வியாழன், 1 செப்டம்பர், 2016

அகம்


மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை க்கான பட முடிவு

இன்றைக்கு மருந்தில், சிகிச்சையின் அகசார்பைப் பற்றி பேசுகிறோம். அதே மருந்து வௌ;வேறு மருத்துவர்கள் மூலமாக வௌ;வேறு முடிவுகளைக் கொடுக்கிறது.

ஒரு குறிக்கோளோடு செயல்படுவதாகச் சொல்லும் விஞ்ஞானத்தில் அக சார்பு பற்றிச் சொல்ல முடியுமா?
மனித இனம் சம்பந்தப்பட்ட எதுவுமே புறம் சார்ந்து இருக்கவே முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு அகத்திற்கு ஒதுக்க வேண்டியது அவசியம்.
ஒரே மருந்து வெவ்வேறு மருத்துவர்களால் கொடுக்கப்படும்போது வெவ்வேறு விளைவுகளைக் கொடுக்கிறது என்பது முற்றிலும் உண்மை. அது மட்டுமல்லாமல், ஒரே மருந்து வெவ்வேறு நோயாளிகள் மீது வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை. மனிதன் வெறும் பொருள் அல்ல.
முதலில் நாம் ‘அகம்’ என்கிற வார்த்தையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு கல் வெறும் பொருள். அதற்கு உட்புறமோ, உள்ளார்ந்தது என்பதோ கிடையாது. இதை இரண்டாகப் பிளக்கலாம். பிறகு அது இரண்டு தனிப் பொருட்கள். அதை நாலாகப் பிளக்கலாம். பிறகு அது நான்கு பொருட்களாக ஆகிறது. ஆனால் அதில் எந்த ஒரு உட்புறத்தையும் பார்க்க முடியாது.
அகம் என்றால் வெளியே இருந்து பார்க்கும்போது மனிதனும் மற்ற எல்லாப் பொருட்களையும் போல ஒரு பொருள்தான். ஒரு சிலையைப் போல, ஒரு இறந்த உடல், வாழும் உடல். பிறகு என்ன வேறுபாடு? சிலை என்பது ஒரு சாதாரண பொருள். அதற்கு உட்புறம்- அகம் என்பது கிடையாது. இறந்த உடல் ஒரு சமயத்தில் ஒரு பொருளின் வீடாக இருந்தது. அது இப்போது காலியாக இருக்கிறது. அது இப்போது காலி வீடு. அந்த வீட்டில் வாழ்ந்தவர் இப்போது வெளியேறிவிட்டார்.
வாழும் மனிதனுக்கு, சிலைகளுக்கும், இறந்த உடலுக்கும் உண்டான புறத்தன்மை உண்டு. கூடவே இன்னும் கொஞ்சம் அதிகம் ஓர் உட்பகுதி. இது பல விஷயங்களை மாற்ற முடியும். காரணம் அதுதான் இருத்தலில் மிகவும் சக்தி வாய்ந்தது. உதாரணமாக, மூன்று பேர்களுக்கு ஒரே மாதிரியான நோய். ஆனால் ஒரே மருந்து வேலை செய்யாது. ஒரு மனிதரிடத்தில் அது வேலை செய்யும். இன்னொருவரிடத்தில் பாதிக்குப் பாதி வேலை செய்யும்- செய்யாது. ஆனால் மூன்றாவது நபரிடத்தில் வேலையே செய்யாது. நோய் ஒன்றுதான்; ஆனால் அதன் உட்புறம் வேறு. இப்போது அந்த உட்புறத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், வெவ்வேறு விளைவுகளை, வெவ்வேறு மக்கள் மீது, வெவ்வேறு காரணங்களுக்காக ஒருவேளை மருத்துவர் ஏற்படுத்தலாம்.
என்னுடைய நண்பர் நாக்பூரில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை நிபுணர். பெரிய அறுவை சிகிச்சை நிபுணர். ஆனால் நல்ல மனிதரில்லை. அறுவை சிகிச்சையில் அவர் தோல்வி அடைந்ததே இல்லை. மற்ற நிபுணர்களை விட ஐந்து மடங்கு அதிகமாகப் பணம் வாங்குவார். நான் அவருடன் தங்கியிருந்தபோது சொன்னேன்: ‘இது மிகவும் அதிகம். மற்ற மருத்துவர்கள் இதே நோய்க்கு ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கும்போது நீங்கள் அதைவிட ஐந்து மடங்கு அதிகமாக வாங்குகிறீர்கள்… இது அதிகம்’.
அவர் சொன்னார்: ‘எல்லா விஷயங்களிலும் என் வெற்றி இந்த அடிப்படையில்தான். அந்த மனிதர் எனக்கு ஐந்து மடங்கு அதிகம் பணம் கொடுக்கும்போது, தான் பிழைத்துக் கொள்வோம் என்கிற உறுதியோடு இருக்கிறார். பணத்தின் மீது மட்டும் எனக்குப் பேராசை இல்லை. இதைவிட குறைந்த செலவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும்போது- எனக்கு அவர் ஐந்து மடங்கு அதிகமாகக் கொடுக்க முன் வருகிறார் என்றால் காசு செலவானாலும் பரவாயில்லை, நாம் பிழைத்து விடுவோம் என்கிற உறுதியோடு இருக்கிறார். அவருடைய அந்த உறுதிதான் என்னுடைய ஐம்பது சதவிகித வெற்றி.’
பிழைக்க வேண்டாம் என்று நினைக்கிற மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மருத்துவர்களுடன் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மருந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் பிழைப்போம் என்கிற உறுதி இல்லை. இன்னொரு புறம் மருந்து வேலை செய்யாது என்று நினைக்கிறார்கள். அதனால் தாங்கள் தற்கொலை முயற்சி என்கிற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கலாம், அதே சமயம் உயிரையும் துறக்கலாம். இப்போது உள்ளிருந்து அந்த மனிதன் பின்வாங்கி விட்டான். மருந்து அவன் உட்புறத்திற்கு உதவி செய்யாது. அந்த உட்புற உதவியில்லாமல் மருத்துவர்களால் எதுவுமே செய்ய முடியாது. அதற்கு மருந்து போதாது.
இந்த அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் ஒன்றை நான் தெரிந்து கொண்டேன். அவர் சொன்னார்: ‘உங்களுக்குத் தெரியாது. சில சமயங்களில் முற்றிலும் ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்கிறேன். ஆனால் அந்த நோயாளிக்கு உதவுவதற்காக இதைச் செய்ய வேண்டியிருக்கிறது.’
நான் கேட்டேன்: ‘என்ன சொல்கிறீர்கள்?’
அவர் சொன்னார்: “தொழில் ரீதியாக என் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டு உண்டு. நாக்பூரிலுள்ள மருத்துவர்கள் என்னைக் கண்டபடி திட்டுகிறார்கள். ‘இதுமாதிரி மோசடி பேர்வழியை பார்த்ததில்லை’ என்கிறார்கள்.”
அவர் நோயாளியை அறுவை சிகிச்சை மேஜை மீது போடுவார். மருத்துவர்கள் தயாராக இருப்பார்கள். தாதிகளும் தயாராக இருப்பார்கள். மாணவர்களும் மேலிருந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது நோயாளியின் காதுகளில் மெதுவாகச் சொல்வார். ‘என் அறுவை சிகிச்சை கட்டணம் பத்தாயிரம் என்று ஒப்புக் கொண்டோம். அது போதாது. உன் பிரச்னை படு மோசமானது. நீ இருபதாயிரம் கொடுக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே நான் என் கருவியைக் கையிலெடுப்பேன். இல்லையென்றால் நீங்கள் எழுந்து போகலாம்; குறைந்த விலை மருத்துவர்களைப் பார்க்கலாம்.’
இப்போது, அந்தத் தருணத்தில்… அந்த நபரிடம் பணமிருக்கிறது. இல்லையென்றால் அவர் எப்படி சரி என்று சொல்ல முடியும்? அவர் ஒப்புக் கொள்கிறார். ‘நான் இருபதாயிரம் ரூபாய் தருகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்.’
அவரே சொன்னார், “எந்த நிபுணரும் அவரைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் இந்த உறுதியோடு அல்ல. இப்போது அவர் இருபதினாயிரம் தருகிறார், அவர் முழுமையாக என்னுடன் இருக்கிறார். அவருடைய உட்புறம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. மக்கள் என்னைத் திட்டுகிறார்கள். காரணம் அவர்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. கட்டாயம் இது ஒழுக்கக் கேடுதான்… பத்தாயிரத்திற்கு ஒப்புக் கொண்டு, நோயாளியை அறுவை சிகிச்சை மேஜை மீது கிடத்திவிட்டு அவர் காதுகளில் போய், இருபதாயிரம், முப்பதாயிரம் இல்லையென்றால் எழுந்து ஓடு. காரணம் நான் இந்த நோய் இவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கும் என்று நினைக்கவில்லை. எவ்வளவு பெரிய ஆபத்தைக் கையிலெடுக்கிறேன். என்னுடைய பெருமையையெல்லாம் பணயம் வைக்கிறேன். பத்தாயிரத்திற்கு இதைச் செய்ய மாட்டேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் தோற்றதே கிடையாது. வெற்றிதான் என் விதி. நான் வெற்றி பெறுவேன் என்று தெரிந்தால் மட்டுமே நான் அறுவை சிகிச்சை செய்வேன். அதனால் நீ முடிவு செய். மேலும் எனக்கு அதிக நேரம் கிடையாது. காரணம் பல பேர் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீ இரண்டு நிமிடத்தில் முடிவு செய். ஒப்புக்கொள் அல்லது எழுந்து ஓடு’ என்பேன். வேறு வழியில்லை, அந்த நபர் சொல்வான், ‘நீ எது கேட்டாலும் நான் தருகிறேன். ஆனால் அறுவை சிகிச்சை செய்.’ அது சட்ட விரோதம். ஒழுக்கக்கேடு. ஆனால் என்னால் அது மனோதத்துவமற்றது என்று சொல்ல முடியாது.
மனிதனோடு நீ செய்வது எல்லாமே வெளியில்தான்.
எனக்கு இன்னொரு நண்பர் உண்டு. ஒரு மருத்துவர். ஆனால் இப்போது சிறையிலிருக்கிறார். காரணம் அவர் அந்தப் பட்டத்தைப் பெறவேயில்லை. அவர் எந்த மருத்துவக் கல்லூரிக்கும் போகவில்லை. அவர் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்ட பட்டங்கள் எல்லாமே போலியானவை. ஆனால் அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி என்று நான் நினைக்கிறேன். அவரிடம் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. அவர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவியிருக்கிறார். குறிப்பாகப் படுமோசமாகிப் போனவர்கள். பட்டம் பெற்ற பல மருத்துவர்களைப் பார்த்து ஓய்ந்து போனவர்கள். இந்த மனிதரால் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது. அவரிடம் ஒருவித கவர்ச்சி இருந்தது. பட்டம் இல்லை. அவர் தன்னுடைய மருத்துவமனையை ஒரு மாயா ஜால உலகமாக மாற்றியிருந்தார். அவர் மருத்துவமனையில் நுழைந்தவுடனேயே நோயாளி வியந்து போவார். அவர் எல்லா இடங்களுக்கும் போய்விட்டார். காரணம் கடைசி முயற்சியாகத்தான் மக்கள் அவரிடத்தில் போவார்கள். அவர் போலி என்பது எல்லோருக்குமே தெரியும். அது மறைக்கப்பட்டதல்ல. அது வெளிப்படையான ரகசியம். ஆனால் நீங்கள் சாகப் போகிறீர்கள் என்றால் முயல்வதில் என்ன தவறு?
அவருடைய தோட்டத்தில் நுழைந்தால் நீங்கள் சொக்கி நிற்பீர்கள். அது மிகவும் அழகான தோட்டமாக இருக்கும். அவருடைய அலுவலகத்தில் நுழைந்தால், மிகவும் அழகான பெண் வரவேற்பாளராக இருப்பார். அவையெல்லாமே அவருடைய மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதி. காரணம் ஒரு மனிதன் இறக்கிற தருணத்தில் இருந்தாலும், ஓர் அழகான பெண்ணைக் கண்டவுடன் அவருக்கு வாழ்கிற ஆசை உயரும். அவருக்கு வாழ வேண்டும். வரவேற்பறையைத் தாண்டியவுடன் சோதனைக் கூடத்தில் நுழைவார். பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துப் போவது தேவையற்றது. ஆனால் அந்த நோயாளிக்கு இவர் சாதாரண மருத்துவரில்லை என்று தெரிய வேண்டும். அந்த சோதனைக்கூடம் ஓர் அற்புதம். முற்றிலும் பயனற்றது. அங்கு எதுவுமே முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. ஆனால் பல குழாய்கள், கண்ணாடிக் குடுவைகள், வண்ண நீர்கள் ஒரு குழாயிலிருந்து ஒரு குழாய்க்குப் போகும். ஏதோ பெரிய சோதனைகள் நடப்பதைப் போல ஒரு தோற்றம். அதற்கு பிறகு மருத்துவரைச் சென்று அடைவீர்கள். அவர் சாதாரண முறைகளைப் பயன்படுத்தியதேயில்லை. உங்கள் நாடித்துடிப்பைப் பார்க்கவே மாட்டார். தொலைக் கட்டுப்பாடு கொண்டு மின்சார படுக்கையில் நீங்கள் படுக்க வைக்கப்படுவீர்கள். அந்த படுக்கை மேலே காற்றில் எழும்பும். நீங்கள் மேலே பார்த்தபடி படுத்திருப்பீர்கள். அங்கே உங்களைச் சுற்றிக் குழாய்கள் தொங்கும். ஆங்கிருந்து இணைப்புகள் உங்கள் நாடிக்குள் இருக்கும். உங்கள் நாடி துடிக்கும்போது குழாய்களில் உள்ள நீர் துள்ளிக் குதிக்கும். இதயத்திற்கும் இதேபோல் சோதனைதான். சாதாரண இதய மானியால் அல்ல. இந்த ஏற்பாடுகளையெல்லாம் அந்த நோயாளி பார்க்கும்படி செய்திருந்தார். ஒரு பெரிய மேதையிடம், ஒரு பெரிய நிபுணரிடம் வந்திருக்கிறோம் என்பதை அந்த நோயாளி பார்க்கலாம்.
அந்த மனிதருக்கு எந்தப் பட்டமும் கிடையாது. ஒன்றுமே இல்லை. அவருடைய மருந்தாளருக்கு எல்லாப் பட்டங்களும் இருந்தன. அவர்தான் மருந்துகளை எழுதிக் கொடுப்பார். இந்த மனிதருக்கு மருந்துகளைப் பற்றி எதுவுமே தெரியாது. உண்மையில் அவர் எந்த கிரிமினல் வேலையையும் செய்யவில்லை. அவர் மருந்து எழுதிக் கொடுக்கவில்லை. அவர் அதில் கையெழுத்திடவில்லை. ஆனால் அவர் ஏற்கனவே இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தார். தன் பெயருக்குப் பின்னால் வினோதமான பட்டங்களையெல்லாம் போட்டுக் கொண்டார். அந்தப் பட்டங்கள் இல்லை என்பதற்காக அது சட்டவிரோதமாகிவிட முடியாது. அவர் இருக்கிற எந்தப் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றதாகச் சொல்லிக் கொள்ளவேயில்லை. இவையெல்லாமே கற்பனை. ஆனால் அந்தக் கற்பனை உதவிகரமாக இருந்ததே.
பாதி சோதனையிலேயே நோயாளிகளுக்கு குணமானதை நான் பார்த்திருக்கிறேன். வெளியே வந்தவுடன் அவர்கள் சொன்னார்கள், ‘எங்களுக்கு அனேகமாக குணமாகிவிட்டதைப் போல உணர்கிறோம். இன்னும் நாங்கள் மருந்து சாப்பிடவேயில்லை. இதோ மருந்துச் சீட்டு இங்கிருக்கிறது. இனிமேல்தான் நாங்கள் போய் மருந்தை வாங்கப் போகிறோம்.’
காரணம் அவர் இப்படி செய்வதுதான். இங்கேதான் சட்டம் குருடு என்பதை நான் பார்த்தேன். அவர் சட்டவிரோதமாக எதையுமே செய்யவில்லை. அவர் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால் மக்களை ஏமாற்றியதாக அவர் இப்போது சிறையிலிருக்கிறார். அவர் யாரையும் ஏமாற்றவில்லை. சிலரை நீண்ட நாள் வாழவைக்க உதவியது ஏமாற்றுதல் என்றால், மருத்துவ உதவி என்பது என்ன?
மனித இனம் இருப்பதால், மருந்து முழுமையான, திடமான, நூறு சதவிகித குறிக்கோள் கொண்ட விஞ்ஞானமாகவே முடியாது. அதனால்தான், ஆயுர்வேதா, ஹோமியோபதி, இயற்கை வைத்தியம், அக்குபஞ்சர் என்று பலப்பல மருத்துவப் பள்ளிகள் உள்ளன. எல்லோருமே உதவுகிறார்கள். இப்போது ஹோமியோபதி என்பது சாதாரண சர்க்கரை மாத்திரைதான். ஆனாலும் அது உதவுகிறது. மக்கள் நம்புகிறார்களா என்பதுதான் முக்கியம். இயற்கை வைத்தியத்தில் பல பேர் பைத்தியமாக இருக்கிறார்கள். இயற்கை வைத்தியத்தைத் தவிர வேறு எதுவுமே அவர்களைக் காப்பாற்றாது. ஆனால் அதற்கும் நோய்க்கும் எந்தத் தொடர்புமில்லை.
என்னுடைய பேராசிரியர் ஒருவர் இயற்கை வைத்தியத்தில் பைத்தியமே கொண்டிருந்தார். எந்தப் பிரச்னையானாலும் வயிற்றில் ஒரு மண் மூட்டை. அவரைப் பார்த்து ரசிப்பதற்காகவே அங்கே போவேன். அது ஒரு நல்ல ஓய்வாக இருக்கும். அவர் நல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஓர் அழகான குளியல் அறை ஷவர். எந்தப் பிரச்னையுமில்லாமல் போய் ‘எனக்கு மைக்ரேய்ன் தலைவலி’ என்பேன்.
உடனே அவர், “ஒன்றும் கவலைப்படாதே. ஒரு மூட்டை மண்ணை வயிற்றில் கட்டிக் கொள்.” இப்போது இந்த வயிற்றில் கட்டிய மண் மூட்டை ஒன்றும் மைக்ரேய்னுக்கு உதவப் போவதில்லை. ஆனால் அது எனக்கு உதவியது. காரணம் எனக்கு மைக்ரேய்ன் இல்லை. ஒரு மண் குளியல், குளியல் தொட்டி, அதுவும் நீங்கள் அந்த மண் சேற்றில் மூழ்கிப் போவீர்கள். உங்கள் தலை மட்டும் வெளியே இருக்கும். அது சௌகரியமாக, குளிர்ச்சியாக இருக்கும். உடனே அதை உணர்ந்து கொண்ட அவர், “மறுபடியும், மறுபடியும் புதிய நோய்களுடன் இங்கு வா.” நான் சொன்னேன், “உண்மைதான் என்னிடம் இயற்கை வைத்தியத்தைப் பற்றி ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தப் புத்தகத்திலிருந்து எனக்கு நோய்கள் கிடைக்கின்றன. பிறகு நான் உங்கள் இடத்தில் வருகிறேன். முதலில் நான் படிக்கிறேன். பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்கிறேன். அது எனக்கு செய்யப்பட வேண்டுமென்றால் நான் அந்த நோயை வரவழைத்துக் கொள்வேன். இல்லையென்றால் தேவையில்லாமல் சேற்றில் எதற்கு அரை மணி நேரம்?”
உடனே அவர், “அப்படியானால் நீ என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தாயா?” என்று வினவினார்.
நான் சொன்னேன், “நான் உங்களை ஏமாற்றவில்லை. நாங்கள் உங்களின் முக்கியமான நோயாளி அல்ல. பல்கலைக்கழகத்தில் எல்லோரும் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். நான் ஒருவன்தான் உங்களை ஆதரிக்கிறேன். மற்றவர்கள் இங்கு வருவது கூட, நான் இங்கு வருவதைப் பார்த்துத்தான். காரணம் நான் என் மைக்ரேய்ன் மறைந்துவிட்டது என்று சொன்னேன்.”
உடனே அவர், “கடவுளே! எனக்கு இப்போது மைக்ரேய்ன். நீ போ” என்று அலறினார்.
மக்கள் என்னிடம் கோபப்படுவதுண்டு. என்னிடம் சொல்வார்கள், “என் மைக்ரேய்ன் போவதற்குப் பதிலாக இன்னும் அதிகமாகிவிட்டது. காரணம் குளிர்ந்த வயிறு மைக்ரேய்னுக்கு உதவாது.”
உடனே நான் சொல்வேன், “உன் அமைப்பு வேறு மாதிரியாக வேலை செய்கிறது. என் அமைப்பில் அது வேலை செய்கிறது.”
ஹோமியோபதிதான் சரியான மருந்து என்று நம்புகிற பைத்தியங்கள் உண்டு. மற்ற மருந்துகள் எல்லாமே அவர்களுக்கு ஆபத்தானவை. குறிப்பாக ஆங்கில மருத்துவம் அவர்களுக்கு விஷம். நீங்கள் ஒரு ஹோமியோபதியிடம் செல்லுங்கள். முதல் விஷயமாக அவர் உங்களுடைய முழு சரித்திரத்தையும் பிறப்பிலிருந்து கேட்பார். இப்போது உங்களுக்குத் தலைவலி.
ஒரு ஹோமியோபதி மருத்துவர் எனக்குப் பக்கத்தில் இருந்தார். என் தந்தை எப்போது என்னைப் பார்க்க வந்தாலும், உடனே அவரை அந்த ஹோமியோபதியிடம் அழைத்துச் செல்வேன். அந்த ஹோமியோபதி என்னிடம், “நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், உன் தந்தையை அழைத்துக்கொண்டு வராதே. அவர் மூன்று தலைமுறைகளுக்குப் பின்னாலிருந்து ஆரம்பிக்கிறார். அதாவது அவரது தாத்தாவிற்கு ஒரு நோயிருந்ததாம்…” என்று தழுதழுப்பார்.
நான் சொன்னேன், “அவரும் கூட ஒரு ஹோமியோபதி. ஆழமாக வேர்களுக்குள் போகிறாரே?”
உடனே அவர், “ஆனால் அவர் என் நேரத்தை வீணடிக்கிறார். நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவருக்கு வெறும் தலைவலிதான். அவர் தாத்தா, அவருக்கு இருந்த நோய்கள். அவரது அப்பா, அவருக்கு இருந்த நோய்கள். அதற்குப் பிறகுதான் விஷயத்திற்கே வருகிறார். அவரிடம் வருவதற்குள் ஒரு நாளே முடிந்து விடுகிறது. என் மற்ற நோயாளிகள் போய்விடுகிறார்கள். அவர் குழந்தையிலிருந்து என்னவெல்லாம் நோயில் அவதிப்பட்டிருக்கிறார் என்பதை சொல்ல, நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கடைசியாக தலைவலிக்கு வருகிறார்.
அடக் கடவுளே, இதை முதலிலேயே சொல்லக்கூடாதா? உடனே அவர், “நீ ஒரு ஹோமியோபதி, நான் ஒரு ஹோமியோபதி. உனக்கு முழு நிலைமையையும் சொல்ல வேண்டாமா?”
முதல் விஷயமாக அவர்கள் கேட்பதே உங்கள் எல்லா வியாதிகளையும் பற்றித்தான். காரணம் எல்லா நோய்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. உங்கள் முழு வாழ்க்கையும் ஒரு தனி முழுமை என்று அவர்கள் நம்புவதுதான். உங்களுக்குத் தலைவலியா, கால்வலியா என்பதெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. அவையெல்லாம் ஒரே உடலின் பகுதிகள். அந்த மருத்துவர் புரிந்து கொள்ள அவருக்கு எல்லாமே தெரிந்தாக வேண்டும். ஹோமியோபதி நீங்கள் என்ன ஆங்கில மருந்தை எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்பார்.
காரணம் அதுதான் உன் நோய்க்கு அடிப்படைக் காரணம். எல்லா ஆங்கில மருந்துகளுமே விஷம் தான். இதுதான் இயற்கை வைத்தியரின் எண்ணமும் கூட. ஆங்கில மருந்து அலோபதியெல்லாமே விஷம்தான். அதனால் முதலில் நீ பட்டினி கிடக்க வேண்டும். பிறகு பேதி மருந்து- உன்னுடைய ஆங்கில மருந்தைச் சுத்தப்படுத்த. நீ ஆங்கில மருந்திலிருந்து சுத்தமாக வேண்டும்…
மனிதன் அகம் சார்ந்தவன். ஒரு நோயாளி மருத்துவரை நேசித்தால் தண்ணீர்கூட மருந்துதான். ஒரு நோயாளி மருத்துவரை வெறுத்தால் எந்த மருந்தும் உதவாது. நோயாளி ‘இந்த மருத்துவர் ஒரு மாதிரி’ என்று நினைத்தால் அதுதான் வழக்கமான மருத்துவர்களின் இயல்பு. காரணம் அவர்களும் மனிதர்கள்தானே. நாள் முழுதும் நோயாளியையே பார்த்துக் கொண்டிருக்கிறார். நாள் முழுக்க யாரோ சாகிறார்கள். அவர்களின் உணர்ச்சிகளிற்கு, நெகிழ்விற்கு, மனிதாபிமானத்திற்குத் திரை போட்டுக் கொள்கிறார்கள். இது அவர்களின் மருந்தின் திறனைத் தடுக்கிறது. அது ஒரு ரோபோ- அதாவது, ஒரு மனித இயந்திரத்தைப் போல செயல்படுகிறது. ஏதோ ஓர் இயந்திரம் உங்களுக்கு மருந்துகளைக் கொடுப்பதைப் போல!
ஒன்று மட்டும் நிச்சயம். மருந்து நிச்சயமாக முழுவதும் குறிக்கோள் கொண்டதாக இருக்கவே முடியாது. அதை ஒரு முழுமையான இலக்கை நோக்கிச் செலுத்துவதுதான். இன்றுவரையில் இதுதான் மருத்துவ விஞ்ஞானத்தின் முயற்சி.
ஒரு புதுவித சிகிச்சை அந்திக்கால சிகிச்சை( placebo) இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்திக்காலம் என்பது போலி, ஒரு பொய்யான மருந்து, அதில் எந்த மருத்துவத் தன்மையும் கிடையாது. ஆனால் அதை ஒரு மாதிரி நோயாளிக்குக் கொடுக்கிறார்கள். அவரும் அதை ஒரு மருந்து என்று நினைக்கிறார். நோயாளி மட்டுமல்ல, மருத்துவரும் கூட அதை மருந்து என்று நினைக்கிறார். இல்லையென்றால் அவரது பாவனையே காட்டிக்கொடுத்து உண்மையை வெளிப்படுத்திவிடும். மருத்துவரையே ஓர் அறியாமையில் வைத்திருக்கிறார்கள். ஊசி போட வெறும் தண்ணீரைக் கொடுக்கிறார்கள். அல்லது ஒரு சர்க்கரை மாத்திரையை, ஒரு மருந்தின் முத்திரை பெயர்களோடு ஏதோ உண்மையான மருந்தைப் போல கொடுக்கிறார்கள். மருத்துவர் அதை மருந்து என்று நினைக்கிறார். நோயாளியும் அதை மருந்து என்று நினைக்கிறார். என்ன அதிசயமென்றால் அது வேலை செய்கிறது. ஆனால் அதில் மருந்தே இல்லை. நோயாளி குணமடைகிறார். மருத்துவர் அது மருந்து என்று நம்புகிறபோது அதுவே ஒரு சூழலை உருவாக்குகிறது. ஒரு மனோதத்துவம், ஒரு மனோவசியம், அந்த மருத்துவமனையில் அமைப்பு இதை உருவாக்குகிறது. நோயாளிக்குத் தன் நோய் விலக வேண்டும். ஒரு புகழ் பெற்ற மருத்துவர் கொடுக்கும்போது அது விலகித்தான் ஆகவேண்டும். அது மருந்தா இல்லையா என்பது பிரச்னையே அல்ல.
ஒன்று தெரிந்து விட்டது. அது மருந்தோ இல்லையோ இரண்டுமே ஒரு விகிதாசாரத்தில்தான் வேலை செய்கிறது. எழுபது சதவிகித நோயாளிகள் மருந்தில், உண்மையான மருந்தில் குணமடைகிறார்கள் என்றால், எழுபது சதவிகிதம் பேர் இந்த போலி மருந்துகள் மூலமாகக் குணமடைகிறார்கள். இது மருத்துவ உலகில் ஒரு கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. என்னதான் நடக்கிறது?
உண்மையில் இதுதான் நடக்கிறது. முதலில் ஒரு நோயை உருவாக்குகிறார்கள். அது மனம் தொடர்பானது. இரண்டாவதாக, மனம் அது குணமாகும் என்று உறுதிபடும்போது, அது குணமாகிறது. அதனால்தான் மருத்துவரின் கட்டணம் அதிகமாகாவிட்டால் உன் நோய் குணமாகப் போவதில்லை. கட்டணம் அதிகமாகும்போது, மருத்துவம் நன்றாகவே உள்ளது. மருத்துவருக்கு அதிக கட்டணம் கொடுத்து, உங்கள் வளத்தையே கொடுக்கும்போது, பிறகு அது உங்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது இலவசமாக வரும்போது, அது வேலை செய்வதைப் பற்றி யார் நினைக்கிறார்கள். “அது வேலை செய்தால் சரி, செய்யாவிட்டாலும் பரவாயில்லை. காரணம் நாம் அதற்காக ஒன்றும் செலவழிக்கவில்லையே.” நீங்கள் செலவு செய்யும்போதுதான் அது வேலை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். வேலை செய்கிறது.
புத்தர் மனம் ஒரு மந்திரவாதி என்கிறார். அது நோயை உருவாக்குகிறது. அதுவே அதற்கு நிவாரணமும் தேடுகிறது. மனம்தான் எல்லா மாயைகளையும் உருவாக்குகிறது. அழகு, அருவருப்பு, வெற்றி, தோல்வி, வளம், வறுமை என ஒவ்வொன்றையும் மனம் உருவாக்கிக் கொண்டே போகிறது. அந்த எண்ணம் உன் மனதில் தங்கியவுடன் உன் முழு வாழ்க்கையின் சக்தியே அதை உண்மையில் உருவாக்கச் செயல்படுகிறது. ஒவ்வோர் எண்ணமும் ஒரு விஷயமாகிறது. எல்லாமே முதலில் ஓர் எண்ணம்; அவ்வளவுதான். நீங்கள் ஒரு வகை மனோவசியத்தில் இருக்கிறீர்கள். புத்தர் இந்த மனோவசியத்தை உடைக்க வேண்டுமென்கிறார். வேறு எந்த மதமும் இந்த வசியத்தை உடைக்க கடுமையாக முயலவில்லை. மனிதனை மனோவசிய மீட்பு செய்ய வேண்டும். எல்லாமே மனம்தான் என்கிற விழிப்புணர்வு மனிதனுக்குள் வரச்செய்ய வேண்டும். வலி, ஆனந்தம் இரண்டும். பிறப்பு இறப்பு இரண்டும். எல்லாமே மனம்தான். இதை முழுமையாகப் பார்த்து விட்டால், அந்த மந்திரவாதி மறைகிறான். பிறகு உண்மைதான் எஞ்சியிருக்கும். அந்த உண்மை விடுதலையடைகிறது.
உலகத்தில் இன்று உருவாக்கப்பட்டுள்ள எல்லா மருத்துவங்களுமே- ஹோமியோபதி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர்- அலோபதியைத் தவிர வேறு யாருமே மனிதனின் உடல், மனம் என்கிற இயற்கையான உள்ளார்ந்த செயல்பாடுகளை உணரவில்லை. அலோபதியைத் தவிர என்கிறேன். காரணம் மற்றவை சில சமயங்களில் உதவிகரமாக இருக்கும் ஆனால் அவை விஞ்ஞான பூர்வமாக இல்லை. மற்றவை சின்ன அளவில் இல்லை. அவர்கள் செய்யும் உதவி மகத்தானது.
எழுபது சதவிகித விஷயங்களில் ஆயுர்வேதம் வெற்றிகரமாக உள்ளது. அக்குபஞ்சர் வெற்றிகரமானதுதான். ஹோமியோபதி ஜெயிக்கலாம். இயற்கை வைத்தியம் செயல்படலாம். ஆனால் அந்த எழுபது சதவிகிதத்தை மறக்காதீர்கள். அதற்கு மேலில்லை. காரணம் எழுபது சதவிகித நோய்கள் போலியானவை. அது உங்கள் மனதில் மட்டுமே இருக்கிறது. அது இல்லவேயில்லை. அதனால்தான் உங்களுக்கு உண்மையான மருந்து தேவைப்படுவதில்லை. எந்த போலியும் போதுமானது. எழுபது சதவிகிதம் என்பது குறைவானதல்ல. அதனால் இந்த எல்லா வைத்திய முறைகளும் உலகத்தை விட்டு மறையக்கூடாது என்கிறேன். அதை அங்கீகரிக்க வேண்டுமென்கிறேன். காரணம் எழுபது சதவிகிதம் என்பது மிகப்பெரிய சதவிகிதம்.
இதில் வினோதம் என்னவென்றால், இந்த எழுபது சதவிகித நோய்கள் அலோபதிக்கு மிகவும் கடுமையானது. அலோபதிதான் சிக்கலில் இருப்பதை உணர்கிறது. நோயில்லாத மனிதனை, ஆனால் தனக்கு நோயிருப்பதாக நினைக்கிற மனிதனை எப்படிக் கையாளுவது? அந்த மாதிரி மனிதனுக்கு உதவி செய்ய அலோபதியினால்- அதாவது, ஆங்கில மருந்தினால் முடியாது. அதனால் மீதமுள்ள முப்பது சதவிகிதத்திற்குத்தான் அலோபதியின் உதவி தேவை. இது ஒரு வினோதமான உலகம்.
முப்பது சதவிகிதம் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை. மீதமுள்ள எழுபது சதவிகிதம் என்பது ஏனோதானோ அணுகுமுறை- மேலெழுந்தவாரியான அணுகுமுறை உண்மையில் எந்த மாறுதலையும் தராது. ஆனால் அது உதவுகிறது. அலோபதியின் அனேகமான விஞ்ஞான அணுகுமுறையெல்லாமே இயற்கையை ஆழமாகப் புரிந்து கொள்பவைதான். அதனால்தான் உடலுக்கு அதற்கே உரிய எதிர்ப்புச் சக்தி இருக்கிறது.
இந்த உண்மையினால், இயற்கை வைத்தியம் அலோபதியை கண்டிக்கிறது. அலோபதி நோயாளிகள் மீது கிருமிகளைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறது. காரணம் அலோபதியின் புரிந்து கொள்ளுதல் என்பது ஒரு கிருமியைச் செலுத்திவிட்டால், அது உடலில் எதிர் சக்திகளை உருவாக்கும். அது உடனே சண்டை போடத் துவங்கும். அதற்கென்று ஓர் எதிர்ப்பு சக்தி உருவாகும். உடனே முழு உடலுக்கும் அந்த நோயை அழிக்க வேண்டுமென்கிற ஓர் அவசர அழைப்பு வரும். இயற்கை வைத்தியம் இதைக் கண்டிக்கிறது. நோய்கள் மூலமாக மக்களுக்கு விஷம் கொடுக்கிறீர்கள் என்கிறது. நீங்கள் நோயை எடுக்க வேண்டும், அதற்குத்தான் நீங்கள் பதிலாக விஷத்தனமான கிருமிகளை மக்கள் உடலுக்குள் செலுத்துகிறீர்கள்.
நீங்கள் நம்ப முடியாத வினோத முறைகளில், உங்களைப் பட்டினி கிடக்க வைத்து உங்களைச் சுத்தம் செய்கிறது இயற்கை வைத்தியம். ஆனால் உண்மையில் நோயில் அவதிப்படாத மக்களுக்கு மட்டுமே அது உதவ முடியும்.
அத்தியாயம் - 2
இந்த வைத்தியம் மற்றும் அந்த வைத்தியம்
யோக விஞ்ஞானம் மனிதனுக்கு ஓர் உடல் அல்ல. பலவிதமான உடல்கள் இருப்பதாகக் கருதுகிறது என்று எனக்குப் புரிகிறது. அப்படியானால், வெவ்வேறு தனிநபர்கள் மீது ஒரே மாதிரியான மருந்து, இன்னொரு மருந்தை விட திறமையாக நோய் துவங்கிய இடத்திலிருந்து வேலை செய்யும் என்பதைப் பின்பற்றுகிறதா?
மனித விஞ்ஞானம் என்பது இதுவரையில் இல்லை. பதஞ்சலியின் யோகாதான் இதுவரையில் எடுத்த முயற்சிகளில் இந்த இடத்தை நெருங்க முயற்சி செய்திருக்கிறது. அவர் உடலை ஐந்து படிவங்களாக அல்லது ஐந்து உடல்களாகப் பிரித்தார். உனக்கு ஓர் உடல் அல்ல, ஐந்து உடல்கள். அந்த ஐந்து உடல்களுக்குப் பின்னால் உன் இருப்பு. இதேதான் மனோதத்துவத்திலும், மருந்திலும் நடந்திருக்கிறது. அலோபதி மனித உடலை மட்டுமே நம்புகிறது. முழு உடல். அது ஒருவரின் நடத்தை குறித்ததற்கு இணையானது. அலோபதிதான் ஒட்டுமொத்த மருந்து. அதனால்தான் அது விஞ்ஞான பூர்வமானதாக இருக்கிறது. காரணம் விஞ்ஞானக் கருவிகள்தான் மொத்த விஷயங்களையும் பார்க்கும். உள்ளே ஆழமாகப் போகும்.
சீன முறையான அக்குபஞ்சர் இன்னொரு படிவம் அதிகமாகப் போகும். அது முக்கியமான உடலான பிராணமயகாஸிற்குள் செல்லும். உடலில் ஏதாவது கோளாறு என்றால், அக்குபஞ்சர் உடலைத் தொடவே கூடாது. அது உடலின் முக்கிய இடத்தைத்தான் தொடும். அது உயிரியல் சக்தியில், உயிரியற் பொருளில் வேலை செய்ய முயலும். அது அங்கேதான் எங்கோ தங்கும். உடனே மொத்த உடலும் நன்றாக வேலை செய்யத் துவங்கிவிடும். மைய உடலில் ஏதாவது கோளாறு என்றால், அலோபதி உடலில், மொத்த உடலில்தான் வேலை செய்யும். பார்க்கப் போனால், அலோபதிக்கு அது ஒரு கடினமான விஷயம். அக்குபஞ்சருக்கு அது மிக சாதாரண வேலை. அதற்கு சுலபம். காரணம் மைய உடல் என்பது, உடலுக்குச் சற்று மேலானது. அந்த மைய உடலை சரிசெய்துவிட்டால், உடல் அதைத் தானாகவே பின்பற்றும். காரணம் அதன் வரைபடம் மைய உடலில்தான் உள்ளது. மைய உடலின் செயல் வடிவம்தான் உடல்.
இப்போது மௌ்ள மௌ்ள அக்குபஞ்சருக்கு மதிப்பு கூடிக்கொண்டு வருகிறது. காரணம் அது ஒரு நுண்ணிய புகைப்படக்கருவி சோவியத் ரஸ்யாவில், கிர்லான் புகைப்படக் கருவி உடலில் எழுநூறு மைய புள்ளிகளைக் கண்டிருக்கிறது. இதைத்தான் அக்குபஞ்சர் நிபுணர்கள் ஐயாயிரம் வருடத்திற்கு முன்பிலிருந்து யூகித்து வந்திருக்கிறார்கள். ஆனால் உடலின் மையப் பகுதிகளைக் கண்டறிய அவர்களிடம் கருவிகள் இல்லை. ஆனால் மௌ்ள மௌ்ள பல நூற்றாண்டுகளாக முயன்று தோற்று அவர்கள் எழுநூறு புள்ளிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்போது கிர்லான் விஞ்ஞான கருவி மூலமாக எழுநூறு புள்ளிகளை கண்டுபிடித்திருக்கிறது. கிர்லான் புகைப்படங்கள் ஒன்றை நிரூபித்திருக்கிறது. மையத்தை உடல் ரீதியாக மாற்றுவதென்பது அபத்தம் என்பதுதான் அது. அது வேலைக்காரனை மாற்றுவதன் மூலமாக எஜமானனையே மாற்ற முயல்வது மாதிரி. வேலைக்காரனை மாற்ற வேண்டுமென்றால், எஜமானனையே மாற்று. உடனே வேலைக்காரனும் பின் தொடர்வான். ஒவ்வொரு வீரனையும் மாற்றுவதற்குப் பதிலாக தளபதியை மாற்றிவிடு. உடலில் பல லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள். உயிரணுக்கள் சாதாரணமாக ஓர் ஒழுங்கில், ஓர் உத்தரவில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். உத்தரவிடும் தளபதியை மாற்றுங்கள்; முழு உடல் அமைப்பும் மாறிவிடும்.
ஹோமியோபதி இன்னும் சற்று ஆழமாகப் போகும் அது மனோமாயாகாவில் வேலை செய்யும். ஹோமியோபதியைக் கண்டுபிடித்தவர் ““சாமுவேல் ஹானிமான்,“ இதுவரையில் கண்டுபிடிக்காத ஒன்றைக் கண்டுபிடித்தார். சின்ன அளவிலான மருந்து. அது ஆழமாகப் போகும். இந்த முறையில் தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்திற்கு ‘வீரியப்படுத்துதல்’ என்றார். அது மருந்தின் அளவைக் குறைத்துக்கொண்டே இருக்கும். அவர் ஒரு குறிப்பிட்ட அளவை எடுத்துக்கொண்டு அதில் பத்து மடங்கு பால் அல்லது தண்ணீருடன் கலப்பார். ஒரு பங்கு மருந்து, அதில் ஒன்பது ப ங்கு தண்ணீர். அதைக் கலப்பார். மறுபடியும் இந்தப் புதிய திரவத்தை எடுப்பார், மறுபடியும் ஒன்பது மடங்கு தண்ணீர் அல்லது சர்க்கரைப் பாலுடன் கலப்பார். இந்த முறையில் செய்து கொண்டேயிருப்பார். மறுபடியும் புதிய திரவத்தை ஒரு பங்கு எடுத்து, ஒன்பது பங்கு தண்ணீருடன் கலப்பார். இப்படி செய்வார் அதன் திறன் கூடும்.
மௌ்ள மௌ்ள அந்த மருந்து அணு அளவிற்கு வரும். மிகச் சிறியதாக இருக்கும். அது வேலை செய்யும் என்பதை நம்பவே முடியாது. அது கண்ணுக்கு தெரியாத மாதிரி இருக்கும். அதுதான் ஹோமியோபதி மருந்தில் எழுதப்பட்டிருக்கும். அதன் வீரியம், பத்து மடங்கு, இருபது மடங்கு, நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு வீரியமிருக்கும். அதிக வீரியம் இருக்கும்போது அதன் அளவு சிறியதாக இருக்கும். பத்தாயிரம் மடங்கு வீரியம், ஆனால் பல லட்சம் அடிப்படை மருந்து அப்படியே இருக்கும். எதுவுமே பயன்படாததைப் போல. அது இல்லாததைப் போலவே இருக்கும். ஆனால் அது மனோமையத்தின் ஆழத்திற்குச் செல்லும். அது உங்கள் மன உடலுக்குள் செல்லும். அக்குபஞ்சரைவிட ஆழமாக ஊடுருவும். அது அணு அளவு, இன்னும் சொல்லப்போனால் அதிலும் பாதி. பிறகும் அது உன் உடலைத் தொடாது. அது உன் மைய உடலைத் தொடாது. அது அப்படியே நுழையும் அது குறைவாக, சின்னதாக இருப்பதால் அதற்கு எந்தத் தடையுமேயில்லை. அது அப்படியே மனோமையத்திற்குள் செல்லும். அது உடல் புத்திக்குள் செல்லும். அங்கிருந்து வேலை செய்யத் துவங்கும். பிராணமையத்தைவிட அதிக அதிகாரம் கொண்ட ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.
இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், இந்த மூன்றின் கூட்டிணைப்பு. மருந்துகளிலே ஏறக்குறைய சரியான கலவை இதுதான்.
மனோவசிய சிகிச்சை அதாவது ஹிப்னாடிஸ முறை இன்னும் ஆழமாக போகும். அது விக்யானமயோகத்தை தொடும். அது நாலாவது உடல். உணர்வின் உடல். அது மருந்தைப் பயன்படுத்தாது. அது எதையுமே பயன்படுத்தாது. அது யோசனையை மட்டுமே பயன்படுத்தும்; அவ்வளவுதான். அது ஒரு யோசனையை உன் மனதிற்குள் விதைக்கும். அதை மிருக காந்த சக்தி என்றழைக்கலாம். உள் ஆற்றலைக் கவரும். மனோவசியப்படுத்தும். அல்லது உங்களுக்கு எது பிடிக்குமோ அது. ஆனால் அது சிந்தனையில் சக்தியால் வேலை செய்கிறது; பொருளின் சக்தியினால் அல்ல. ஹோமியோபதி சிறியதாக இருந்தால் கூட அது பொருளின் சக்தியினால் மட்டுமே இயங்குகிறது. மனோவசிய சிகிச்சை பொருளை விட்டு முற்றிலும் விலகியது. காரணம் எவ்வளவுதான் சிறியதாக இருந்தாலும் அது பொருள். பத்தாயிரம் வீரியம், ஆனாலும் அது பொருளின் வீரியம். இது அப்படியே சிந்தனை சக்திக்குள் குதிக்கிறது. விக்யான்மயோகம். உணர்வுகளின் உடல். உங்கள் உணர்வுகள் ஒரு யோசனையை ஏற்றுக் கொண்டவுடன் அது இயங்கத் துவங்குகிறது.
மனோவசிய சிகிச்சைக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதுதான் எதிர்கால மருந்தாகப் போகிறது. காரணம் உங்கள் எண்ண பாணியை மாற்றினால் உங்கள் மனமும் மாறுகிறது. அந்த மனத்தின் மூலமாக உங்கள் மைய உடல், அந்த மைய உடலின் மூலமாக உங்கள் மொத்த உடலும். பிறகு ஏன் விஷத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். ஏன் உங்கள் மொத்த மருந்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்? ஏன் உங்கள் சிந்தனை சக்தியை வைத்துக்கொண்டு வேலை செய்யக்கூடாது. ஓர் ஊடகத்தின் வழியாக ஒரு மனோவசிய மருத்துவர் வேலை செய்வதை பார்த்திருக்கிறீர்களா? கவனித்ததில்லையென்றால், கவனிப்பது நல்லது. அது உங்களுக்கு ஒரு வகை உள்பார்வையைக் கொடுக்கும்.
நீங்கள் கேட்டிருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம். இந்தியாவில் இது நடக்கிறது. நீங்கள் நெருப்பின் மேல் நடப்பவர்களைக் கவனித்திருக்கிறீர்களா? அது மனோவசிய சிகிச்சையைத் தவிர வேறு எதுவுமில்லை. அவர்களை ஒரு ஆண் சாமியோ அல்லது பெண் சாமியோ பிடித்திருப்பதாக ஓர் எண்ணம். அவர்களை நெருப்பு எரிக்காது. அந்த எண்ணம் போதும். இந்த யோசனை அவர்கள் உடலைக் கட்டுப்படுத்தி அவர்களின் சாதாரண செயல்பாடுகளை மாற்றிவிடும். அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இருபத்து நாலு மணி நேரம் விரதம் இருக்கிறார்கள். நீங்கள் பட்டினி கிடக்கும்போது உங்கள் முழு உடலும் சுத்தமாகிறது. அதில் எந்தக் கழிவும் இல்லை. உங்களுக்கும் மொத்த உடலுக்கும் உள்ள இடைவெளி உடைகிறது. அவர்கள் இருபத்து நாலு மணி நேரம் ஒரு கோயிலிலோ அல்லது மசூதியிலோ இருக்கிறார்கள். பாடுவார்கள், ஆடுவார்கள். கடவுளோடு இசைகிறார்கள். பிறகு ஒரு தருணத்தில் அவர்கள் நெருப்பின் மேல் நடக்கிறார்கள். அவர்கள் ஆடியபடியே வருகிறார்கள். அவர்களைச் சாமி பிடித்துவிட்டது. நெருப்பு நம்மைச் சுடாது என்கிற முழு நம்பிக்கையோடு வருகிறார்கள். அவ்வளவுதான். வேறொன்றுமில்லை. எப்படி இந்த நம்பிக்கையை வரவழைப்பது என்பதுதான் கேள்வி. பிறகு அவர்கள் நெருப்பில் ஆடுகிறார்கள். அந்த நெருப்பு அவர்களைச் சுடுவதில்லை.
பல சமயங்களில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கூட சாமி பிடிக்கும். இது நடந்திருக்கிறது. இருபது பேர் நெருப்பில் நடந்தாலும் அவர்களை நெருப்பு சுடாது. யாரோ உடனே நம்பிக்கை பெறுகிறார்கள். “இவர்களெல்லாம் நடக்கும்போது நான் ஏன் கூடாது?” உடனே அவரும் குதிக்கிறார். அந்த நெருப்பு அவரையும் சுடவில்லை. அந்தத் திடீர் தருணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. சில சமயங்களில் தயாராக இருந்தவர்கள் எரிந்து போய்விடுகிறார்கள். சில சமயங்களில் தயாராக இல்லாத ஒரு பார்வையாளர் நெருப்பில் நடப்பார். அவருக்கு ஒன்றுமாகாது. என்ன நடந்தது? தயாராக இருந்த மக்களுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்திருக்கும். இது நடக்குமா நடக்காதா என்று நினைத்திருக்கக் கூடும். ஒரு சின்ன சந்தேகம் விக்யான்மயோகத்தில் தங்கியிருந்திருக்க வேண்டும். அதாவது, உள்ளுணர்வில். அது முழு நம்பிக்கையின்மை. அதனால் அவர்கள் வந்தார்கள். ஆனால் சந்தேகத்தோடு. அந்தச் சந்தேகத்தினால், உடலுக்கு உயர்ந்த ஆன்மாவிடமிருந்து சாதாரண முறையில் இயங்கத் துவங்கிவிட்டது. அதனால் எரிந்து போனது. அதனால் எல்லா மதங்களும் நம்பிக்கை வை என்கின்றன.
அந்த நம்பிக்கைதான் மனோவசிய சிகிச்சை. அந்த நம்பிக்கை இல்லாமல் உங்கள் முழு இருப்பின் நுண்ணிய பகுதிகளுக்குள் நீங்கள் செல்லவே முடியாது. காரணம் ஒரு சின்ன சந்தேகம், மீண்டும் அது உங்களை மொத்தத்தில் தூக்கி எறியும். விஞ்ஞானம் சந்தேகத்தோடு வேலை செய்கிறது. சந்தேகம்தான் விஞ்ஞானத்தில் முறை. காரணம் விஞ்ஞானம் மொத்தத்தோடு வேலை செய்கிறது. நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா என்பதைப் பற்றி அலோபதி கவலைப்படாது. அவருடைய மருந்தில் நம்பிக்கை வை என்று அவர் சொல்வதில்லை. மருந்தைக் கொடுக்கிறார். அவ்வளவுதான். ஆனால் ஹோமியோபதி நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்கும். காரணம் உங்களுடைய நம்பிக்கை இல்லாவிட்டால் ஹோமியோபதியால் உங்களிடம் வேலை செய்ய க~;டப்படுவார். வசியக்காரர் உங்களை முற்றிலுமாக சரணடையச் சொல்வார். இல்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது.
மதம் என்பது சரணாகதி. மதம் என்பது ஒரு மனோவசிய சிகிச்சை. ஆனாலும், இன்னொரு உடல் இருக்கிறது. அதுதான் ஆனந்தமயேகாஸ். பேரின்ப உடல். மனோவசிய சிகிச்சை நான்காவது வரை போகும். தியானம் ஐந்தாவது வரை செல்லும். தியானம் அந்த வார்த்தையே அழகானது. காரணம் அதனுடைய வேர் மருந்திலிருந்து வருகிறது. இரண்டும் ஒரே வேரிலிருந்து வருகின்றன. தியானம், மருந்து இரண்டுமே ஒரே வார்த்தையிலிருந்து கிளம்பியவை. அதாவது குணப்படுத்துவது. அது ஆரோக்யப்படுத்தி முழுமையாக்குவதன் மருந்து. ஆழமான அளவில் அது தியானம்.
தியானம் உனக்கு யோசனை கூட சொல்லாது. காரணம் யோசனை என்பது வெளியேயிருந்து வருவது. யாராவதுதான் உங்களுக்கு யோசனை சொல்லவேண்டும். யோசனை என்றால் நீங்கள் யாரையாவது நம்பியிருக்க வேண்டும். அவர்களால் உங்களை உணர்வோடு இருக்கச் செய்ய முடியாது. காரணம் இன்னொருவர் தேவை. ஒரு நிழல் உங்கள் இருப்பின் மீது விழும். தியானம் உங்களை சரியானபடி உணரச் செய்யும். எந்த நிழலுமில்லை. முழு ஒளி, இருட்டேயில்லை. இப்போது யோசனை கூட ஒரு மொத்த விஷயமாகிறது. யாரோ யோசனை சொல்கிறார்கள். அதாவது ஏதோ வெளியிலிருந்து வருகிறது. உச்சகட்ட அலசலில் வெளியிலிருந்து வருவது ஒரு பொருள். சாதாரண பொருள் மட்டுமல்ல, ஆனால் வெளியிலிருந்து வருகிற பொருள். அது நுண்ணிய பொருளாக இருந்தாலும், மனோவசிய சிகிச்சையைப் பொறுத்த வரையில் அது பொருள்தான்.
தியானம் எல்லா உடைமைகளையும், ஆதரவையும் தூக்கிப் போடுகிறது. அதனால்தான் தியானத்தைப் புரிந்து கொள்வது உலகத்திலேயே கடினமானதாக இருக்கிறது. காரணம் எதுவும் மிச்சமில்லை. ஒரு தூய்மையான புரிந்து கொள்ளுதல், ஒரு சாட்சியாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக