திங்கள், 10 மார்ச், 2014

அன்பே கடவுளின் நியதி -பழ.வெள்ளைச்சாமி

                  அன்பே கடவுளின் நியதி



அன்பே கடவுளின் நியதி
நீங்கள்
அன்பு செலுத்த கற்பதற்காகவே
வாழ்கிறீர்கள்
நீங்கள்
வாழக் கற்றுக் கொள்வதற்காகவே
அன்பு செலுத்துகிறீர்கள்.

இந்தப் பாடத்தை விட
மனிதனுக்கு
எந்தப் பாடம் தேவைப் படும்!

அன்பு செலுத்துவதில்
அப்படி என்னதான் இருக்கிறது?
நேசிப்பவரை முழுமையாக
உட்கிரகித்து
எப்போதும்
இருவரும் ஒருவராக
ஆகுவதைத் தவிர!

ஒருவர்
யாரை நேசிப்பது?
எதை நேசிப்பது?

வாழ்வு மரத்தின்
ஒரு இலையை மட்டும்
தேர்ந்தெடுத்து
இதயத்தைத் திறந்து
அதன் மீது
பாசத்தை பொழிய முடியுமா!?
அப்படியானால்
அந்த இலையைத் தாங்கிய
வாது என்னாவது?
அந்த வாதைத் தாங்கிய
மரம் என்னாவது?
அந்த மரத்தைச் சுற்றியுள்ள
பட்டை என்னாவது?
பிறகு
பட்டை,மரம்
வாது இலை
இவைகளுக் கெல்லாம்
உணவளிக்கும்
வேர் என்னாவது?

அந்த வேரைப் பற்றியுள்ள
மண் என்னாவது?
பிறகு
அந்த மண்ணிற்கு
உரம் அளித்த
அந்த கதிரவன்
என்னாவது?
அந்தக் கடவுள்
என்னாவது?
அந்தக் காற்று
என்னாவது?

ஒரு மரத்தின்
ஒரு சின்ன இலை மட்டும் தான்
உன் அன்புக்குத் தகுதி என்றால்
அந்த ஒட்டுமொத்த
மரத்துக்குமான
அன்பு என்னாவது?

எப்போது
அன்பு ஒரு முழுமையிலிருந்து
ஒரு பகுதியை மட்டும்
பார்க்கத் தொடங்கி விட்டதோ
அப்போதே
அது அதன்
துயரக் கல்லறையைக்
கட்டத் தொடங்கி விட்டது.

நீங்கள் சொல்லலாம்
"ஒரு மரத்தில்
எத்தனை எத்தனை இலைகள்
சில ஆரோக்கியமானவை
சில நோயுற்றவை
சில அழகானவை
சில பிரம்மாண்டமானவை
சில குள்ளமானவை
இவ்வாறு
வேறுபாடு நிறைந்த வற்றில்
நாம் தேர்ந்தெடுத்துப் பறிக்காமல்
என்னதான் செய்வது?.

நான்
உங்களுக்குச் சொல்வேன்
நோயுற்று வெளுத்துப் போனதிலிருந்துதானே
புதிய ஆரோக்கியமானது வருகிறது.
மேலும்
நான் சொல்வேன்
அழகு கூட 
இந்த
அசிங்கம் வரைந்த
ஓவியம் தான்!

குள்ளமானது இல்லாவிட்டால்
இந்தப் பிரமாண்டமானது
என்பது ஏது?
பிரமாண்டத்திற்கு
வடிவம் கொடுத்ததே 
இந்தக் குள்ளமானது தானே!

நீங்கள்
ஒரு
வாழ்வு மரம்
அதனால்
உங்களை நீங்களே
துண்டாக்கிக் கொள்வதிலிருந்து
எச்சரிக்கையாக
இருங்கள்.

ஒரு கனிக்கு எதிராக
ஒரு கனியைத் திருப்பிவிடாதீர்கள்.
ஒரு இலைக்கு எதிராக
ஒரு இலையைத் திருப்பிவிடாதீர்கள்
ஒரு கிளைக்கு எதிராக
ஒரு கிளையைத் திருப்பிவிடாதீர்கள்.
மரத்துக்கு எதிராக 
வேரைத்திருப்பிவிடாதீர்கள்.
முடிவில்
அந்தத் தாய்மண்ணுக்கு எதிராக
மரத்தையே திருப்பிவிடாதீர்கள்.

நீங்கள்
எப்போது முழுமையின்
ஒரு பகுதியை மட்டும்
நேசிக்கத் தொடங்கீர்களோ
அப்போது தெளிவாக
இதைத் தானே செய்கிறீர்கள்.

நீங்கள்
ஒரு
வாழ்வு மரம்!
உங்களுடைய
வேர்கள் எங்கும் பரவியுள்ளன
உங்கள்
கிளைகளும் இலைகளும்
எங்கும் இருக்கின்றன
உங்கள்
இனிய பழங்களை
எல்லோரும் சுவைக்கிறார்கள்.

அந்த மரத்தில்
எப்படிப் பட்ட பழங்கள் இருந்தாலும்
அந்த மரத்தின்
கிளைகளும் இலைகளும்
எப்படிப் பட்டவைகளாக
இருந்தாலும்
அந்த மரத்தின் வேர்கள்
எப்படிப் பட்டவையாக இருப்பினும்
அவை உங்களுடைய பழங்கள்
அவை உங்களுடைய கிளைகள் இலைகள்
அவை உங்களுடைய மரம்.
உங்களுடைய மரம்
இனிமையான மணமுள்ள பழத்தைத்
தாங்கி யிருந்தால்
உங்களுடைய மரம்
பசுமையாகவும் பலம் வாய்ந்ததாகவும்
இருக்குமானால்
அதற்கு காரணம்
நீங்கள்
வேர்கள் மூலம்
அந்த மரத்திற்கு ஊட்டிய
சாறுதான் என்பதை
மறந்து விடாதீர்கள்.

அன்பே வாழ்வின் சாரம்
அப்போது
வெறுப்பு என்பது
சாவின் சீழாகி விடும்
அதனால்
இங்கே
அன்பு குருதியைப்போல
நாளங்களில் தங்குதடையற்று
பாய வேண்டும்.

தேங்கிய இரத்தம்
ஆபத்தானது
அதிகத் துன்பம் தருவது.
தேங்கிய
அல்லது
அமுக்கப்பட்ட அன்பே
வெறுப்பு!
அப்போது
அது
கொடுப்பனுக்கும்
எடுப்பவனுக்கும்
வெறுக்கப்பட்டவனுக்கும்
வெறுத்தவனுக்கும்
கொடிய நஞ்சாகிறது.

உங்கள்
வாழ்வு மரத்தின்
மஞ்சள் நிற இலைகள்
பாசம் காட்டப்படாமல் பழுத்தவைகள்!
பாசம் காட்டாமல் விட்டுவிட்டு
பழுப்பி லையைப் பழிப்பானேன்.

வதங்கிய வாதுகள்
பாசப் பட்டினியால் வதங்கியவை
பாசப் பசியைப் போக்காமல்
வதங்கிய வாதுகளைப் பழிப்பானேன்

அழுகிய பழங்கள் அன்புக்குப் பதிலாக
வெறுப்பு ஊட்டப்பட்ட பழங்கள்
வெறுப்பைப் பழங்களுக்கு ஊட்டிவிட்டு
வீணே பழங்களைப் பழிப்பானேன்.

வாழ்வின் சாரத்தை
சிலவற்றிற்கு மட்டும் கொடுத்துவிட்டு
பல வற்றிற்கு மறுத்துவிட்ட
உங்கள்
நாற்ற மெடுத்த குருட்டு
இதயத்தைப் பழியுங்கள்.
அது
அவ்வாறு செய்த தால்
அதற்கு அதுவே
அன்பை
மறுத்துக் கொண்டதே!

நீங்கள்
உங்கள் ஆன்மாவையே
நேசிக்காத போது
உங்களிடம் அன்புக்கு
ஏது சாத்தியம்.

உண்மையான ஆன்மா என்பதே
உள்ளது அனைத்தையும்
தழுவியதுதானே!
அதனால்
அனைத்துமே
கடவுளின் அன்புதானே!
ஏனெனில்
அன்பே கடவுள்.

அன்பு உங்களை
வேதனைப் படுத்துவதாக
உணரும் காலம் வரை
நீங்கள்
உங்கள்
உண்மையான ஆன்மாவைக்
காணப் போவதில்லை.
நீங்கள்
அன்பின் தங்கச் சாவியையும்
காணப் போவதில்லை.

அதனால்
நீங்கள்
நிலையற்ற ஆன்மாவை
நேசிக்கிறீர்கள்
அதனால்
உங்கள்
அன்பும் நிலையற்றதே!

ஆண் பெண் காதல்
அன்பு அல்ல உண்மையில்
அது
அன்புக் கான தூரத்து
அடையாளம்.

பிள்ளையின் மீது
பெற்றோரின் பாசம்
அன்பு என்ற
புனிதக் கோவிலுக்கான
நுழைவாயில்.

எப்போது
எல்லா ஆண்களும்
எல்லாப் பெண்களையும்
நேசிக்கிறார்களோ

எப்போது
எல்லாப் பெண்களும்
எல்லா ஆண்களையும்
நேசிக்கிறார் களோ

எப்போது
ஒவ்வொரு குழந்தையும்
ஒவ்வொரு பெற்றோரையும்
நேசிக்கிறதோ

எப்போது
ஒவ்வொரு பெற்றோரும்
ஒவ்வொரு குழந்தையையும்
நேசிக்கிறார் களோ
அப்போது தான்
அன்பு முழுமை பெறும்

அது வரைக்கும்
ஆண்களும்,பெண்களும்
அவரவர்
தசை யையும் எலும்பையும் பற்றி
பெருமை பேசுபவர்களே.

அவர்கள்
ஒரு போதும்
புனிதமான அன்பை
பேச மாட்டார்கள்.
இது நிந்தனையானது!

நீங்கள்
எந்த ஒரு மனிதனை
எதிரியாகப் பார்த்தாலும்
நீங்கள்
ஒருபோதும்
யாரோடும்
நட்போடு இருக்க முடியாது!

பகைமை தாங்கிய
இதயத்தில்
பசுமையான நட்புக் கேது
உறைவிடம்

உங்கள்
இதயத்தில் வெறுப்பு
இருக்கும்வரை
உங்களால்
அன்பின் ஆனந்த்த்தை
உணர முடியாது.

நீங்கள்
அன்பின் சாரத்தை
அனைத்துக்கும் ஊட்டிவிட்டு
அதை மிகச் சிறிய புழுவுக்கு மறுத்தாலும்
அது
உங்கள்
வாழ்க்கையையே கசப்பாக்கி விடும்.

நீங்கள்
யாரை நேசித்தாலும்
எதை நேசித்தாலும்
நீங்கள்
உண்மையை நேசிக்கிறீர்கள்
உங்களை நேசிக்கிறீர்கள்
அதுபோல்
நீங்கள்
யாரை வெறுத்தாலும்
எதை வெறுத்தாலும்
உண்மையை வெறுக்கிறீர்கள்
உங்களை வெறுக்கிறீர்கள்

ஏனெனில்
வெறுப்பு என்பது கூட
பிரிக்க முடியாதபடி
அன்போடு
பிணைக்கப் பட்டிருப்பதுதானே!
காசின்
பூவும் தலையும் போல

உண்மையில்
உங்களுக்கு நீங்கள்
நேர்மையுள்ளவராக இருப்பின்
உங்களை
நேசித்ததையும்
நேசிக்க விரும்பிய தையும்
நேசிப்பதற்கு முன்பாக
உங்களை
வெறுத்ததையும்
வெறுக்கப் போவதையும்
நீங்கள் முதலில்
நேசிக்க வேண்டும்.

அன்பு என்பது
உயர்ந்த பண்பன்று
அன்பு என்பது
அத்தியாவசியமானது.
ஆம்
ஆகாரத்தையும் நீரையும் போல
ஒளியையும் வளியையும் போல

யாரும்
அன்பு கொள்வதால்
அடைய வேண்டாம்
இறுமாப்பு

நீங்கள்
சுதந்திரமாக
நீங்கள் அறியாமல்
காற்றைச் சுவாசித்து
காற்றை வெளிவிடுவதுபோல
நீங்கள்
அன்பைச் சுவாசித்து
அன்பை வெளிவிடுங்கள்
அன்புக்குத் தேவையில்லை
புகழ்ச்சி
ஆனால்
அதுவே
தகுதியுள்ள இதயங்களை
உயர்த்தும்.

அன்புக்குத் தேவையில்லை
வெகுமதி
அன்பே
அன்பிற்குப் போதுமான
வெகுமதி.

எப்படி
வெறுப்பே
வெறுப்புக்குப் போதுமான
தண்டனை
அதுபோல!
அன்புக்கு கணக்கேது
அன்பே
அன்புக்கான
கணக்காக இருக்கும்போது

அன்பு
கடன்
கொடுப்பதும் இல்லை
கடன்
பெறுவதும் இல்லை

அன்பு
வாங்குவதும் இல்லை
விற்பதும் இல்லை

அன்பு
கொடுக்கும்போது
அனைத்தையும் கொடுக்கிறது
அன்பு
எடுக்கும்போது
அனைத்தையும் எடுக்கிறது.

அன்பு
கொடுப்பது என்பதே
பெறுவது என்பதாகும்.
அன்பு
பெறுவது என்பதே
கொடுப்பது என்பதாகும்.

அன்பு
இன்றைக்கும் அன்புதான்
நாளைக்கும் அன்புதான்
என்றைக்கும் அன்புதான்.

கடலுக்கு
நீர் அனைத்தையும்
அளித்து விட்டு
தீர்ந்து போன ஆற்றை
கடலே மறுபடியும்
நிரப்புவது போல

நீங்கள்
அன்பு செலுத்தி
தீர்ந்து போனாலும்
மறுபடியும்
அன்பே நிரப்பும்
உங்களை!

கடல்
கொடுத்த வெகுமதியை
கடலுக்கு திருப்பிக் கொடுக்காத
குட்டை
தேங்கிய குட்டை
அதுவே பின்பு
நாறிய குட்டை

அன்பிற்கு அளவேது
அன்பில் அதிகமேது
அன்பில் குறைவேது

அன்பு
தரம் பிரித்து
அளக்கப் படும் போது
அப்போது
அங்கே
அன்பு
நழுவி விடும்
அதன்
கசப்பான ஞாபங்களே
மிஞ்சும்.

அன்புக்குத் தனி இடமேது
இங்கேயும் அன்பு
அங்கேயும் அன்பு
எங்கேயும் அன்பு

அனைத்துக் காலங்களும்
அன்பின் காலங்கள்
அனைத்து இடங்களும்
அன்பின் உறைவிடங்கள்

அன்புக்கு ஏது எல்லை
அன்பிக்கு ஏது தடை

அன்பின் பிரவாகம்
தடைப் படுமானால்
அது
அப்போது
அன்பிற்கான தகுதியோடு
இருக்காது

அன்பு குருடானது
என்று
அடிக்கடி சொல்லக் கேட்போம்
அதற்கு அர்த்தம்
அது
நேசிப்பவர்கள்
குறைகளைக் காணாது
இது குருடல்ல
பார்வையின் உச்சம்

எப்போது
நீங்கள்
எந்த ஒன்றிலும்
குறை காண்பதில்லையோ
அப்போது
உங்கள் அன்பு
நிரந்திரமானது
குருடு இல்லை

அன்பின் கண்கள்
தூய்மை யானவை
ஊடுருவிப் பார்ப்பவை
அதனால்
அது அறியாது
குறைகளை!

அன்பு
உங்கள்
பார்வையைத்
தூய்மை யாக்குகிறது
அப்போது
உங்கள் அன்பு
தகுதியற்றது எதையும் பார்ப்பதில்லை.

அன்பு நீங்கிய
குறை காணும்
கண்கள் மட்டுமே
குறைகளைக் கண்டுகொண்டிருக்கும்
எப்போதும்!

அது
எதில் என்ன குறைகளைக்
கண்டாலும்
அவை அனைத்தும்
அதன் குறைகளே!

அன்பு
ஒருங்கிணைக்கிறது
வெறுப்பு சிதைக்கிறது.

அன்பின் கரங்கள்
அணைத்திருக்கா விட்டால்
இந்தப் பெரும்பாறைகளும்
பிரமாண்டமான பூமியும்
பிளந்து போய்விடாதா!

உடம்பின்
அனைத்துச் செல்களிலும்
அன்பு சமமாகப் பரவியிருக்குமானால்
அழியக் கூடிய
இந்த உடல் கூட
சிதைவை எதிர்த்து
நிற்கு மல்லவா!

வாழ்க்கை என்ற
இனிய இசையில்
அன்பு
அமைதியின் அதிர்வு
வெறுப்பு கொடுமையான
சாவோடு கூடிய
யுத்தத்தின் எதிர்பார்ப்பு!

நீங்கள்
எதை விரும்புகிறீர்கள்
அன்பையும் நிரந்தர
அமைதியையுமா?
அல்லது
வெறுப்பையும்
நிரந்தர யுத்தத்தையுமா?

ஒட்டு மொத்தப் பூமியும்
உன்னோடு இருக்கிறது
ஒட்டு மொத்தச் சொர்க்கமும்
உன்னோடு இருக்கிறது.

நீங்கள் எப்போது
இந்தப் பூமியையும்
இதில் உள்ள
அனைத்து உயிர்களையும்
நேசிக்கிறீர்களோ
அப்போதுதான்
நீங்கள்
உங்களை நேசிக்க முடியும்!

அன்பு மட்டுமே
அற்புதத்தை படைக்கும்
படைப்பாளி
நீங்கள்
பார்ப்பதாக இருந்தால்
முதலில்
அன்பு உங்கள்
விழிகளில் நிரம்பி இருக்கட்டும்.
நீங்கள்
கேட்பதாக இருந்தால்
முதலில்
அன்பு உங்கள்
செவிப் பறையில் நிரம்பி இருக்கட்டும்

வெறுப்பு இல்லை என்பது
அன்பு கொண்டதற்கு
அர்த்தமாகாது.

அன்பு
செயலுக்கான
ஆற்றல்.

அன்பு
உங்களின்
ஒவ்வொரு நகர்வையும்
ஒவ்வொரு அடியையும்
வழி நடத்த வில்லை யானால்
அப்போது
உங்களுக் கான வழியை
அறிய முடியாது
உங்களால்!

அன்பு
உங்களுடைய
ஒவ்வொரு விருப்பத்திலும்
ஒவ்வொரு எண்ணத்திலும்
நிறைந் திருக்கா விட்டால்
உங்கள்
விருப்பங்கள் அனைத்தும்
கனவில் தோன்றும்
முற்செடிகள் போலாகும்
உங்கள் எண்ணங்கள்
இறந்துபோன நாட்களுக்கான
ஒப்பாரியாகி விடும்!

அன்பே
உங்கள்
திசைக் கருவி
பயணியுங்கள்
திசை எட்டும் செல்லுங்கள்
இதயத்
திரவியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
அன்பு
கடும் புயலிலும்
உங்களைக் காக்கும்
அது
கடும் இருட்டிலும்
ஒளி விளக்காகும்
ஏனெனில்
“அன்பே கடவுளின் நியதி”.































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக