள்
விரைவாக நலம் பெறுங்கள்

 
 

*article based on
homoeopathy philosophy


2 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான தகவல் ஐயா
    ஒரு மருத்துவர் இன்று நான் 40 நோயாளியை பார்த்து மருத்துவம் செய்தேன் என்பது அலோபதி மருத்துவர்.....

    ஆனால்......
    இன்று நான் 10 நோயாளிக்கு மருத்துவம் அளித்தேன் என்பது
    மக்களின் வரப்பிரசாதம் ஹோமியோபதி மரித்துவர்......

    ஒரு நோயாளியை 5 நிமிடத்தில் விசாரித்து மருந்து கொடுப்பது என்பது எந்த விதத்திலும் நோய் குணமாகாது என்பதை அருமையாய் இந்த கட்டுரையின் வாயிலாக விலக்கியமைக்கு மிக்க நன்றி.....

    தொடரட்டும் தங்களின் சேவை.....

    பதிலளிநீக்கு