வியாழன், 13 ஏப்ரல், 2017

ஸைலீஷியா - மேஜர் தி.சா.இராஜூ




`ஷிலா’ என்ற வடமொழியில் கல்லுக்குப் பெயர்.  தமிழில் சிலை என்று கூறுகிறோம்.  சிலை என்பது தமிழ் மொழியில் உருவத்துக்கும் பெயர்.  கற்சிலை, பொற்சிலை, செப்புச்சிலை ஆகியவை எடுத்துக்காட்டுகள்.  லத்தீன் மொழியில் `ஸிலிகா’ என்றால் கல்துகள்.  ஆங்கிலத்திலும் அவ்வாறே.

`ஸில்’ என்ற சொல்லிலிருந்து பிறந்தது ஸைலீஷியா.  அல்லோபதி முறை இதை மருந்தாக ஏற்றுக் கொண்டதில்லை.  மலை வெடிப்புகள் உமிழ்ந்த கசிவை `ஷிலாஜித்’ என்ற பெயரில் ஆயுர்வேதம் பயன்படுத்துகிறது.  ஆனால் ஹோமியோபதியில் கல்துகள் ஒரு சிறந்த மருந்து.
வெறும் கல்துணுக்கு மருந்தாகக் கூடும் என்று ஹானிமனைத் தவிர யார் கூறினார்கள்?  ஹோமியோபதியின் உடன்பிறப்பு என்று கூறக்கூடிய தசை மருத்துவத்தில் மட்டும் ஷுல்லர் இதையும் சிறந்த மருந்து என்று ஏற்றுக் கொள்ளுகிறார்.

கல்துகளைத் தண்ணீரிலோ உண் சாராயத்திலோ கரைக்க முடியாது.  இது ஒரு விஞ்ஞான உண்மை.  ஆனால் அதன் சிறு துகள் நீரோடு கலக்கும்.  போகர் என்ற சித்தா ஒரு சிறந்த மருத்துவரும் கூட.  அவர் பல வகைக் கற்பொடிகளை இணைத்து உருவமாக்கி அதன் மேல் தேன், வெல்லம், பழம், நெய், பால் ஆகியவற்றின் கலவையைப் பூசி, அதை வழித்து மக்களுக்கு வழங்கச் செய்தார்.  அதை உண்டவர்களுக்குப் பல நோய்கள் நீங்கின.  இதைப் பஞ்சாமிர்தம் என்று அவர் அழைத்தார்.  ஆலயங்களில் உருவங்களுக்கு பால், தேன், நெய், திருநீரு ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அதன் பொழிவை மக்களுக்கு வழங்குவதிலும் மருத்துவத் தத்துவம் இருக்கும் எனத் தோன்றுகிறது.  இது குறித்து ஆராய்ச்சி  செய்வது நலம்.  அங்கு பயன்படும் துளசி, வில்வம், கற்பூரம் ஆகியவற்றின் மருத்துவச் சிறப்புகள் அனைவரும் அறிந்ததே.

கல்துகளை சோடியம் கார்பனேட்டுடன் சேர்த்து உருகச் செது அதனுடன் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைக் கலந்து ஒரு விசேஷமான முறையில் இதன் மூலக்கூற்றைப் படைத்தார் ஹானிமன் என்று சொல்லப்படுகிறது.  நாம் அறிந்து கொள்ள வேண்டியது இந்த மூலக்கூறு தாவர, தானிய வகைகளில் காணப்படுகிறது என்பதே.  (புல்வகை தானியம், பேரீச்சம்பழம்) விலங்கினங்களில் இது அதிகம் இல்லை.

ஸைலீஷியாவின் சிறப்பியல்புகள் குறித்து மேதை ஹானிமன் தமது `நாட்பட்ட நோய்கள்’ என்ற நூலில் எழுதியிருக்கிறார்.  அமாவாசையன்று மிகுதியாகும் வியாதிகளை இது சீராக்குகிறது என்று உறுதிபடக் கூறுகிறார்.  (அமாவாசையன்று வலிப்பு நோய்க்கு ஆட்பட்ட பல அன்பர்களைக் குணப்படுத்த இது மிகவும் பயன்பட்டிருக்கிறது என்பது என் அனுபவம்).  எளிதில் வசப்படாத நோய்களில் இந்த வலிப்பு நோயும் ஒன்று.  எவ்வளவோ மருந்துகளைப் பயன்படுத்திச் சோர்ந்த நிலையில் இருந்த எனக்கு இது சிறந்த நன்பனாக உதவிற்று.  பல மருந்துகளின் பிரயோகம் அன்பரின் வலிப்பு நோயை அமாவாசை என்ற குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்தது.  அப்போது தூஜாவின் அடித்தளத்துடன் ஸைலீஷியாவை(30) கொடுத்ததும் நோய் நிரந்தரமாக அந்த அன்பரை விட்டு நீங்கிவிட்டது.  எனக்குச் சில திபேத்திய லாமாக்ளுடன் பழக்கமுண்டு.  அமாவாசையன்று மிகுதியாகக் கூடிய நோய்களின் பட்டியலில் அவர்ள் இந்த வலிப்பு நோய்க்குச் சிறப்பிடம் தருகிறார்கள்.  ஆனால் அவர்கள் இதற்குத் தரும் மருந்து வேறு.  சூரிய ஒளியை முப்படைக் கண்ணாடிகளின் வழியே குவித்து அதை நோயுள்ளவரின் கண்களில் பாய்ச்சுகிறார்கள்.  அவர்கள் ஊரில் ஆதவனின் ஒளி ஓர் அரிய வரப்பிரசாதம்.

ஸைலீஷியாவை ஸோரா என்ற தோஷத்திற்கு எதிரியாகத்தான் குறிப்பிடுகிறார்கள்.  ஆனால் இது தூஜா என்ற ஸைக்கோஸிஸ் வகை அவுடதத்திற்கும் தொடர் மருந்து ஆண்டிமோனியம் க்ரூடம், ஹேபார் சல்ஃப்யூரிகம், பல்சட்டிலா ஆகிய மருந்துகளையும் அடியொற்றி நல்ல பலனைத் தருகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை (க்ளார்க் பக். 206, 253, 292, 314).

எவ்வளவு சத்து மிக்க உணவை அளித்தாலும் அது உதிரத்தில் கலந்து ஊட்டத்தை அளிக்கத் தவறும்போது நாம் ஸைலீஷியா குறித்து எண்ண வேண்டும்.  எதிலும் ஒரு மந்தமான போக்கு.  இது மனவளர்ச்சிக்கும் பொருந்தும்.  நடக்கவோ, பேசவோ நாளாகும் குழந்தைகைள், தலை அளவு பெரிதாகி வயிறு சட்டியைப் போல் வீங்கியிருக்கும்.  இத்ததைய நிலையிலுள்ளவர்களை இது விரைவில் குணப்படுத்தும்.  மலச்சிக்கலில் இதன் நிலை விசித்திரமானது.  மலம் வெளிப்படும்.  பிறகு உள்ளுக்கு இழுத்துக் கொள்ளும் இது ஒரு சிறப்பான குறி.

மற்றது, எங்கெல்லாம் சீழ் பிடித்துள்ளதோ அல்லது சீழ் பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் இது வெகு விரைவில் பணிபுரிகிறது.  சிறப்பாக உள்நாக்கு வீக்கம், பல் ஈறுகளின் தடிப்பு, மூட்டுகளில் சீழ் கோர்த்த சிரங்குகள் ஆகியவை.  ஹேபர் சல்ஃப்யூரிகம் இதைப் பழுக்க வைக்கும்.  ஸைலீஷியா சீழை வெளிப்போக்கும்.  அல்லது காய வைக்கும்.
என் நன்பரின் இரண்டு வயதுக் குழந்தைக்குக் கடுமையான மலச்சிக்கல் இருந்தது.  இன்னும் பல நோய்க்குறிகள் இருந்த போதிலும், குழந்தை நாள்கணக்கில் மலம் கழிக்காமலிருந்தது வெரும் தொல்லையாக இருந்தது.  குடல் பகுதியைப் படம் எடுத்துப் பார்த்தார்கள்.  அன்னக் குழலிலிருந்து மலத் திறப்பு வரையி இது ஒரே நீண்ட குழாய்.  சிறு குடல், பெருங்குடல் என இரு பகுதிகள் உள.  பெருங்குடலிலும் மூன்று வளைவுகள் மலக்குடலும், குடல் வால் பகுதியும் திசுக்களாலும், நரம்புகளாலும், இணைக்கப்பட்டிருக்கும்.  இதனுள் எங்கே கோளாறு இருந்தாலும் அது நாவில் பிரதிபலிக்கும்.  மலக்குடலில் இருந்த ஒரு பகுதி தொய்ந்த பையைப் போல் ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  செயலற்று போய்விட்ட அந்தப் பகுதியைத் துண்டித்து மீதியைத் தைக்க வேண்டும்.  இதற்கு `ஹஸ்பிரிங்’ டிஸீஸ் என்று பெயரிட்டிருந்தார்கள்.  இரண்டாயிரம் பேர்களில் ஒருவருக்கு இது ஏற்படும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.  இரண்டு வயதுக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யத் தயங்கினார்கள் பெற்றோர்கள்.



2.
குழந்தைகள் எளிதாக மலம் கழிப்பதற்குப் பயிற்சியளிப்பதில் சிறந்தவர்கள் பஞ்சாபிகள்.  தாயார் சிறு மதலையைத் தமது முழங்காலில் ஏந்திப் படுக்க வைத்திருப்பார்.  இலேசாக முதுகையும், விலாவையும் அமுக்கிக் கொடுப்பார்.  குழந்தை எளிதில் மலத்தை நீக்கிவிடும்.  இது ஓர் ஆரோக்கியமான செயல்முறையும் கூட.

ஒரு முறை அந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.  அங்கு குழந்தையின் தாய் அதை முழங்காலில் ஏந்திக் கொண்டுபடும் துயரத்தைக் கவனித்தேன்.  மலம் கழிக்கும் முயற்சியில் குழந்தையின் தலை வியர்த்துவிட்டது.  நான் அருகில் சென்று கவனித்தேன்.  இருபது நிமிட முயற்சிக்குப் பிறகு மலத்துணுக்கு தலை காட்டிற்று.  ஆனால் உடனே உள்ளுக்கிழுத்துக் கொண்டது.

நண்பர் மனம் நொந்து போயிருந்தார்.  """"நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?’’ பரிதாபகரமான குரலில் வினவினார்.   என் மனதில் தோன்றிய கருத்த உறுதி செய்து கொள்வதற்காக மீண்டும் கெண்டின் நூலைப் புரட்டினேன்.  வேண்டிய விபரம் கிடைத்து விட்டது (பக்.932).
தூஜாவின் அடித்தளத்துடன் இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு ஸைலீஷியா முப்பது, இரு மாத்திரைகள்.  ஒரு வாரம் பொறுத்து  பாஸிலினம் 200 அதுவும் இரு சிற்றுருண்டைகள்.  குழந்தை சிரமமின்றி மலம் கழிக்கத் துவங்கினான்.  தாயின் துயரம் நீங்கிற்று.  பின்னாளில் இத்தகைய குறிகள் இருதால் தூஜா, ஸானிகூலா ஆகிய மருந்துகளும் துணை நிற்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஷுஸ்லரின் கருத்தைத் தெரிவிக்கச முன் வந்த மருத்துவர்கள் டிவியும், போயரிக்கும் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.  (பக். 144) அம்மை வைத்ததற்குப் பிறகு ஏற்படும் வயிற்றுப் கோளாறுகளுக்கும் அவர்கள் இந்த மருந்தைப் பரிவுரை செய்கிறார்கள்.

ஒரு பச்சை நெல்மணியை எடுத்துப் பார்த்தோமானால் அதன் உமி, நெல்லின் முளைப் பகுதியை எப்படிக் காப்பாற்றுகிறது என்பதைக் கவனிக்கலாம்.  அந்த முளை உதிரும் வரை உமிப் பகுதி அதைக் கவ்விப் பிடிக்கிறது.  அந்த உமியின் முனையில் ஸைலீஷியா உள்ளது என்று கெண்ட் எழுதுகிறார்.

பொது மேடையில் உரையாற்றுபவர்கள்.  வழக்கறிஞர்கள் சிலருக்குத் தமது கருத்துக்களை உறுதிப்பாட்டுடன் எடுத்து விளக்க முடியாத மன நிலை ஏற்படும்.  அவர்கள் தலையைப் பிடித்துக் கொண்டு கைகளால்  அதைத் தாங்கியவாறு கேவுவார்கள்.  `எனக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்றே விளங்கவில்லையே’ என்று புலம்புவார்கள்.  இந்த நிலை அரசோச்சுபவர்களுக்கும் ஏற்படக் கூடும்.  அப்போது சிறிதளவு ஸைலீஷியா அவர்களிடம் பழைய உறுதிப்பாட்டை மீட்டுத் தரும் என்று கெண்ட் தெரிவிக்கிறார்.  யுதிஷ்டிரரிலிருந்து சேம்பர்லேன் வரை இப்படி எத்தனை அரசுக் காவலர்களை நாம் கண்டிருக்கிறோம்?  அவர்களுடைய இயல்பின் காரணமாக நாட்டு மக்கள் எத்தனை தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்?  இடையிலே மனவலிமை தவறிக் கெட்டவர்களுக்கு மடும் இது மருந்தன்று.  இயல்பிலேயே மன வளர்ச்சி குன்றியவர்களையும் இது சீராக்கியிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.  பாரிடா கார்பனேட், கல்காரியா கார்பானிகா ஆகிய மருந்துகளுக்கு இது பெரிதும் வலிமை சேர்க்கிறது.  உள் மனதின் அடியாழத்தில் இது புரியும் விந்தைகள் ஆனந்தம்.    இது குறித்து எனது இரண்டாவது புத்தகத்தில் ஒரு தனிக் கட்டுரையே எழுதியிருக்கிறேன்.  (ஸோ(ம்)னாம்புலிசம் என்றால் என்ன?)  எனினும் எந்த வயதிலும் உள்ளவர்கள் தூக்கத்தில் எழுந்து பணிபுரிவார்களானால் அந்த விசித்திரமான நிலையை நீக்க ஸைலீஷியா துணை புரிந்ததை நான் கண்டிருக்கிறேன்.  முப்பதாவது வீரியமே போதும்.  அந்த வகையில் இது ஒரு விசித்திரமான மருந்து.

ஒன்றை மட்டும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நீடித்துப் பணிபுரியும் மருந்துகள் எல்லாhம்  பயன் தருவதற்கும் அதிகக் காலம் எடுத்துக் கொள்ளும்.  ஓர் ஆண்டின் பகுதியில், அல்லது ஒரு நிகழ்ச்சியின் பரிணாமமாக இந்த மந்தத் தன்மை ஏற்படலாம்.  `அந்தத் தேர்தலில் தோற்றுப் போன பிறகு மீண்டும் எழவே துணிவு பிறக்கவில்லை’ என்று கூறும் அரசியல்வாதிக்கு இது ஓர் அருமருந்து.

ஸைலீஷியா நோயாளியினால் குளிரைத் தாங்க இயலாது.  தலைக்குக் குளித்த பிறகு பல தொல்லைகள் பின்தொடரும்.  குளிர் காலத்திலும் ஈரப்பசையற்ற சூழ்நிலையில் அவனுக்குக் தொந்தரவிராது.  ஆனால் குளிருடன் சாரலும் சேர்ந்து கொண்டால், அவனால் அதைப் பொறுக்க இயலாது  அந்த வேளையில் ஸைலீஷியா பலன் தரும்.
காயம்பட்டு எளிதில் ஆறாத புண்ணுடையவர்களுக்கு ஹேபார் சல்ஃப்யூரிகத்தைத் தேர்ந்தெடுக்கிறோம்.  ஆனால் அது மட்டுமே முழுமையான மருந்து அன்று.  காயம்பட்ட புண் பொருக்குத் தட்டும் என்றாலும், அதனடியிலும் சீழ் கோர்த்துக் கொள்ளும், வீங்கும், மினுமினுக்கும்.  தொட்டாலே நோயாளி கதறுவான்.  இதை உரித்துப் பார்த்தால் நாரும், சீழும் இருக்கும்.  இந்த  நிலை ஏற்படுவதற்குக் காரணமே உணவின் சாறு சீரான அளவில் உதிரத்துடன் கலந்து நோயாளிக்கு ஊட்டம் அளிக்காமல் இருப்பதுதான் என்பது அறிஞர்களின் கருத்து.  மேலோட்டமாகப் பார்த்தால் இது விளங்காது.  ஆனால் உண்மை அதுவேதான்.

பொருக்குத் தட்டிய ஓட்டிற்குக் கீழே தொந்தரவு இருக்குமானால் அப்போதைய நிலைக்கு ஸைலீஷியாவைத் தசம வீரியத்தில் கொடுத்தப் பலன் கண்டிருக்கிறேன்.  இந்த நிலை உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி.  குழந்தையின் தலையில் கரப்பான் என்ற சீழ் கோர்க்கும் நோய் பரவும்  அதிலிருந்து வடியும் ஊன் நீர் படும் இடமெல்லலாம் சிரங்குகள் கிளைக்கும்.  மருத்துவர் களிம்புகள் கொடுப்பார்.  சிரங்குகள் ஆறி விடும். பொருக்குத் தட்டும்.  ஆனால் மீண்டும் அதனடியில் சீழ் கட்டும்.  அப்போது அதைக் குலைத்து உருமாற்றிப் புண்களை ஆற்றும் பணியை இந்த மருந்து செய்துவிடும்.

தலையில் மட்டுமின்றி நுரையீரலின் பகுதியில் சீழ் பிடித்தாலும் ஸைலீஷியா உதவி புரியும்.  அதன் முழுப் பகுதியிலும் சீழ் பிடித்தால் அதை நியூமோனியா என்று அழைக்கிறார்கள்.  இந்த நிலையில் ஸைலீஷியாவை மிகுந்த கவனத்துடன் தர வேண்டும்.  மீண்டும் மீண்டும் தரவே கூடாது.  இந்த மருந்தின் தாக்கத்தைத் தாங்கும் வலு அந்த உடலில் இல்லை என்பதே இதற்குக் காரணம்.

3.
கல்காரியா சல்ஃப்யூரிகத்தையும் ஸைலீஷியாவுக்கு இணை மருந்தாகக் கூறுவதுண்டு.  இரண்டையும் மாற்றி மாற்றித் தரவும் செய்வார்கள்.  அது சரியான முறையன்று.  ஸைலீஷியா புண்களைப் பழுக்க வைக்கும்.  ஆனால் கல்காரிய சல்ஃப்யூரிகம் புண்களை ஆற்றுவதற்கு உதவி புரியும்.  ஒரு புண்ணைப் பழுக்க வைத்து அதன் உள்ளீடுகளை வெளியேற்றுவதுதான் சீரான முறை.  அழுக்கு சீழாகவும், ஊன் நீராகவும் வெளிப்பட்டபிறகும் புண் ஆறாமல் இருக்குமானால் அப்போது கல்காரியா சல்ஃப்யூரிகத்தைத் தரலாம்.

எலும்பை ஒட்டியோ, அதைச் சுற்றியோ ஏற்படும் இரணங்களுக்கு ஸைலீஷியா மிக நல்ல மருந்து.  எலும்பில் குண்டு பாய்ந்து புதைந்திருக்கும் நிலையில்கூட அந்தப் புண்களைப் பழுக்க வைத்து ஸைலீஷியா வெளியேற்றிவிடுவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
உமிழ் நீர்ச் சுரப்பிகளும், ஈறு தடித்து வீங்கிய நிலையிலும் தாடையையே அசைக்க முடியாமல் இருக்கும் நோயாளிகளுக்கு என் ஆசான் தசம வீரியத்தில் ஸைலீஷியாவைத் தருவதை நான் கண்டிருக்கிறேன்.  ஈறுகளில் சீழ் கோர்த்துக் கொண்டிருக்குமானால் அப்போது ஸைலீஷியா உடனடியாகப் பலன் தரும்.  உதிரமும்,  சீழும் நிறைய வெளிப்படும்.  அதைப் பொருட்படுத்தக்கூடாது.

மிக அதிகமாக வியர்வையை வெளிப்படுத்தும் நோயாளிகளை நான் கண்டதுண்டு.  அவர்கள் நடக்கும் இடமெல்லாம் ஈரக்காலடி இருக்கும்.  மேஜோடுகளையும் நனைத்து விடும்  அந்த நிலையை ஸைலீஷியா முப்பது நிரந்தரமாகக் குணப்படுத்திவிடும்.  பொதுவாக உடலின் மேற்பகுதியிலிருந்து வியர்வையை வெளிப்படுத்தும் அன்பர்களை இது விரைவில் குணப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன்.

மூக்கிலும், காதிலும் இது புரியும் அற்புதங்கள் மிக அதிகம்.  உமிழ் நீர்ச் சுரப்பிகள் பாதிக்கப்படுமானால் அப்போது செவியும் பழுதடைவது உறுதி.  காதில் இரைச்சல், சீழ் அல்லது உதிரப்பெருக்கு, செவி மடல்களில் தடிப்பு அனைத்தையும் ஸைலீஷியா குணப்படுத்தி விடும்.  மூக்கின் எலும்பு பாதிக்கப்பட்டு அது சப்பையான நிலையிலும் நுகரும் திறமை குன்றிய போதும் இந்த மருந்து துணை புரியும்.

சிலசமயம் நாக்கு தடித்துப் போகும்.  பிரட்டவே முடியாது.  நாவு, மூக்கு, காது, உமிழ் நீர்ச் சுரப்பிகள் ஆகியவை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டால் அது மூன்றாவது தோஷத்துடன் தொடர்புடையதாகும்.  அந்த வேளைகளில் இடையூடாக இரு நூறாவது வீரியத்தில் இரண்டு மாத்திரை லூட்டிகத்தைக் கொடுத்து விடுவது நல்லது.

சில குழந்தைகைளுக்குப் பால் ஒத்துக் கொள்ளாது.  அதை ஓங்கரித்து வெளித் தள்ளிவிடும்.  பால் தயிராகத் திரிந்து வெளிப்படும்.  மலத்திலும் திரிந்த தயிர்ப் பகுதி இருக்கும்.  அந்த நேரங்களில் ஸைலீஷியா, நேட்ரம் கார்பனேட் ஆகியவை நினைவிற்கு வர வேண்டும்.  சகட்டுமேனிக்கு தூஜாவைக் கொடுத்து குழந்தையை அவதிப்படச் செய்தல தவறு.  தாய்ப்பால் ஒத்துக் கொள்ளாத குழந்தைகளுக்கும் இதுவே நல்ல மருந்து.  செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சூடான உணவை ஒதுக்குபவர்கள், அடிக்கடி வாந்தி எடுப்பவர்கள், பாலுணவு செரிக்காதவர்கள் ஆகியோருக்கு ஸைலீஷியா சிறந்த மருந்தாக அமைவதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

படை வீரர்களுக்கும் இந்த மருந்து மிகுந்த பயனளிப்பதை நான் கண்டதுண்டு.  முதலாவதாக அம்மைக் குத்தலால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.  பலவகை உணவு நேரந்தவறிய உணவு, பல்வேறு தட்ப வெட்ப நிலைகளின் பாதிப்பு ஆகியவற்றின் விளைவுகளையும் ஸைலீஷியா போக்கி விடும்.  தூஜாவின் அடித்தளத்தோடு தரப்படுமானால் நன்று.  பற்கள், உடற்கூற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பல் என்பதும் எலும்பு வகையைச் சேர்ந்ததே.  அதைக் கல் துகள் கலந்த சுண்ணாம்பு என்றே சொல்லலாம்.  (ஸிலிகேட் ஆஃப் லைம்) இதில் சொத்தை விழுந்து பளபளப்பை இழந்து சொரசொரப்பாக மாறுமானால், அப்போது ஸைலீஷியா நினைவுக்கு வர வேண்டும்.  ஈறுகள் கொழுத்து அதற்குப் பின்னால் உள்ள பகுதியில் இரணம் ஏற்படக்கூடும்.  பல்லின் நிறமே பழுப்பாக மாறிவிடும்.  சூடான பானம் அருந்தினாலோ அல்லது சூட்டு ஒத்தடம்  கொடுத்தாலோ சமனம் கிடைக்கும். ஈறுகளுக்கு அடியிலும் வீக்கம் ஏற்படலாம்.  நோய் இரவு நேரத்தில் மிகுதியாகி, சூடும் அழுத்தமும் நிவாரணம் தருமானால் அப்போது உறுதியாக ஸைலீஷியாவை தசம வீரியத்தில் தரலாம்.  இதை என் ஆசான் மெய்ப்பித்திருக்கிறார்.  பல் என்று குறிப்பிடும்போது நகத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.  அதுவும் எலும்பின் வெளிப்பாடே.  சிலருக்கு நகம் அடிக்கடி சொத்தையாகும்.  குழலிடும், உள் நோக்கி வளரும், பொடித்துப் போகும், நிறம் மாறும், நகக்கணுக்களில் பொறுக்க இயலாத நோவு உண்டாகும்.  அந்த நிலையிலும் ஸைலீஷியா தசம வீரியத்தில் பயன் தருவது உறுதி.  இதையும் நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

உள் மனதின் அடியாழத்தில் இது புரியும் வித்தைகள் அனந்தம்.  எனினும், எந்த வயதில் உள்ளவர்களும் தூக்கத்தில் எழுந்து பணிபுரிவார்களானால் அந்த விசித்திரமான நிலையை சீராக்க ஸைலீஷியா துணை நிற்பதை நான் கண்டிருக்கிறேன்.  முப்பதாவது வீரியமே போதும்.  தூஜாவின் அடித்தளம் துணை புரியும்.  அந்த வகையில் இது ஒரு விந்தையான மருந்து.
சிறிதளவு உடலுழைப்பும், வியர்வையைக் கக்க வைக்கும்.  சிறப்பாh இது முகத்தில் வெளிப்படும்.  அந்த வேளையில் அவன் குளிர்ந்த காற்றில் உலாவினால் அது அவனது தொண்டைப் பகுதியையும், நுரையீரலின் தொடக்கப் பகுதியையும் பாதிக்கும்.  விக்கல் எடுக்கும்.  பொதுவாக இந்தப் பிரிவு நோயாளி குளிர்ந்த பொருட்களையே உண்ண விரும்புவான்.  ஐஸ்கிரீமில் கொள்ளை ஆசை.  தேனீர் கூட அவனுக்குச் சூடாக இருக்கக் கூடாது என்றாலும், உடல் சூடாக இருக்கும் வேளையில் குளிர்க் காற்றின் தாக்கம் ஏற்படுமானால் அவனுக்குப் பல கோளாறுகள் ஏற்படும்.  அப்போது ஸைலீஷியா உடனடி நிவாரணம் தருவது உறுதி.

இது ஒரு பல்முனை நிவாரணி.  நோயாளியின் அடிப்படை இயல்புகளை ஆராய்ந்து இதைக் கொடுத்தால் நிரந்தரமான நிவாரணம் கிடைப்பது உறுதி.

*****
ஹோமியோபதி அற்புதங்கள் நூலில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக