செவ்வாய், 14 மார்ச், 2017

நைட்ரிக் அமிலம்- மேஜர் தி.சா.இராஜூ


1
நல்ல வெயில் நேரம்.  மரத்தடி நிழலில் பேருந்தை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தேன்.  அழகான கார் அருகில் வந்தது.  அதிலிருந்து நடு வயதினர் ஒருவர் இறங்கினார்.
 `அய்யா, என்னுடன் வரலாமே?’
அவரை நான் முன்பின் சந்தித்ததில்லை.  சிறிது தயங்கினேன்.
`எனக்கு உங்களை நன்றாகத் தெரியும்.  தயை செய்து வர வேண்டும்’
பின் இருக்கையில் அமர்ந்தேன்.  அதில் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி உட்கார்ந்திருந்தாள்.  என்னைக் கண்டதும் ஓர் அறிமுகப் புன்னகை.  விரல்களைக் குவித்து நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவித்தாள்.  கார் வழுக்கிக் கொண்டு நகர்ந்தது.

`உன் பெயர் என்ன குழந்தாய்?’
`மெஹ்தாப்’ அவள் தணிந்த குரலில் விடையிறுத்தாள்.
`எந்த வகுப்பில் படிக்கிறாய்?’
`ஐந்து’ பணிவுடன் பதிலிறுத்தாள்.  அவளை ஏறிட்டு நோக்கினேன்.  நல்ல நிறம்.  கூந்தல் கருமையாக இல்லை.  அகலமான கண்கள்.  எடுப்பான மூக்கு.  காதில் பொன்னகை ஊசலாடிற்று.

`மதர்ஸாவுக்குப் போவதுண்டா?’
மதர்ஸா என்பது அராபி மொழி கற்கும் பாடசாலை ஆகும்.
`ஓ தினமும் போகிறேன்’
`அங்கு எத்தனை பெண்கள் படிக்கிறார்கள்?’
`மொத்தம் இருபது பேர் இருக்கிறோம்’
`ஆண் பிள்ளைகள் உண்டா?’
`அவர்களும் வருகிறார்கள்’ ஆனால் அவர்களுக்குத் தனியறை.  அங்கு நிறைய பேர் படிக்கிறார்கள்.  மௌல்லி பரக்கத் அலி அவர்களுடைய ஆசான்’.
இளநீர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் கார் நின்றது.  நால்வரும் அருந்தினோம்.  இதமான அனுபவம்.

`நான் இங்கே இறங்கி விடுகிறேன் அன்பரே.  இங்கிருந்து எங்கள் ஊருக்கு நிறையப் பேருந்துகள் போகும்’
`நானே உங்களை வீட்டில் கொண்டு போய்விட்டு விடுகிறேன்’.
`அந்த சிரமம் வேண்டாம் ஆனால் உங்களுக்கு என்னை எப்படித் தெரியும்?’

`இந்த மாவட்டத்தில் உங்களை அறியாதவர் யார்?  நான் வெகு விரைவில் குழந்தயை உங்களிடம் அழைத்து வரவிருக்கிறேன்’

கார் புறப்பட்டுச் சென்றது.  எனக்கு குருதேவரின் நினைவு வந்தது.
 `முன்பின் தெரியாதவர்களை நண்பாக்கினாய்’
 என்று அவர் எழுதுகிறார்.  அதற்குக் காரணம் சிறிய அளவில் நான் செய்யும் மருத்துவத் தொண்டு.

இரண்டு நாள் பொறுத்து அவர் என் மருத்துவமனைக்கு வந்தார்.  மெஹ்தாப் வணக்கம் தெரிவித்தாள்.  தூய வெள்ளை ஆடை.  தலையில் பச்சை நாடா.  ஒரு குட்டித் தேவதை.
இப்போது அந்தச் சிறுமியை உற்று நோக்கினேன்.  மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தேன்.  நாடி இயக்கம் சீராக இல்லை.  அந்த இடத்தில் சிறிய கரளை.  இது மாதிரி இன்னும் எங்கெல்லாம் இருக்கிறது?’
அவள் புரிந்து கொள்ளத் திணறினாள்  அவருடைய தந்தை அந்தக் கேள்வியைத் திரும்பவும் கேட்டார்.  அவள் தொண்டையைக் காட்டினாள்.  தாடைக்கும் தொண்டைகும் இடையில் இருபுறத்திலும் சிறு கட்டிகள்.  அவர் தொடர்ந்து பேசினார்.
  `குழந்தைக்கு சற்று காது மந்தம்.’
அன்று நான் அவளுடன் பயணம் செய்தபோது என் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடையிறுததை நினைத்துப் பார்த்தேன்.
  `நகரும் ஊர்தியில் செவி தெளிவாகக் கேட்கும்.  மற்ற இடங்களில் மந்தமாகிவிடும்’ என்று ஒரு மருந்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கெண்ட் (பக். 794) அவளுடைய தந்தை தொடர்ந்து பேசினார்.
`........... அடிக்கடி சளி பிடித்துக் கொள்கிறது.  குளிர் காற்று வீசினால் போதும் உடனே தொண்டை கட்டிக் கொள்ளும்.  ஏஸி அறைக்குள் வரவே கூசும்.   அடிக்கடி மூட்டுக்கு மூட்டு வலி என்று சொல்கிறாள்.  உணவு சரியாக செரிப்பதில்லை.  சிறிய காயம்பட்டால்கூட ரத்தம் வந்து விடும்.
`அது என்ன நிறம்?`
`சிவப்பு, கருஞ்சிவப்பு, சிரமப்பட்டு படிக்கிறாள்.  ஆனால் மனதில் நிற்பதில்லை  சரியாகக் காது கேளாததினால் ஆசிரியர்கள் சொல்வது புரிவதில்லை’
ஒன்றும் கவலைப்படாதீர்கள் அன்பரே, தொடர்ந்து ஒரு மாதம் மருந்து சாப்பிடட்டும்.  அதற்குப் பிறகு நீங்களே வியப்படைவீர்கள்.

ஆறாவது வீரியத்தில நான்கு பொட்டலங்கள்.  இறுதியில் இரு மாத்திரைகள் லூட்டிகம்  இரு நூறாவது வீரியம்.
`....... குழந்தை நன்றாச் சாப்பிடுது.  மலம் கழிப்பது சீராக உள்ளது.  மூட்டு வலியும் இப்போது இல்லையாம்.. .. ..’
அதே மருந்தின் முப்பதாவது வீரியம்.  இரண்டு பொட்டலங்கள்.  இரு நாள் இடைவெளியில் வார முடிவில் மெடோரினம் இருநூறு.
`குழந்தை என்னோடுதான் ஏஸி அறையில் உறங்குகிறது.  குரிந்த நீரில் தான் தற்போது குளியல்.  மகிழ்ச்சியுடன் பேசினார் தந்தை.  அந்தச் சிரிப்பு என்னையும் பற்றிக் கொண்டது.
`....... தலைமுடி மிகவும் உதிர்கிறது.  வெளிநாட்டுத் தைலம் ஒன்று என் மைத்துனர் வாங்கி வந்தார்..`
`தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்.  அது தூய்மையானதாக இருக்க வேண்டும்’
’உள்ளுக்கு டானிக் ஏதாவது?.. ..’
`உண்ணும் உணவு சீராக செரிமானமானால் அதுவே போதும்.  நீங்கள் உண்ணும் உணவு சத்துள்ளதாயிற்றே?’
அந்த ஆண்டுத் தேர்வில் மெஹ்தாபுக்குச் சிறப்பிடம்.  காது கேட்பதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.  சளி அறவே இல்லை.
`ரமலான் மாத இறுதியில் ஒரு கூடை பழங்களுடன் வந்தார் அவள் தந்தை.  என் ஆசானை போல ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை மதர்ஸாவுக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டேன்.

ஏற்ற மருந்து கொடுத்துவிட்டால் அது எவ்வளவு சிறப்பாகப் பணி புரிகிறது என்பதை எண்ணி மருத்துவனே வியப்படைவான் என்று எழுதுகிறார் ஜார்ஜ் ராயல்.  அது முழு உண்மை.

2.
அன்று நிவாரணம் பெற வந்ததும் ஒரு பெண் குழந்தைதான்.வசதியான குடும்பம்.  ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த குழந்தை.  சத்துமிக்க உணவைப் புசிப்பவர்கள்.

பெயர் - பொற்செல்வி  வயது - ஏழு.
இரண்டாம் வகுப்பில் படிக்கும் சுறுசுறுப்பு மிக்க அழகான குழந்தை.  கண்களே பேசும் இயல்புடையவை.
குறைபாடு - ஆசன வாயில் வெடிப்பு கீறினாற் போன்ற இரணம். எரிச்சல்.  கூர்மையான குச்சிகளும், கற்களும் குத்துவதைப் போன்ற உணர்ச்சி.  குழந்தை கழிப்பிடத்திற்குப் போகவே கூசுகிறது.  அந்த அளவு மிகுதியான நோவு.

சிகிச்சை - இரண்டு முறை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.  களிம்பு தடவினால் தற்காலிகக் குணம்.

`இதற்கு உங்கள் முறையில் மருந்து ஏதாவது இருக்கிறதா?’ என்று அலட்சியமாகவே வினவினார் அந்தக் குழந்தையின் பாட்டி.  அவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவர் கேட்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை.  சிகிச்சை பெறுபவர்களை நான் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று பார்ப்பதும் கிடையாது.  என்றாலும் நான் அந்தக் குழந்தையின் எழிலில், பேச்சில், காட்டும் அன்பில் ஈர்க்கப்பட்டேன்.  ஏன் கிறங்கினேன் என்று சொல்வது கூடப் பொருத்தமாக இருக்கும்.  மருந்தை அஞ்சல் மூலமாகவே அனுப்பினேன்.   நான்கு சிறு பொட்டலங்கள்.  முதலாவது மருந்து, அடுத்தவை இரண்டும் சீனி உருண்டை.  நான்காவது லூட்டிகம் இருநூறு.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தினரை ஒரு கலை நிகழ்ச்சியில் சந்தித்தேன்.  பொற்செல்வி என்னை அடையாளம் கண்டு கொண்டு சுட்டிக் காட்டினாள்.  `அதோ டாக்டர் அங்கிள்’.  நான் கையை உயர்த்தினேன். `ஹாய்’.
குடும்பத் தலைவர் என்னை நோக்கி நடந்து வந்தார்.  கூடவே குழந்தையும் வந்தது.  அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு வினவினேன்.  `நலமாக இருக்கிறாயா தாயே?’
பெரியவர் என்னைக் கேட்டார்.  `நீங்கள் தான் மருந்து அனுப்பினீர்களா?’
`ஆமாம்’
`அது ஓர் அற்புதத்தை விளைவித்து விட்டது.   நீங்கள் எத்தனை நாள் சென்னையில் தங்குகிறீர்கள்?’

நான் பதிலளித்தேன்.
`தயை செய்து நாளை மாலை என் இல்லத்திற்கு வருகை தர இயலுமா?’
மறு நாள் மாலை அவருடைய வீட்டிற்குச் சென்றேன்.  வாசலிலிருந்த பொமரேனியன் என் காலை மோந்துவிட்டு உள்ளே ஓடிற்று.  உள்ளேயிருந்து பெரியவரும், பொற்செல்வியும் வந்தார்கள்.  மற்றைய குடும்பத்தினரும் என்னைக் காண வந்தார்கள்.
பொற்செல்வியின் பாட்டனார் ஒரு புகழ் பெற்ற மருத்துவர்.  பிரபலமான மருத்துவமனையின் ஆலோசகராக இருப்பவர்.  பல மருத்துவ மாணவர்களை முன்னுக்கு கொண்டு வந்த பெருமை இவருக்குண்டு.  என்னிடம் பரிவுடனும், கனிவுடனும் பழகினார்.  அவருடைய பணிவான சொற்களில் நான் நெகிழ்ந்து போனேன்.

`நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.  குழந்தை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள்.  இன்னொரு முக்கியமான தகவல் உங்களுக்குத் தெரிவது நல்லது.  பொற்செல்வியின் தாயார், பாட்டி எல்லோருக்கும் இந்தத் தொல்லை உண்டு..
அவர் தொடர்ந்து உரை செய்தார்.  `உங்களுடைய மருத்துவ முறை முழுமையானது ஹோலிஸ்டிக் ( HOLISTIC) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.  எனக்கு இதில் நிறைய ஈடுபாடு உண்டு.  ஆனால் பயன்படுத்தத் தயக்கம்.  வாழ்நாள் முழுவதும் நோயை அமுக்குவதிலும் (SUPPRESSION)  நோய்ப் பகுதிகளைக் கீறிக் களைவதிலும் செலவிட்டு விட்டேன்’.
அவருடைய புத்தக அலமாரியைப் பார்வையிட்டேன்.  டன்ஹாம், ஃபாரிங்ட்ன், டி.வி. ஆகியோருடைய நூல்கள்.  இடையே ஐயரும் தலைகாட்டினார்.  (மயிலாடுதுறை சுப்பிரமணிய ஐயர்) அவர் எழுதியது ஒரே புத்தகம்தான் என்றாலும் எவ்வளவு பயனுடைய நூல்.  என் ஆசானுக்கு ஐயரிடம் பெருத்த ஈடுபாடு உண்டு.  ஐயர் சொல்லிவிட்ட பிறகு ஐயமே வேண்டாம் என்று அவர் கூறுவது வழக்கம்.
வெளியில் பேச்சரவம்.  பலர் அவரைக் காணக் காத்திருகிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.  நான் விடைபெற முற்பட்டேன்.  அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு பேசினார்.  நீங்கள் எப்போது சென்னைக்கு வந்தாலும் எனக்குத் தெரிவியுங்கள்.  ஏன்?  நீங்கள் இங்கேயே தங்கலாம்.  வெளிவாசல் வரை வந்து வழி அனுப்பினார்.  குழந்தையின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டேன்.  எனக்கு ஏதோ குருதேவரின் காபுலிவாலா நினைவுக்கு வந்தது.

பொற்செல்விக்கு நான் கொடுத்த மருந்து நைட்ரிக் அமிலம் முப்பது இரண்டு மாத்திரைகள்.  இந்த மருந்து குறித்து மேதை ஹானிமன் தமது நாட்பட்ட நோய்களில் எழுதியிருக்கிறார்.  அந்த மேதையிலிருந்து மருத்துவர் கோஷால் வரை இதைக் குறிப்பிடுகிறார்கள்.  பூந்தசைப் பகுதியும், மேற்பரப்பும் இணைந்திருக்கும் இடங்களில் தோன்றும் இரணங்களுக்கு இது இணையற்ற மருந்து.
பூந்தசைப் பகுதியும், தோலின் மேற்பரப்பும் இணைந்த எல்லா இடங்களிலும் இது சிறப்பாகப் பணிபுரிவதை நான் கண்டுள்ளேன்.  வாய்ப்பகுதி, நாசி, ஆசனவாய், ஆண், பெண்  சிறுநீர்ப் பாதை, புணர்புழை எங்கு வெடிப்புகள் ஏற்பட்டாலும், சீழுள்ள புண்கள் தோன்றினாலும் இந்த மருந்து அதை விரைவில் சீராக்கி விடுகிறது.  வெட்டைக் கிரந்தி நோய் என்ற சீழ்ஒழுகும் புண்கள் உடையவர்களையும் இது குணப்படுத்துவதைக் கண்டு நான் வியப்படைந்திருக்கிறேன்.  தூஜா கிரியோசோட்டம், பெட்ரோஸெலினம் ஆகியவற்றைக் கொடுக்கும்போது இடையூடாக நைட்ரிக் அமிலத்த்தயும் தருவது என் நடைமுறை.  சீரடைவை விரைவாக்குவதில் இது நிகரற்ற நிவாரணி.

`எயிட்ஸ்` என்று கூவி இருட்டறையில் உழலும் குருட்டுப் பூனையைப் போல் முறையிடுபவர்களைக் கண்டு நான் உளம் நொந்து வருந்துவேன்.  ஏற்புடைய மருந்துகளுடன் லூட்டிகம், மெடோரினம், நைட்ரிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுத்து அதன் பின் விளைவுகளைக் கவனியுங்கள் என்பதே என் பரிவுரை. எந்த நோயாளிக்கும் மருந்துண்டு என்று கெண்ட் உறுதி கூறுகிறார்.  அதை நம்பலாம்.

3.
நான் வேதியியல் மாணவன்.  அன்று இந்தப் பாடத்தைப் பயிலும் வேளையில் இதை அக்கினித் திராவகம் என்றே அழைத்தார்கள்.  பொற்கொல்லர்கள் இதை அதிகமாக உபயோகப்படுத்துவார்கள் என்பதை அறிந்திருந்தேன்.  பொன்னை இது மாசு நீக்கச் செய்யும் என்று சொல்லுவார்கள்.  அன்று இதன் குறியீடு HNO2  அதாவது ஹைட்ரஜன் (நீரக வாயு) நைட்ரஜன் (வெடி வாயு) ஆக்சிஜன் (பிராண வாயு) தற்போது சென்னைப் பல்கலைக் கழக அகராதி இதை வெடியக்காடி என்று அறிவிக்கிறது (பக்.688) புழக்கத்தில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தி மாணவர்களைக் குழப்புவது தான் அவர்களுடைய குறிக்கோள்.  என் தாய்மொழியை இவர்களிடமிருந்து எவரும் காப்பாற்றி விட இயலாது.
ஆசிடியம் நைட்ரிகம் என்று எழுதி ஆங்கில மொழி இயல் நிபுணர்கள் பயமுறுத்துவார்கள்.  நான் நைட்ரிக் அமிலம் என்றே குறிப்பிடுகிறேன்.  அதன் வேதி இயல் குறிப்பேட்டில் மாற்றம் ஏதுமில்லை. HNO2

மலம் வெளிப்படும் புழையில் நோவு, உதிரப்போக்கு, இளகிய மலம் ஆகியவை இருக்குமானால் மூன்று நிவாரணிகள் நமது நினைவுக்கு வர வேண்டும்.

ஒன்றுபாதரசம் (MERCURIUS SOLUBULUS) 
அடுத்தது எட்டிக்காய்(NUX VOMICA)  
மூன்றாவது நைட்ரிக் அமிலம்(NITRIC ACID) 
மூன்றுமே மலம் வெளிப்படும்புழையில் உள்ள துயரங்களைத் தீர்க்குமாயினும் இவற்றின் சிறப்புக் குறிகள் வெவ்வேறு.
மலம் கழிக்கும் முன்பு, அல்லது கழிக்கும்போது மற்றும் அதற்குப் பின்பும் ஆசன வாயில் கடுப்பு இருக்குமனால்
அப்போது அதற்கேற்ற நிவாரணி பாதரசம்
மலம் கழித்த பிறகு நோவு குறையுமானால் அப்போது நக்ஸ்வாமிகா   வெளிப்பாட்டிற்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கடுப்பு வலி இருக்குமானால் நாம் நைட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்த வேண்டும்..

 துயரம் குறைய வேண்டும் என்பதற்காக அவன் தொடர்ந்து நடப்பான்.  இன்னொரு முக்கியமான குறி கூரிய குச்சி முனைகள் ஆசன வாயைக் குத்துவது போன்ற உணர்ச்சி இருக்கும்.  அந்த வேறுபாடுகளைத் தெரிந்து நம் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.  சகட்டுமேனிக்கு மருந்து என்பது ஹோமியோபதியில் கிடையாதே.  எந்த நிலையிலும் பாதரசத்தைப் பின்தொடர்ந்து நைட்ரிக் அமிலம் தரலாம்.  இந்த உண்மையையும் மறந்துவிடக் கூடாது.

மருந்துகளை மியாசத்தின் அடிப்படையில் பிரிப்பது மரபு.  பொதுவாக முதல் மியாசத்திற்குக் கந்தகத்தையும், இரண்டாவது தூஜாவையும், மூன்றாவதற்குப் பாதரசத்தையும் தேர்ந்தெடுப்பார்கள்.   ஆனால் நைட்ரிக் அமிலம் மூன்று மியாசங்களையும் கண்டிக்கும் என்று கற்றவர்கள் கூறுவார்கள். 
 எனது அனுபவ முடிவும் இதுதான்.
  மூன்று மியாசங்களின் விளைவையும் தணிக்கும் இன்னொரு மருந்து கல்காரியா பாஸ்பரிகா(CALCAREA PHOS) 
 உத்திரப்பிரதேசத்தில்  ஒரு நடுவர் இருந்தார்.  அவரது பெயர் தர்பாரி.  அவரை பகவான் ஸ்வரூப் (கடவுளின் உருவம்) என்றே மக்கள் பாராட்டினர்.  குறிகளுக்கு அதிக முக்கியத்தவம் ஏதுமூ தராமல் அவர் கல்காரிய பாஸ்பாரிகாவைத் துயருற்றவர்களுக்கு கொடுப்பார்.  அது நல்ல நிவாரணம் தந்தது.

வடநாட்டில் பிரயாகை என்றொரு புனிதத்தலம் உள்ளது.  கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் அங்கே ஒன்று கூடுகின்றன.  அதற்குப் பிரயாகை என்று பெயர்.  இலாஹாபாத் (அலகாபாத் என்பது பிழை) என்றும் அதை அழைப்பார்கள்.  அந்த ஆறுகளின் கரையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா என்ற திருவிழா நடக்கும்.  அதன் பொருட்டு இலட்சக்கணக்கான அன்பர்கள் குழுமுவார்கள்.  இவ்வளவு மக்கள் கூடுமிடத்தில் தொற்றுநோய் பரவுவது இயற்கை.  அரசாங்கம் எவ்வளவோ நல்முயற்சிகளை மேற்கொள்ளும். எல்லோருக்கும் தடுப்பூசி போடப் பெறும்.  ஆனால இந்தப் பரோபகாரி அங்கு ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டு அனைவருக்கும் கல்காயா பாஸ்பரிகாவைக் குறைந்த வீரியத்தில் வழங்குவார்.  எவரையும் வாந்திபேதி தாக்கியதில்லை என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன்  நான் பல ஆண்டுகள் அங்கு வசித்ததன் காரணத்தால் இவ்வாறு உறுதிப்படுத்த முடிகிறது.  பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு  இங்கு வசித்து வந்தார்.  தமது எவ்வளவோ பணிகளுக்கிடையே அவர் ஒவ்வொரு நாளும் பலருக்கு ஹோமியோபதி மருந்துகள் அளித்து வந்த செய்தியையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  இதை ஜவகர்லால் நேருவே தமது நன்பர் ஹரிவிஷ்ணு காமத்திடம் தெரிவித்திருக்கிறார்.

இவற்றை எல்லாம் அறிந்து கொண்ட பிறகுதான் பல பேருக்குக் கல்காரியா பாஸ்பாரிகா சிறப்பாகக் குழந்தைகளின் செரிமானக் கோளாறுகளுக்குக் கொடுத்தேன்  சத வீரியத்தைக் காட்டிலும் தசம வீரியம் சிறப்பாகப் பயன் அளித்தது.  அவர்கள் குணமடையும் விரைவைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.
 தசம வீரியம் ஹோமியோபதியா இல்லையா என்ற பயனற்ற விவாதத்தில் இறங்க வேண்டாம்.   பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் நோயாளியைச் சிரமப்படுத்தாமல்  வீரியப்படுத்திய மருந்தைத் தருவது முக்கியம்.  அனுபவம் மட்டுமே உறைகல்.

பல விவரங்கள் நமக்குத் தெரியாது.  தெரிந்தாலும் அவை குறித்து நாம் சோதனை செய்த பிறகும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.  பளபளப்பான அலுமினியம் காகிதங்களில் மடித்துத் தரப்படும் விலை உயர்ந்த மருந்துகள்தாம் நோயைக் கட்டுப்பத்தும் என்று எண்ணித் தவறான பாதையில் நடக்கிறோம்.  இரண்டு வகை வீரியங்களிலும் கல்காரியா பாஸ் சீராகப் பணிபுரிவதை நான் கண்டிருக்கிறேன்.

  `பொய் புகலேன், சத்தியம் பகர்கிறேன்’ என்று வள்ளலார் அடித்தக் கூறுகிறார்.  

அவ்வாறே நானும் சொல்ல விழைகிறேன்.  பெரும்பாலான நோயாளிகளை விரைவில் குணப்படுத்தும் சிறந்த மருந்து கல்காரியா பாஸ்பாரிகா.
வயிற்றுப்போக்கு. உதிரக் கழிச்சல் ஆகியவற்றிற்கு மட்டும் நைட்ரிக் அமிலம் மருந்து என்பது அன்று.
 அது ஒரு பல்முனை நிவாரணி.

ஹோமியோபதி அற்புதங்கள் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக