செவ்வாய், 25 மார்ச், 2014

ஜான் ஸ்கால்டனின் பார்வையில் ஹோமியோபதி-பழ.வெள்ளைச்சாமி

ஜான் ஸ்கால்டனின் பார்வையில் ஹோமியோபதி

உலகத்துப்பொருட்கள் எல்லாம் தனிமங்களால் உண்டானவை. தனிமங்கள் அனைத்தையும் பற்றி அறிவது என்பது அனைத்துப்பொருட்களையும் பற்றி அறிவதற்குச் சமமாகும்.ஹோமியோபதியில் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் மருந்துகளாகக் கருதப்படுகின்றன.ஆனால் இந்தப் பிரபஞ்சத்திலோ கோடான கோடிப் பொருட்களும் உயிர்களும் இருக்கின்றன்.அவை அனைத்தையும் நாம் நிரூபணம் செய்ய முடியுமா? அல்லது வீரியப்படுத்தத்தான் முடியுமா? ஆனால் இதைவிட எளிமையானது அனைத்துப் பொருட்களுக்கும் ஆதாரமாய் விளங்குகின்ற தனிமங்களை நிரூபணம் செய்வதும் அவைகளை மருந்துகளாகப் பயன்படுத்துவதும்தான்!

ஹோமியோபதியில் தனிமங்கள்

ஹோமியோபதியில் ஹானிமன் காலந்தொட்டு பல தனிமங்கள் தனியாகவும் கூட்டுப் பொருட்களாகவும் நிரூபணம் செய்யப்பட்டு மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் தனிமங்களின் அணுஎண் பட்டியலின்படி அனைத்துத் தனிமங்களும் பயன்படுத்தப்படவில்லை.

முதன்முதலில் தனிமங்களின் அணுஎண்படியான பட்டியலின்படி மருந்துகளை ஆய்வு செய்யும் பணியை ஜெர்மி ஷெர் மேற்கொண்டார்.அவரைத் தொடர்ந்து இராஜன் சங்கரன் அவர்களும் மற்றும் நெதர்லாந்து நாட்டுக்காரரான ஜான் ஸ்கால்டன் அவர்களும் தனிமங்களை ஆய்வு செய்து ஹோமியோ மருந்துகளாகப் பயன்படுத்தி அவைகளின் மருத்துவப் பண்புகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த டாக்டர் ஜான் ஸ்கால்டன் ஹோமியோபதிக்குச் செய்து வரும் பணி மிகச் சிறப்பானது.அவர் தாம் எழுதிய இரண்டு புத்தகங்களிலும்
1.HOMOEOPATHY AND MINERALS
2.HOMOEOPATHY AND THE ELEMENTS
தனிமங்களின் அணுஎண் படியான பட்டியலை அடிப்படையாகக் கொண்டு,மனிதனுடைய பல்வேறு நிலைகளை, கருவுற்றதிலிருந்து அவன் அந்திமக்காலம் வரை விவரித்துள்ளார்.ஒவ்வொரு நிலையும் தனியானது போல் தோன்றினாலும் அது தனியானது அல்ல. அது அடுத்து வரும் நிலையால் மறுக்கப்பட்டு அது அறாத்தொடர்ச்சியாக ஏழு நிலைகளை மனிதவாழ்வு எய்துவதைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

தனிமங்களுக்கும்,மனிதவாழ்வுக்கும் உள்ள உறவை அவர் தனிமங்களின் அணுஎண் அடிப்படையில் ஆய்வு செய்து கூறியிருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.அதன் சிறப்பை மேலும் அறிந்துகொள்ள இன்னும் ஆழமாக தனிமங்களின் வேதியியலைப் படிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தாமல் வலியுறுத்துகிறார்.

இவ்விரு புத்தகங்களையும் எழுதுவதற்கு கனிமங்களைப் பற்றியும்,மனிதவாழ்வைப் பற்றியும் மிகவும் ஆழமாகப் பரிசீலித்துள்ளார்.அதனால் அவர் ஆய்வுமுறை பலருக்குக் குழப்பத்தையும்,ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் இவ்விரு புத்தகங்களின் பயன் மிகச் சிறப்பாக உள்ளது.

ஹோமியோபதியில் நோய்க்கு மருந்தல்ல:மனிதனுக்குத்தான் மருந்து என்று கூறுகிறோம்.அதனால்,ஒவ்வொரு மனிதனிடத்திலும் குணப்படுத்த வேண்டியது எது என்பதையும்,அதேபோல் ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதையும் அறிய விழைகிறோம்.மேற்கூறியபடிதான் டாக்டர் ஹானிமன் முதல் இன்றுவரை தூய ஹோமியோபதியைச் செய்பவர்கள் செய்துவருகிறார்கள்.அவர்கள் அனைவரும் ஒவ்வொரு மருந்தையும் ஒரு செயற்கை நோயாளராகப் பார்த்தார்கள்.ஒவ்வொன்றின் தனித்துவத்தின் அடிப்படையில் அவைகள் வேறுபடுத்திப் பார்க்கப்பட்டன.

ஆனால்,ஸ்கால்டன் அவர்கள் யாரும் இதுகாறும் பார்க்காத புதிய கோணத்தில் மருந்துகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு மனிதனாகப் பார்க்கிறார்.ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையானவன் தான் என்றாலும், அந்தத் தனித்தன்மை கூட திடீரென்று தோன்றியது இல்லை.அது மனித உறவுகளைச் சார்ந்தது என்பதையும்,மனித உறவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைபொருட்கள்தான் என்பதையும் மிகவும் சரியாக உள்வாங்கி எழுதியுள்ளார்.

அவர்,அதனால் ஒவ்வொரு மனிதனையும் தனி மனிதனாக மட்டும் பார்க்காமல் குடும்பம்,சமூகம் சார்ந்தவனாகப் பார்க்கிறார்.எந்த ஒரு மனிதனும் தனியாக வாழ முடியாது என்பதையும்,அவனுடைய வாழ்நிலை அவனால் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும்,அது சமூக உறவுகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் மிகச் சரியாகப் பரிசீலித்து இருக்கிறார்.

ஒரு மனிதனுடைய மனமானது ஒவ்வொரு மனிதனுக்கும் திடீரென்று வந்ததாகவோ அல்லது பிரபஞ்ச மனத்திலிருந்து வந்ததாகவோ கருதப்படுவதை புறக்கணிக்கும் வண்ணம்,ஒவ்வொருவருடைய மனமும் அவனுக்குள் உள்ள அக முரண்பாடுகளின் விளைவாகவும்,அவனுக்கும்,பொருளியல்,அரசியல் சார்ந்து குடும்ப சமூக உறவுகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாகவும் தோன்றியது தான் என்பதை மிகச் சரியாகப் புரிந்துள்ளார்.

எனவே,ஒரு தனிமனிதனைப் புரிந்துகொள்ள அவனை மட்டும் புரிந்துகொண்டால் போதாது,அவன் குடும்பத்தை,அவன் வாழும் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கும்,அவன் குடும்பத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாட்டையும் புரிந்து கொண்டு,அந்த முரண்பாடுகளின் விளைவாக அவன் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் அவனைத் தனித்துவப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

அவர் மருந்துகளை அன்னையாக,தந்தையாக,பிள்ளைகளாக,சகோதர-சகோதரிகளாக,நண்பர்களாக,தொழிலாளியாக,கலைஞனாக,அறிஞனாக, தலைவனாக மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினராகவும் பார்க்கிறார்.ஏனெனில்,மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்ந்துள்ளார்.ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள அவனைத் தனியாகப் பார்க்க முடியாது.அவனுக்கும்,குடும்பத்திற்கும் -அவனுக்கும் சமூகத்திற்கும்-அவனுக்கும் தொழிலுக்கும்-அவனுக்கும் கலைப்படைப்பிற்கும்-அவனுக்கும் ஆளுமைக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ளாமல் அவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை தெளிவாக உணர்ந்துள்ளார்.

அவர் ஓர் உண்மையைச் சொல்லுகிறார்.ஓர் அலோபதி மருத்துவர் நோய்க்கூறு இயலையும்,நுண்ணுயிரி இயலையும் எவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டுமோ அதைவிட ஒரு ஹோமியோ மருத்துவர் மனிதனையும்,சமூகத்தையும் மிக ஆழமாகப் படிக்க வேண்டும். சிறந்த சமூக அறிவு இல்லாமல் ஒரு நல்ல ஹோமியோ மருத்துவராக இருக்க முடியாது என்பதை இவர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.

இவர், இவ்வாறு மருந்துகளை பார்ப்பதற்கு ஆதாரங்களை எவ்வாறு திரட்டினார் என்பதற்கு போதிய விளக்கங்கள் இல்லை. பலசமயம் புதிராக இருக்கிறது.இருந்தாலும், அவர் கூறியபடி மருந்துகள் பயன்படுத்தப்படும்போது அவைகள் மிகவும் சிறப்பாக குணமளிக்கின்றன.

ஒரு மனிதனுக்கு நோய் தோன்றிய காலத்தில் அவனுக்கும் குடும்பத்திற்கும்,சமூகத்திற்கும் உள்ள முரண்பாடு என்ன என்பதை அறிந்து,அந்த முரண்பாட்டின் விளைவாகத் தோன்றிய நிலைப்பாட்டுக்கு (state) தகுந்த மருந்தைத் தேர்வு செய்தால், அந்த மருந்து அவனுக்கு உரிய மருந்தாகிறது.அவனை நலப்படுத்துகிறது.

ஜான் ஸ்கால்டனைப் பின்பற்றும்போது குறிகளுக்குக் (symptoms) கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.

மருந்துகாண் ஏட்டைப்(repertory) பயன்படுத்தத் தேவையில்லை.

ஒட்டுமொத்தக் குறிகளைக் காண வேண்டிய அவசியமில்லை.
மியாசம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. துயரரை அறிவது எளிமையாக்கப்படுகிறது.

ஆக,ஜான் ஸ்கால்டனின் இந்தக் கண்டுபிடிப்பு ஹோமியொபதித் துறையில் ஒரு புதிய சகாப்தம். அவருடைய ஆய்வு முறையை மேலும் செழுமைப்படுத்தும் போது ஹோமியோபதி மேலும் சிறப்படையும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக