புதன், 25 டிசம்பர், 2013

நானும் ஹோமியோபதியும் -- மரு.கோவிந்தராஜ் திருப்பூர்




எனக்கு ஹோமியோபதி என்ற மருத்துவ முறை அறிமுகம் ஆனது 1980 ம் ஆண்டுகளில் எனது நண்பர்கள் மூலம். 

அது ‘’’சும்மா இனிப்பு மிட்டாய் மாதிரி’’ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் அது ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடும் என்று நான் நினைக்க வில்லை

அப்போது எனக்கு சுமார் 14 அல்லது 15 வயது இருக்கும் தீவிரமான கம்யுனிஷ்ட் .அந்த வயதில் அப்படீத்தான் இருந்தேன். இந்த சமுகம் பற்றிய என்னுடைய கோபம் அப்போது உருவானது தான் .

எனது மொத்த வேலையும் படிப்பு ;படிப்புதான் சும்மா ஊர் சுற்றாமல் கண்டதையும் படிப்பது கனவு காணுவது கவிதை எழுதுவது என்றபடி போய்க்கொண்டிருந்தது காலம்.
கட்சி வேலை பார்ப்பது போஸ்டர் ஓட்டுவது கூட்டங்களில் பங்கெடுப்பது என்று எனது இளமை காலம் ‘’மெல்லப்போனதுவே’’ .

இந்த சமுகத்தை புரட்சி மூலம் மாற்றுவது எனது பெரும்கனவுகளில் ஓன்று. அதை ஒட்டிய படிப்பும் எனக்கு வாய்த்தது. ரஷ்ய இலக்கியங்கள் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

எனது மொத்த படிப்பு 5 வகுப்பு மட்டும் தான் அதன் பின் எல்லாம் பட்டறிவுதான். புத்தகபடிப்பு என்னை தொடர்ந்து வழி நடத்துகிறது.

குறிப்பாக கதை புத்த கங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை இராமகிருஷ்னரின் குட்டிக்கதைகள்

மகாத்மாவின் சத்திய சோதனை ஆரோக்கிய திறவுகோல் மெய் வழி சாலை ஆண்டவரின் வெளீயிடுகள் இவை எல்லாம் எனக்கு வழி காட்டி.
அப்போது திருப்பூரில் ‘’’காந்தி சுயராச்சிய சேவா சங்கம்’’ என்ற அமைப்பு அப்போது இயங்கி வந்தது (1975-76) நான் 3ம் வகுப்பு படித்து வந்தேன். எனது பள்ளி வாழ்வு முழுவதும் எல்லா மாலை நேரங்களும் அங்கேதான் கழிந்தன.

அதை நடத்தி வந்தவர் மாணிக்கம் அண்ணா சேவப்பூரில் படித்து விட்டு திருப்பூரில் மருத்துவமனை நடத்தி வந்தார். சொந்த ஊர் பெரியநாயக்கன் பாளையம் இன்று பிரபலமாகி இருக்கும் இயற்கை மருத்துவர்கள் பலரும் இங்கே பயிற்சி பெற்றவர்கள்தான்.

DR சண்முகவேல் [கோவை]
DR வெள்ளிமலை [கோபி]
மற்றும் சர்வோதய இயக்கதை சேர்ந்த பலரும் இங்கே கூடுவார்கள். அவர்களிடம் கதை கேட்டு வளர்ந்தவன் நான். அப்போது மிகவும் ஒல்லியாக இருப்பேன் நான். உடம்பு நன்றாக வளையும். யோகா செய்து காட்டுவேன். பாரட்டுக்கள் கிடைக்கும். தின்ன பழங்கள் கிடைக்கும். எனது வாழ்வின் மகிழ்சியான நாட்கள் அவை.

‘’அருகம்பில் ஆஸ்பத்திரி’’ என்றுதான் மக்கள் அதை சொல்லுவார்கள். என் அம்மாதான் அவர்களுக்கான காய்களை சப்ளை செய்யும். எங்களுக்கு மார்க்கெட்டில் ஒரு காய்க்கடை இருந்தது. இந்த மாணிக்கம் அண்ணாதான் பின்நாட்களில் சுவாமி ‘’சைதன்ய சகஜனந்தா’’ என்று அறியப்பட்டார்.

தமிழகம் முழுவதும் இயற்கை மருத்துவத்தை பிரச்சாரம் செய்தவர். ‘’தளி’’யில் அதீதா ஆசிரமத்தில் சமாதியடைந்தார். இவரைப்பற்றி நான் தனியாக நிறைய எழுதவேண்டும். இப்போது இங்கே இடமில்லை

எனது படிப்பை 5ம் வகுப்போடு நானே வம்படியாக நிறுத்தியதன் பின்னால் கம்பெனி வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன் ,. அப்போது வாரம் 3 ரூபாய் சம்பளம் எனக்கு. கதை புத்தகங்கள் மேல் எனக்கு மாளாத ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. கையில் கிடைத்ததை எல்லாம் படித்துக்கொண்டே இருந்தேன். கம்யுனிச புத்தகங்கள் மேல் காதல் ஆனது இப்படித்தான்.

கிடைக்கும் காசுக்கு எல்லாம் புத்தகம் வாங்குவேன். என் வீட்டில் புத்தகங்களை வைக்க தனி இடம் தேடவேண்டும்

அப்போது கவிதை புத்தகங்கள் 5 ரூபாய்க்கும் இரஷ்ய இலக்கியங்கள் 2 ருபாய்க்கும் கிடைக்கும். இந்த புத்தகம் படிக்கும் ஆர்வம் தன் என்னை கம்யுனிஷ்ட் ஆக்கியது

நான் முதலில் மேடையில் பேச ஆரம்பித்தது எனது 14 வது வயதில் பகத்சிங் நினைவு தின கூட்டத்தில்தான். அப்போது DYFI அமைப்பு உருவாக்கப்பட்டது. எனது பகுதியில் நான் தான் செயலாளர். திவிரமான மனிதனாய் மிளிர்ந்தேன்

வாரத்தில் எனக்கு தேவைப்படும் அளவு மட்டும் கம்பெனி வேலை செய்வேன் . மற்றபடி கட்சி வேலைதான். இடையே கிடைக்கிறநேரத்தில் எல்லாம், படிப்பு,படிப்புதான்.

இந்த தீவிரம்தான் என்னை நடத்திக்கொண்டு வருகிறது, இன்று வரை
எனது அரசியல் வாழ்வு பற்றியும் தனியாகத்தான் எழுதியாக வேண்டும். இப்போது இங்கே இடமில்லை .சுருக்கமாக சொன்னால் எனது வாழ்வை அரசியல்,இலக்கியம், மருத்துவம் என மூன்றாக பிரிக்கலாம் அதில் மருத்துவத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

உண்மையில், நினைத்துப்பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகவும்,வியப்பாகவும் தான் இருக்கிறது.நான் ஹோமியோபதியை கண்டு கொண்டதும் ஹோமியோபதியர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டதும் ஆச்சரியமானவைகள். உண்மையில் எனது உணர்வுகளை எளிமையாய் சொல்லிவிடமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை .

எனக்கு முதலில் அறிமுகமான மருத்துவர் DR பாலசுப்பிரமணி [DHMS] மார்க்சிய இலெனிய இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியபோது கிடைத்த நட்பு அப்போது ஏராளமான தோழர்களை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் வேலையை நான் என் தலையில் சுமந்திருந்தேன்.
அப்போது மருத்துவகட்டணம் 10 ரூபாய்.ஆனால் டாக்டரிடம் மருந்து வாங்கிக்கொண்டு ,டீக்குடிக்க காசும் வாங்கிக்கொண்டு வருவோம்.

பிறகு திருப்பூரில் வடக்கு பகுதியில் வேலை செய்யும் போது DR வடிவேல் [RHMP] அறிமுகம் ஆனார். அப்போதெல்லாம் 3-4 மருந்துகளை ஒன்றாக கலந்து மருந்தை வாங்கும் போது டாக்டர் நிறைய மருந்து கொடுத்திருக்கிறார் என்ற சந்தோசமும்,மகிழ்ச்சியும் இருக்கும். ஆனால் இப்போது ? [single remedy] ___ அறிவுத்தேடல் அதிகமாகும் போது மகிழ்சிக்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன நண்பர்களே.____

ஹோமியோபதி செலவு குறைவான ,ஏழைகளின் மருத்துவமுறை என்று மட்டுமே அப்போதைய புரிதல் இருந்தது . அதற்கும் மேல் தினமணி வெளியீடான டாக்டர் ராமசுவாமி அவர்களின் சில புத்தகங்களை வாசித்திருக்கிரேன் எனது தீவிரமான அரசியல், இலக்கிய வாசிப்புகளினூடே இது போன்ற புத்தகங்கள் வந்து போகும் அவ்வளவுதான். ஆனால் ஹோமியோபதியை என் வாழ்வின் ஒரு பாகமாக, முழுமையாக ஏற்றுக்கொண்டு, நடக்கத்தொடங்கியநாள் இன்னும் மறக்க முடியாததாக இருக்கிறது.

அப்போது மிகவும் மோசமான கால கட்டம் எனக்கு,. எனக்கு முன் இருந்தவை இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே . ஒன்று நான் கொல்லப்படவேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இது தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலையில் யோகாவும், ஹோமியோபதியும் எனக்கு வாழ்வின் இன்னொறு பக்கத்தை திறந்து வைத்தது. நான் ஏற்றுக்கொண்ட அரசியலின் போதாமையும், நான் உருவாக்கிய குடும்பமும் என்னை கைவிட்ட போது எனக்கு கிடைத்தவைகள் இவை இரண்டும்.

1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி அன்று நானும் எனது நண்பர் வாசுதேவனும், மதுரை சென்று விட்டு திரும்பும் வழியில் திண்டுக்கல் சென்று வருவது என முடிவுசெய்திருந்தோம், அப்போது மனவளக்கலை மன்றத்தில் ஹோமியோபதி முதலுதவிப்பெட்டி எங்களிம் கிடைக்கும் என்கிற நோட்டீசை நண்பர் கொண்டு வந்து இருந்தார்.

நான் அரசியலில் இருந்து மானசீகமாய் விலகி இருந்த நேரம் , அப்போது தமிழகத்தில் தோழர் தியாகு அவர்களால் தொடங்ப்பட்ட தாய்த்தமிழ் பள்ளி திருப்பூரில் தொடங்கி இருந்தபோது எல்லா வேலைகளிலும் பங்கெடுத்துக்கொள்வேன். இந்த ஹோமியோபதி மருந்துப்பெட்டி பள்ளிக்கு உதவுமே என்று தான் அதை வாங்க முடிவு செய்திருந்தேன்.

அன்றுதான் என்னை மடை மாற்றி விட்ட அந்த மனிதர் வாழ்க வளமுடன் ஜெயகோபால் அவர்களை சந்தித்தேன். ஒல்லியான உடம்பு , தாடி , என்நேரமும் பரபரத்துகிடக்கும் கண்கள் சரளமான பேச்சு நடை என காட்சியளித்தரர். அடுத்த இரண்டு நாளில் நடக்க இருக்கும் இராசாமணி அய்யாவின் கூட்டம் பற்றியே வெகுநேரம் பேசினார். அவரிடம் இருந்தே P L V என்கிற மாமனிதரின் பெருமைகளை கேட்டுணர்ந்தோம். பின்னர் அவரை சந்திக்க இரவு 11 மணி வரை காத்திருந்தோம்.

இரவு பேசுவதற்கு நிறைய நேரம் இருந்தது. முதல் அறிமுகத்திலேயே அரசியல் தொடக்கம் இலக்கியம் வரை பேசினோம். ஹோமியோபதிக்கும் சமூக புரிதலுக்கும் உறவைப் பற்றி நீண்ட விளக்கம் அளித்தார். பல்லடத்தில் வகுப்பு நடப்பதையும், அங்கு என்னை கலந்து கொள்ளவும் பணித்தார்.

பல்லடம் வகுப்புகள்
பல்லடத்தில் வகுப்புகள் ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு 8 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை நடக்கும். என்னுடைய முதல் வகுப்பு சல்பர் மருந்து . மெட்டீரியா மெடிக்கா பாடம்.

கந்தலாடை அணிந்த தத்துவவாதி
அழுக்கான்
கஞ்சன்

இப்படி சல்பரைப்பற்றி விபரங்கள் வகுப்பில் நடந்து கொண்டிருக்கும் போது நான் இடையே புகுந்து

‘’’’அப்டினா கார்ல்மார்க்சு , பெரியார் எல்லாம் சல்பரா ‘’’ என்றேன்.

Yes,,, சரியாச்சொன்னீங்க தம்பி என்றார்.

’’சமூகப்புரிதல் இருந்தா, ஹோமியோபதி ரொம்ப சுலபமாக புரிஞ்சுக்க முடியும், சமூகப்பிரச்சனைகள் தான் உறவுகளுக்குள்ள சிக்கலாக வருது இந்தசிக்கல் மனிதமனங்கள்ல பிரதி பலிச்சு நோய்களா உருவாகுது so நோய்கள் உருவாக காரணங்கள் சமூகத்துல இருக்கு, சமூகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை புரிஞ்சுகிட்டா ஹோமியோபதில குணமாக்குவது சுலபம்’’ இப்படி அவர் பேச பேச எனக்குள் எனக்குள் இருந்த சமூகமனிதன் தீவிரவதியானன்.

அப்போது dr jan scholtan புத்தகங்கள் அறிமுகமான நேரம் அவரின் தளபதி போல் plv இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம். Scholtan னின் கருத்துக்களை Xerox போட்டு படித்துக்கொண்டிருந்தோம் ’’ அப்ரோச்’’ இயக்கம் தமிழகத்தில் தீவிரமாக இயங்கிய நேரம் அதன் வளர்ச்சியினுடே நானும் வளர்ந்துகொண்டிருந்தேன்.

புதிய நட்புகள் , உறவுகள் உருவாகி வந்தது. என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பலரையும் இப்போதுதான் சந்தித்தேன். Dr கைலாசம், நாராயணன், இராமசாமி. போன்ற மனதுக்கு நெருக்கமான நட்புகளை கண்டடைந்தது இங்கேதான்.

மனிதர்களை வகைப்படுத்தி அறிந்து கொள்வதை அப்ரோச் இயக்கதிலும் , ஹோமியோபதியிலும் தான் கற்றுக்கொண்டேன்.

எனது வேலை நாட்கள் கம்பனியிலும், கிடைக்கிற மனிதர்களுக்கு எல்லாம் மருத்துவம் என்று ஓடிக்கொண்டிருந்தது

எனது முதல் நோயாளியை இங்கே குறிப்பிட வேண்டும். எனது மரியாதைக்குரிய எழுத்தாளர் கவிஞர் ,ஓவியர் நண்பர் யூமா வாசுகி அவர்கள். அவருக்கு கொடுத்தமருந்து dulcamara ’’இதென்ன மாதிரி கேமரா’’ என்று கேட்டதை இன்னும் மறக்கவில்லை எனக்கு.

இப்படி ஓடிக்கொண்டிருந்த என் வாழ்வில் இன்னொறு திருப்புமுனையை ஏற்படுத்தியது 2002 ல் நடந்த 5 நாள் செமினார்தான். அதன் பிறகுதான் முழுநேர மருத்துவராக நான் மாறியது . இந்த செமினாரை நடத்த கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள், அப்ரோச் மையக்கமிட்டியில் dr கைலாசம் சாரோடு நானும் விவாதித்து இருக்கிறேன்.

கிட்டத்தட்ட 5 நாள் முழுமையும் கம்யூன் வாழ்க்கைதான். பகல் முழுக்க வகுப்பு, மாலை விளையாட்டு, இரவு கலை நிகழ்ச்சி என்று நடந்தது.

ஒவ்வொறு நாளும் ஒரு ’’ school of thought’’ தான். Roh, scholtan , rajan sankaran , என ஒவ்வொரு நாளும் வகுப்பு புதிய உலகத்தை திறந்து கொண்டே இருந்தது ஹோமியோபதியில் ஒரு மனிதனை அனுகுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தது.

உன்னும் போதும் உறங்கும் போதும் விவாதங்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். கடைசிநாள் இயற்கை உணவோடு முடிந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது dr விஜயலிங்கம் என்னிடம் கேட்டார்

’’ஏங் கோவிந்து நீங்க ஏன் காலேஜுல சேர்ந்து படிக்கக்கூடாது’’ என்றார். அப்போது எனக்கு சிரிப்பாய் இருந்தது.

’’ என்னா சார் நாம் படிச்சது 5ம் வகுப்பு இதில் எங்க காலேஜுல படிக்க’’
’’ அதினால என்ன private ஆ படிங்க என்றார்.

ஆம் அப்படிகொளுத்திபோட்டுவிட்டார் அது என்னுள் ஜுவாலையாய் பற்றி எரிந்தது.

அப்போது தமிழ்நாடு ஹோமியோ மருத்துவக் கல்லூரி பொய் மான் கரடில் நடந்து கொண்டிருந்தது.

அதில் என் நண்பர்கள் பலரும் படித்து வந்தனர். சென்னையிலிருந்து வந்த பின்னால் எனது படிப்பு முயற்சிகள் தொடர்ந்தது. 8ஆம் மற்றும் 10ஆம் வகுப்பை திருப்புரிலும் 12ஆம் வகுப்பை சேலத்திலும் எழுதினேன்.

இதை முடிக்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டேன். இடையே சொந்த வாழ்விலான நிறைய இழப்புகளையும் கடந்து வந்திருந்தேன்.

கல்லூரிக்கு செல்லும் முன் ஏராளமான சுய மனத்தடைகளை கடக்க வேண்டி இருந்தது

சொந்த ஊரை விட்டு வெளியே வருவது , உதவிக்கான யாசித்த பல கரங்களின் கண்டு கொள்ளாமை நம்பி இருந்த பலதும் கைவிட, எதிர்பாராத இடங்களில் உதவிகள் வந்து குவிந்தன. ’’தெய்வம் வேட்டியை மடித்துக் கொண்டு உதவிக்கு வரும் ’’ என்ற வள்ளுவனின் வார்த்தைகள் எனக்கு அனுபவமாய் ஆனது.

Dr கைலாசம் எனக்கு கார்டியனாய் இருக்கிறார். இது எனக்கான பெரிய கவுரவம் .

கல்லூரிக்கு பணம் கட்டி விட்டு வீட்டுக்கு வந்ததும் டைபாய்டு காய்ச்சல் வந்தது. ஒரு மாத படுக்கை, என் பிள்ளையின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எனக்கு இருந்தது. நண்பர்களின் கரங்கள் என்னைச்சுற்றி வலம் வந்து கொண்டே இருக்கிறது.
நம்பிக்கைகளை ஒரு கையிலும் பிள்ளையை மறு கையிலும் பற்றிக்கொண்டு கல்லூரிக்குள் நுழைகிறேன்.

[ கல்லூரி வாழ்வு பற்றி 5 வருடம் கழித்து எழுதுவேன் ...
நன்றி http://bhairavihomoeopathy.blogspot.in/2012/03/blog-post_4523.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக